Friday 22 March 2019

எட்டுத் தொகை நூல்கள் எடுத்துக்காட்டும் தமிழர் பண்பாடு


சென்னைத் துறைமுக நண்பர்கள் வட்டத்தின் ' அணியம்' இதழில் வெளியானது
தமிழர்களின் மாபெரும் செல்வமான சங்க இலக்கியங்கள் என்பன பெரும்பாலும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெங்கீழ் கணக்கு நூல்கள் என பெரும் பிரிவுகளைக் கொண்டது.
இவற்றில் எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
என்ற வெண்பா எட்டுத் தொகை நூல்கள் எவை என அடுக்கிக் காட்டும்.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் அகம், புறம் என்ற இரு பெரும் பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன. அகம் என்பது மக்களின் அன்பும் காதலும் கொண்ட குடும்ப வாழ்வை சொல்வதாகவும், புறம் என்பது கல்வி, போர், வீரம், அறம், அரசாட்சி, வாழ்க்கை முறை என்று மக்களின் சமூக வாழ்க்கையை சொல்வதாகவும் அமைகிறது.
எட்டுத் தொகை நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகநூல்களாகும். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்களாகும். பரிபாடல் அகமும், புறமும் கலந்த நூலாகும்.
இனி இப்பாடல்களில் காணக்கிடைக்கும் பண்பாட்டு கூறுகளை, வாழ்வியல் உண்மைகளை, நெறிகளைப் பார்ப்போம்:
1.  நற்றினை
மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர் 
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப் 
பொன்னுங் கொள்ளார் மன்னர்….
அகப்பொருள் கூறும் நற்றினையில் தலைவனின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாத தலைவியின் கூற்றாக அமைந்த 226ம் பாடல் மிகச் சிறந்த வாழ்வியல் விழுமங்களை நமக்கு காட்டுகிறது.
1.  மருந்து மரமாக இருந்தாலும் அம்மரமே பட்டுப்போகும் அளவுக்கு, அதனிடத்தே உள்ள மருந்துக்காகும் பகுதிகளை எல்லாம் முற்றவும் எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள்
2.  உயர்ந்த தவம் மேற்கொள்வாரும் தம் உடல் நலம் குன்றும் அளவிற்கு தவம் செய்யார்.
3.  தம் நாட்டுக் குடி மக்களின் வளமெல்லாம் முழுவதும் கெட்டு போகும் வண்ணம், அவரிடமுள்ள பொன், பொருளை வரியாக கொள்ளமாட்டார் மன்னர்.
தலைவன் தலைவி பிரிவைக் கூறுமிடத்தும் மக்களும் அரசனும் எவ்வாறு அறம் சார்ந்து வாழ வேண்டும் என்பதைக் கூறுகிறது இப்பாடல். அன்றைய மக்களை வழி நடத்திய இயற்கையோடியைந்த வாழ்க்கை முறையால் இன்றுவரை இவ்வியற்கை வளங்கள் அழியாமல் காக்கப்பட்டன. ஆயின் இன்று பேராசையினால் இயற்கை வளங்களெல்லாம் அழிக்கப் படுவதை எண்ணுகையில் மனம் புண்ணாவது உண்மையே.
‘‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்;
தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’’
 
