Sunday 27 May 2018

ஐங்குறுநூறு - குறிஞ்சி 2

மலையும் மலைச் சார்ந்த இடமுமான குறிஞ்சியில் மற்ற பாடல்களை இப்போது காண்போம்..

குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருளில் குறவர் முக்கியப் பங்கு வகிப்பர். குன்றத்தில் வாழும் குறவன் என்ற பொருளால் குன்றக் குறவன் என்ற சிறுதொடர் பயின்று வரும் பத்துப் பாடல்களின் தொகுதி குன்றக் குறவன் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.


குன்றக் குறவன் புல் வேய் குரம்பை
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி, தோழி! விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்ப்
பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே


மணமுடிக்க பிரிந்துச் சென்ற தலைவன் குறிப்பிட்ட காலம் தோன்றும் முன்னே திரும்பியமைக் கண்ட தோழி மகிழ்ந்து தலைவிக்கு சொல்லியது..,

குன்றக் குறவன் வாழும் புல்லால் வேயப்பட்ட குடிசையை மன்றத்தில் நகரும் மூடுபனி மறைக்கும்.இப்படி மூடுபனி மறைக்கும் நாட்டின் தலைவன் உன் காதலன். அவன் மிகவும் உயர்ந்த பண்புள்ளவன். மணத்துடன் கூடிய பனி மூட்டம் கலந்து குளிர் மிகும் கூதிர் காலம் வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ள உன்னைத் தேடி வந்துவிட்டான்.

குறவனது புல்வேய்குரம்பை மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடனென்றது, பிரிவின்கண் தங்கட்கு வந்த துன்பத்தை இவன் மறைத்தது என்பதாம். வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற் போல வாடை செய்யும் நோய் மறையுமாறு, துன்பம் மறையுமாறு தலைவன் வந்தான் என்றது உள்ளுறையுவமாக கூறப்பட்டுள்ளது.


கேழல் பத்து 


காட்டுப் பன்றியைக் கேழல் என்றும், பன்றி என்றும் குறிப்பிட்டு தலைவன் செயல் அந்தப் பன்றி போல உள்ளதாக உள்ளுறைப் பொருள் வைத்து, அது வாழும் நாட்டை உடையவன் எனக் கூறும் 10 பாடல்கள் இப்பகுதியில் உள்ளன


நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்று கெழு நாடன் தானும்
வந்தனன்; வந்தன்று தோழி! என் நலனே


பொன் நிறத்தில் தினை விளைந்திருக்கும். அதனை மேயும் பன்றி பொன்னை மாற்றுப் பார்க்க உறைக்கும் கட்டளைக் கல் போலத் தோன்றும். அந்தப் பன்றி வாழும் மலை நாட்டை உடையவன் என் காதலன். அவன் இன்று வந்திருக்கிறான். அதனால் என் மேனி பொலிவுடன் திகழ்கிறதுபொன்போன்ற தினையைக் கேழல் மாந்தும் நாடனென்றது தன் நாட்டுவாழும் விலங்குகளும் தமக்கு வேண்டுவன குறைவின்றிப் பெற்று இன்பம் நுகரும் நாடன் என்பது உணர்த்துமாறு வந்தது. தலைவன் வந்ததால் தன் நலனும் வந்தது என்று கூறுகிறாள் தலைவி


குரக்குப் பத்து


குரங்கு/மந்தி வாழும் மலையின் தலைவன் அவன்.குரங்கு வாழ்வது போல் வாழ முயல்கிறான் என்று பேசும் பாடல்கள் பத்து இந்தப் பகுதியில் உள்ளன.


அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர்,
புன்தலை மந்தி வன் பறழ் ஆரும்
நன் மலை நாட! நீ செலின்,
நின் நயத்து உறைவி, என்னினும் கலிழ்மே.


காட்டில் தழைத்திருக்கும் செயலை மரத்தின் தளிர்கள் பவளம் போல் சிவப்பு நிறத்தில் இருக்கும். அந்தத் தளிர்களைப் பெண்குரங்கும், அதன் குட்டியும் உண்ணும். இப்படிப்பட்ட மலையின் தலைவனே, நீ இவளை விட்டுவிட்டுப் பொருள் தேடச் சென்றால் உன்னை விரும்பி வாழும் என் தலைவி நான் அழுவதைக் காட்டிலும் பெரிதும் அழுவாள்.


அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர்,
புன்தலை மந்தி வன் பறழ் ஆரும்


எனறது, இவள் இளமை நலனை நின் பிரிவு கெடுக்கும். நின் பிரிவாற்றாள் தலைவி. எனவே இளமை கழியுமுன்னே மணமுடிப்பாயாக என்பதாம்… 

கிள்ளைப் பத்து.. 

கிள்ளை என்பது கிளியைக் குறிக்கும் சொல். குறிஞ்சித் திணைக் கருப்பொருள்களில் ஒன்றான கிளி இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிள்ளைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

பின் இரும் கூந்தல் நல் நுதல் குறமகள்
மெல் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவனச் சிறுகிளி கடியும் நாட!
வீங்கு வளை நெகிழப் பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே?


பின்னிய அடர்ந்த கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய குறவனின் மகள் தினை மாவை உண்டு, ஐவன நெல்லைப் பாதுக்காக்க தட்டியால் கிளிகளை விரட்டும் நாடவனே, இறுக்கமாக இருந்த இவளுடைய வளையல்கள் இப்பொழுது வழுக்கி விழுகின்றன. இவளை இவ்வாறு துறக்க எப்படி உன்னால் முடிகின்றது?


குறமகள் தினைமாவை உண்டபடி, திணைபுறத்து கிளிகளைக் கடியும் நாட என்றது, இவளும் நீ முன் செய்த தண்ணளியை மனங்கொண்டு தன்னை வருத்தவரும் காமநோயினைப் பிறர் காணாதவாறு, தன் பொறுமையால் காத்து வருகின்றாள் என்பதாம்.


அளியதாமே, செவ் வாய்ப் பைங் கிளி
குன்றக் குறவர் கொய் தினைப் பைங் கால்
இருவி நீள்புனம் கண்டும்.
பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே


சிவந்த வாயை உடைய பச்சைக்கிளி இரங்கத் தக்கது. குன்றக் குரவர் தினையைக் கொய்துகொண்டு சென்றுவிட்டனர். எனினும் அவை கதிர் இல்லாத வெற்றுத் தாள்களின் மேல் அமர்ந்திருக்குன்றன. அவற்றைப் பிரிய முடியாத பேரன்பினவாக உள்ளன. திணை அறுக்கப்பட்டமையால் திணைப்புறம் தலைவியைக் காண வந்த தலைவன் கேட்குமாறு தோழிகூறியது.

மஞ்ஞை பத்து

கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன், எதிர்ந்தனர் கொடையே,
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே.


குறிஞ்சி நிலப் பெண்ணின் கூந்தலைப் போன்று உள்ள தன் அழகிய சிறகுகளை விரித்து ஆடும் மயில்களை உடைய பெரிய மலை நாடன் வந்தான், உன்னைப் பெண் கேட்பதற்கு. நம் குடும்பத்தார் உன்னை அவனுக்குத் தருவதற்குச் சம்மதித்து விட்டார்கள். அழகிய இனிய சொற்களையுடையவளே! பொலிவு அடையட்டும் உன்னுடைய சிறப்பு.

கொடிச்சி கூந்தல் போல மஞ்ஞை சிறகை விரிக்கும் வெற்பன் என்றது, நின் மகிழ்ச்சிக்கு தகுந்தவாறு தமரும் மகிழ்ச்சியோடு அவனுக்கே நின்னை கொடை நேர்ந்தனர் என்பது.


அருமையான இப்பாடல்களை படிக்கும் போதுகுறிஞ்சிக்கோர் கபிலன்என்ற அடைமொழி மிகையல்ல என்பதை உணர முடிகிறதல்லவா
மலையை சற்று கடந்து காட்டினை அடைவோம். முல்லை நிலப் பாடல்களுடன் விரைவில்.


அன்புடன்
உமா 

No comments:

Post a Comment