என்ற நற்றினைப் பாடலில் தை மாதத்தில் நோன்பிருத்தல் காட்டப்பட்டிருக்கிறது. பொங்கல் விழா பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.
2.  குறுந்தொகை
குறுந்திணையிலும் மக்களின் பாண்பாடு மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது. தலைவனைப் பார்த்துத் தலைவி கூறும் கூற்றாக வரும் குறுந்தொகையின் 49ம் பாடலில், இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வரும் பிறவிகளிலும், உன் நெஞ்சினுள் நிறைந்து நிற்கும் காதலி நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சுவைபடக் கூறுகிறாள் தலைவி.
இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என்கணவனை,
யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே
தலைவனுக்கும் தலைவிக்குமான அன்பை எவ்வளவு சிறப்பாக காட்டுகிறது இப்பாடல்! காதலில் இவ்வளவு சிறப்பான பண்பாட்டை இன்று காணமுடியுமா என்றால் அது கேள்விக் குறியே!
3.  ஐங்குறுநூறு
அகம் கூறும் ஐங்குறுநூறில் பண்பாட்டுச் செய்திகள் பல உள்ளன.
….நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
….நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
….விளைக வயலே வருக இரவலர்
தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்றாக வரும் இவ்வரிகள் அக்கால மக்களின் விருந்தோம்பல், ஈகை ஆகிய பண்புகளை அழகாக காட்டுகின்றன. இரவலர்கள் வரவேண்டும். அவர்களுக்கு ஈவதற்கு நெல் நிறைய விளைய வேண்டும் என்று வேண்டுகிறாள் தலைவி. அன்றைய பண்பாட்டை என்னவென்பது.
4.  பதிற்றுப்பத்து
அக்காலச் சேரநாட்டுப் பகுதியில் விளங்கிய பண்பாடு பதிற்றுப்பத்தால் அறியப்படுகின்றது. சேரநாட்டில் அக்காலத்திலேயே வேதநெறிக்கு மதிப்பிருந்தது. அந்தணர்க்கு அந்நாட்டு வேந்தர் மிக மதிப்பளித்தனர். அரசர்கள் தவம் செய்வதால் பெரும் செல்வங்கள் கைகூடும் எனக் கருதினர்.
நின் பணிவு பார்ப்பார்க்கல்லது இல்லை
நின் கண்ணோட்டம் நண்பர்களுக்கு அல்லது இல்லை.
நின் வணக்கம் மகளிர்க்கு அல்லது இல்லை.
நீ சொன்ன சொல் தவறுவது நிலவுலகமே மாறினாலும் இல்லை.
என்று சேர மன்னனைப் புகழும் இப்பாடலிலிருந்து பணிவு, கண்ணோட்டம், மரியாதை, சொன்ன சொல் காத்தல் ஆகிய குணங்கள் போற்றப்பட்டன என்பது அறியமுடிகிறது.
5.  பரிபாடல்
பரிபாடலில் பாண்டி நாட்டுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை அறிய முடிகிறது. கண்ணன், பலதேவன் ஆகிய இருவரையும் அக்காலத்தவர் பெரும்பெயர் இருவர் எனக் கூறினர். மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆகமம் அறிந்த பூசகர் விழா நடத்தினர். அப்போது பெண்கள் தைந்நீராடல் எனப்பெறும் நோன்பை மேற்கொண்டனர். நிலம் மழை பெற்றுக் குளிர்கஎன்று மகளிர் கூறி நீரில் மூழ்கி ஆடும் நீராடல் அம்பா ஆடல் எனப்பட்டது. இவ்வழக்கமே பிற்காலத்தில் பாவை நோன்பாகியிருக்கிறது. இன்றும் மார்கழி திருவாதிரை பூசை நடைபெறுவதை நாமறிவோம்.
6.  கலித்தொகை
கலித்தொகையில் இடம்பெறும் ஏறு தழுவுதல் பற்றிய செய்தி தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்கதாகும். ஏறு தழுவும் இடத்தை ‘தொழு’ என்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள் அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும் 
புல்லாளே ஆய மகள்
 
என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.
ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
அது மட்டும் அல்லாமல்
·        செல்வம் நிலையில்லாதது.
·        யாவர்க்கும் தீங்கு செய்பவன் இறுதியில் கெட்டு ஒழிவான்.
·        கொடைப்பண்பு இல்லாதவனின் செல்வம் அவனைச் சேர்ந்தவரைப் பாதுகாக்காது.
·        நிலவு நாள்தோறும் தேய்வது போல இளமையும் அழகும் தேயும்.
·        நேர்மையற்ற முறையில் தேடிய பொருள் இம்மையிலும் மறுமையிலும் பகையே தரும்.
போன்ற வாழ்வியல் உண்மைகள் காட்டப்பட்டுள்ளன.
7.  அகநானூறு
பண்டைக்காலத் திருமணமுறை, உணவு முறை, வழிபாடு, சிறுவர்களுக்கு ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் முதலிய பண்பாட்டுக் கூறுகளை அகநானூறு வெளியிடுகிறது. மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று திருமண சடங்கு முறை இதில் காட்டப்படுகிறது.
8.  புறநானூறு
புற நானூற்றில் வரும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
…….
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
என்ற அருமையானப் பாடல் அன்றும் இன்றும் என்றும் மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கக்கூடியது..
எல்லா ஊரும் எம் ஊர். எல்லா மக்களும் எம் உறவினரே. நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமையில்லை; வாழ்தல், இன்பமென்று மகிழ்ந்தது இல்லை, வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை, பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால், பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை. பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
இதைவிடச் சிறப்பாக வாழ்வியல் உண்மைகளை யாராலும் எடுத்தியம்ப முடியுமா. அமானுஷ்யங்களை பாடிக்கொண்டிருந்த பிற இலக்கியங்களுக்கு இடையில் அக்காலத்திலேயே மக்களின் வாழ்வை, இன்றும் நிலைத்திருக்கும் வாழ்வியல் உண்மைகளை மிகச் சிறப்பாக பாடிய தமிழரின் பெருமையை என்னவென்பது!.
இன்று இந்நிலை நிலவுகிறதா? வாழ்வியல் உண்மைகள், விழுமங்கள் உணரப்படுகின்றனவா? போற்றப்படுகின்றனவா? வாழ்வில் வெற்றியும் தோல்வியும் எவ்வாறு பார்க்கப்படுகின்றன. நிலையில்லாப் பணமும் பொருளுமே வெற்றியை அளக்கும் கருவியாகி விட்டது. என்றாலும் தமிழர் என்றும் வீழ்ந்ததில்லை. உயர்வோம் என்ற நம்பிக்கையோடு கடமையாற்றுவோம்.

சி. உமா.
பொது நிர்வாகத் துறை.

சங்க காலம் முதல் சம காலம் வரை பெண்கள் நிலை.


சென்னைத் துறைமுகத் தமிழ்ச் சங்கத்தின் 'தன்மரம்' பெண்கள் தின சிறப்பிதழில் வெளியானது

சங்க காலம் முதல் சம காலம் வரை பெண்கள் நிலை.
சி.உமா, பொது நிர்வாகத் துறை

மார்ச் 8 – உலக மகளிர் தினம். 19 ம் நூற்றாண்டில் உலக மகளிர் இணைந்து உரிமைக்காக போராடிய தினம். அவர்களது போராட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, சம உரிமை, சம ஊதியம் போன்றவை. நூறாண்டுகள் கழிந்த பின்னும் ,இந்த இலக்குகள் எட்டப்பட்டனவா என்பது கேள்விக் குறியே!
இக்கட்டுரையில் தமிழகத்தில் சங்க காலம் முதல் சமகாலம் வரை பெண்களின் நிலை பற்றி காண்போம்.


சங்க இலக்கிய காலத்தில்  1446 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இதில் பெண்பாற்புலவர்கள் 32 பேர். ஆண்பாற்புலவர்களுக்கு இணையான இலக்கிய ஆளுமைக் கொண்ட இப்புலவர்கள் சிறந்த பல தனிப்பாடல்கள் மற்றும் தொகுப்புக்களைத் தமிழுக்கு ஈந்திருக்கிறார்கள். என்றாலும் இப் புலவர்களின் இயற்பெயர் எதிலும் குறிப்பிடப்படவில்லை என்பதே ஆய்வாளர்கள் கருத்து. பெண்கள் திறமை மிக்கவர்களாக இருந்தப் போதும் தங்களை முன்னிருத்த அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் எழுதிய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சிறந்த சொற்களைக் கொண்டே அறியப்பட்டனர்.
பொதுவாக சங்க இலக்கிய காலத்தில் பெண்கள் ஆணின் உடைமையாகவே பார்க்கப்பட்டனர். எனவே அவர்களது அழகே முன்னிருத்தப்பட்டு பாடல்கள் புணையப்பட்டன. என்றாலும் சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களும் அகப் பொருள் பற்றிச் சுதந்திரமாகப் பாடியமை காணமுடிகிறது
பின்னர் தோன்றிய பக்தி இலக்கிய காலத்தில் பல பெண்பாற் புலவர்கள் இறைவனைப் பாடி இருக்கின்றனர். ஒளவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர். அக்கால பெண்பால் கவிகளின் பாடுபொருள் இயற்கை, இறைபக்தி, நன்னெறி கூறுகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. சங்க இலக்கிய காலத்தைப் போன்று பிற்காலத்தில் பெண்கள் சுதந்திரமாக தன் உள்ளத்தைப் பாடுவதை, அகப் பொருள் இலக்கியம் படைப்பதை ஏற்றுக் கொள்ளாத நிலையையே காணமுடிகிறது. அக்காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையில் பெண்களின் நிலை பலவகையிலும் மாறிக் கொண்டே வந்திருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது.
நவீன இலக்கிய காலத்தில் சமூகம், வாழ்வியல் நெறி, பெண்ணியம், காதல், இறை வழிபாடு என்று பல தளங்களிலும் பெண் கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். இலக்கியம் படைக்கின்றனர். என்றாலும் பெண் படைப்பாளிகள் மிகச் சிலராகவே இருக்கின்றனர். அவர்களுக்கான அங்கீகாரமும் போராடி பெறவேண்டிய நிலையே காணப்படுகிறது.
சங்க கால சமூகத்தில் பெண்கள் வீட்டு வேலை, கதிரறுத்தல், திணைப் புலம் காத்தல் போன்று குடும்பம் சார்ந்த தொழில்களில் மட்டுமே ஈடுபட்டநிலை இருந்தது. பெண்கள் பொருளீட்ட வெளியில் செல்லும் நிலைக் காணப்படவில்லை. சமூக வளர்ச்சியில் பங்கேற்றதையும் காணமுடியவில்லை.
இந்நிலை சிறிது சிறிதாக மாறி 18ம் நூற்றாண்டில் வேலு நாச்சியார் போன்ற பெண்கள் வீரத்துடன் சமூக நலனுக்காக வெளிவந்ததைக் காணமுடிகிறது. சுதந்திர போராட்ட காலத்திலும் ஆண்களோடு பல பெண்களும் வீரத்தோடு பங்கேற்றதை சரித்திரம் நமக்குச் சொல்லும்.
தற்போது பெண்கள் கல்வி அறிவு பெற்று ஆட்சித்துறை, தொழில்துறை, அறிவியல் துறை, மருத்துவத்துறை, சட்டத்துறை, காவல்துறை, இலக்கியத்துறை போன்ற பல துறைகளில் பணியாற்றுவதுடன் வெற்றிநடை போடுவதையும் காண்கிறோம்.
இன்றைய பெண்கள் தொழில்செய்வதில் வல்லவர்களாக திகழ்வதோடு, தொழிற்சாலைகள் தொடங்கி அதில் பலருக்கு வேலை வாய்ப்பளிப்பதையும் காணமுடிகிறது. கிராமப்புற மகளிர் கூட சுயஉதவிக்குழு உருவாக்கி அதன் வழியாக சேமித்த தொகையுடன் அரசிடமிருந்து கடன் உதவி பெற்று சிறுசிறு கைத்தொழில்களை செய்து மேன்மையுடன் வாழ்கின்றனர். இன்றைய பெண்கள் வீட்டு பொறுப்போடு கூட வேலை ஒன்றை தேடி அதையும் சிறப்பாக செய்து வருகிறார்கள். விளையாட்டு துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். வன்மைத்தன்மையுடைய கராத்தே, ஜிம்னாஸ்டிக், குத்துச் சண்டை போன்றவைகளில் ஈடுபட்டு நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்குமளவு முன்னேறி வருகிறார்கள். ஆண்களுக்கு இருக்கும் சகலவிதமான திறமைகளும் பெண்களுக்கும் உண்டு என்பதற்கு ஏற்ப காவல்துறையிலும் பலர் உயர்பதவிகளில் இருந்து சிறப்பான சாதனைகளை செய்து பணியாற்றி வருகிறார்கள். ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்றிருந்த பல வேலைகள் இன்று பெண்களால் செய்யப்படுகின்றன.  
புதுமைப்பெண்களாக, புரட்சி பெண்களாக, துப்பாக்கி ஏந்தி போரிடும் வீராங்கனைகளாக, மருத்துவராக, அறிவூட்டும் ஆசானாக, ஒப்பற்ற இல்லத்தலைவியாக, விண்வெளி ஆராய்ச்சியாளராக, தகவல் தொடர்பு வல்லுனர்களாக என அனைத்துத்துறைகளிலும் பெண்கள் இன்று சிறந்து விளங்குகிறார்கள்.

இந்த நூற்றாண்டில் கிராம பஞ்சாயத்துக்களில், நகர, மாநகராட்சிகளில் உறுப்பினராகி மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார்கள். மேலும் அரசியலில் ஈடுபட்டு பல உயர்பதவிகளில் பொறுப்பேற்று அரிய சேவை செய்து வருகின்றனர்.
இப்படி வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வளர்ந்து காட்டிய பெண்களை இச் சமூகம் எவ்வாறு பார்கின்றது.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்..,”
இது மகாகவி பாரதியின் வரிகள் மட்டுமல்ல… அக்கவிஞனின் கனவு….!
பட்டங்கள்  பெருமளவு  பெண்கள் கைகளில் வசப்பட்டிருப்பது மகிழ்ச்சியே…! ஆனால் சட்டங்கள்  இயற்றும் இடத்தில்  பெண்கள்  இருக்கிறார்களா  என்பது கேள்விக் குறியே? நம் பெண்கள் பெற்ற பட்டங்களும், எத்தனை பேருக்கு சுய சிந்தனையையும், ஆளுமையும், தனித்துவத்தையும் கொடுத்திருக்கிறது என்றால் வெகு சிலரே என்பது வருத்தத்திற்குரியதே…! பெண்களுக்காக ஒதுக்கப் பட்ட இடங்களிலும் பெயருக்கு பெண்களை நிறுத்தி ஆண்களே ஆளுமைச் செய்யும் நிலையைத்தான் அரசியலில் மட்டுமல்லாது குடும்ப நிர்வாகம் மற்றும் எல்லா துறைகளிலும் இன்று நாம் காண்கிறோம். அலுவலகங்களில் உயர் பதவிகளில் பெண்களின் பங்கு மிகக் குறைவே.
இன்றும் மகளீர் தின கொண்டாட்டங்கள் மீண்டும் மீண்டும் பெண்களை அழகுடன் சம்பந்தப் படுத்தியே அமைவது வருத்தத்திற்குரியது. அவர்களின் உள் வலிமையை இன்றும் கொண்டாடுவதில்லை என்பதே நிலை.
நகரத்தில் அனைத்து உரிமைகளையும்  பெற்ற ஒரு  பெண்  மகளிர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கையில்,  எங்கோ ஒரு மூலையில் கூலி வேலை செய்து கொண்டிருக்கும்  கிராமப்பெண்ணிற்கு மகளிர் தினம் என்றால் என்ன என்றே தெரியாதே?   நம்மில் பெரும்பாலான பெண்கள் இன்னமும் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில்தானே உள்ளனர்…!
இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல கோணங்களில் பெருகி இருப்பதைக் காணமுடிகிறது அல்லவா? இன்னமும் பெண்கள் வலிமையற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கும் நிலை இன்றும் அதிகம் காணப்படவில்லை.
இந்நிலை மாறவேண்டும். முன்னேற்றம் என்பது ஒரு சார்பாக இல்லாமல் அனைத்து தர பெண்களும் முன்னேற வாய்ப்புகளும் அவர்களுக்கான பாதுகாப்பும், சமுகத்தில் சம உரிமையும் காணவேண்டும். இதற்கான விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவேண்டும். இது முக்கியமாக சமூகத்தில் முன்னேறிய பெண்களின் தலையாயக் கடமை. அப்படிப்பட்ட ஒரு நிலை கண்டால் மட்டுமே மார்ச் 8 கொண்டாட்ட நாளாக இருக்கும். அதுவரை போராட்ட தினமே.
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
****************