Saturday 28 July 2018

பதிற்றுப் பத்து - ஆறாம் பத்து முதல் மற்ற தொகுப்புகள்


ஆறாம் பத்து

ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன்  ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். ஆரியர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். வானவரம்பன் என்பது இவனது இயற்பெயர். இவனது வரலாற்றுச் சிறப்புகளை வடுஅடு நுண்அயிர், சிறுசெங்குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்குதடக்கை,  மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது. இப்பத்தினைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார். காக்கை கரையின் விருந்து வரும் என்று சிறப்பித்து பாடியதால் இப் பெயர் பெற்றார்.

வடுஅடு நுண்அயிர்

வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,

கடற் பரப்பில் வண்டுகள் நகர்வதால் ஏற்பட்ட வடுக்களை ஊதைக் காற்றானது அழிக்கும். வடு என்பது எளிதில் மறையாதது, எளிதில் மறையக்கூடிய மணற்கோடுகளை வடு என்றும், மறைத்தலை அடுதல் அல்லது கொல்லுதல் என்றும் சிறப்பித்துப் பாடியதால் இப்பெயர் பெற்றது.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மகிழ்ந்தாடித் திளைப்பதில் மென்மையானவன். என்றாலும் போரில் கடுமையானவன் என்கிறது இப்பாடல்.

வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என,
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?
மழை தவழும் பெருங் குன்றத்து,        
செயிருடைய அரவு எறிந்து,
கடுஞ் சினத்த மிடல் தபுக்கும்
பெருஞ் சினப் புயல் ஏறு அனையை;

சேரலாதன் விறலியர் நடனம் கண்டு களித்தவாறு இருப்பதால் இவன் மெல்லியன் என இவனை அறியாதார் நினைப்பர். ஆயின் இவன் மழைமேகம் தவழும் பெரிய குன்றத்தில் சினங்கொண்ட நாகப்பாம்பைக் கொன்று முழங்கும் இடியைப் போல பகைவரைத் தாக்குபவன் என்று சேரனின் வீரச் சிறப்பு சொல்கிறது முதல் பாடல்.

வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,
உள்ளியது முடித்தி; வாழ்க நின் கண்ணி

நீ வள்ளல் ஆதலால் உன்னைக் காண வந்துள்ளேன். நீ நினைத்ததை முடிக்கும் ஆற்றல் மிக்கவன் நீ. நான் நினைத்துவந்ததை முடித்துவைக்க வேண்டும். நீயும் உன் குடிப்பூவும் (பனை) நெடிது வாழவேண்டும் என்று மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துவதாய் அமைகிறது ஒரு பாடல்.

மாற்றொருப் பாடலில்

இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்,
கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை,  5
தண் கடல் படப்பை நல் நாட்டுப் பொருந!

பந்தர் துறைமுகம் கடலலை மோதும் ஊர். நல்ல கப்பல் வணிகத்தால் பெற்ற செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கும் ஊர் பந்தர். தாழம்பூ கமழும் கானல் பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக ஊர் இது. இந்தப் பந்தர் நகரைத் தலைநகராகக் கொண்ட நாட்டைப் போரிட்டு வென்று தனதாக்கிக்கொண்டவனே!
என் பந்தர் என்ற துறைமுக நகரைப்பற்றிய செய்தி பதியப்பட்டிருக்கிறது.

அடுத்து
அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி
அஞ்சே றமைந்த முண்டை விளைபழம்
ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும்

மொய்க்கும் இனிய சுவையுள்ள சதைப்பற்றுச் சேறு உடையதாய், வாளால் அறுக்கமுடியாத அடுமரம் கொண்டதாய், விளங்கும் பழம் முண்டைப்பழம் (முண்டம்-பழம், நேந்திரம்பழம், நேந்திரவாழைப் பழம்). வழிநடை மேற்கொள்பவர்களுக்கு உணவாகி அவர்களின் களைப்பைப் போக்கும்

என அக்கால மக்களின் அறச்செயல் காட்டப்பட்டிருக்கிறது.

வழிச்சாலைகளில்        இனிய      பழமரங்களை     அறத்தின் பொருட்டுவைத்து     வளர்ப்பது    பண்டையோர்    இயல்பு.   வழிச்செல்வோர், அப்பழங்களையுண்டு,  வழி வருத்தம் போக்கிக் கொள்வது பயன். இக்காலத்தில் இப்படிப்பட்ட அறங்கள் தொலைந்துப் போயின.

இன்னும் ஆறாம் பத்தில் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான். பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான். வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான். மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான். கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான் என்றச் செய்திகள் பல காணக்கிடைக்கின்றன.

ஏழாம் பத்து

பாடினோர்     : கபிலர்
பாடப்பட்டோர்: செல்வக் கடுங்கோ வாழியாதன்

பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
என்ற பாடலில்

நன்கு முற்றி பழுத்த பலா பழத்தின் வெடிப்பிலிருந்து வெளிவரும் தேனை வாடைக்காற்றானது தெரிக்கும் என நாட்டின் வளமும்
ஓவியம் வரைந்தார் போன்று அழகிய மனையில் ஓவியப் பாவையைப் போன்று விளங்கும் நல்லாளின் கணவன் என்பதில் ஓவியக் கலை அறிவு அன்று இருந்தது என்பதைத் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

புலர்ந்த சாந்திற் புலரா வீகை
.
ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்

என்ற மிக அழகிய வரிகளில் சேரன் தன் மார்பில் அணிந்த சாந்தின் ஈரம் வேண்டுமானால் காய்ந்துப் போகும் ஆனால் அவன் என்றும் இரப்பார்க்கு ஈயும் ஈரநெஞ்சினைக் கொண்டவன் என்றும்
அது மட்டுமின்றி ஈதலால் தன் செல்வம் குறைவதைப் பற்றி இரங்காதவன்,வருத்தம் கொள்ளாதவன். மேலும் ஈவது மேலோர் கடமை என்றுணர்ந்தவனாதலால் ஈவதால் மகிழ்வும் கொள்ளான் என மிகச்சிறந்த அறம் இங்கே காட்டப்பட்டுள்ளது அறிந்து உணரத்தக்கது.
இப்படி
செல்வக்கடுங்கோ வாழியாதன் காடுகளை அழித்து நாடாக்கி ஊராக்கினான். பெரும் படையிடன் பகைவர்களை ஓட்டிப் பல போர்களில் வெற்றி கண்டான். நாட்டை விரிவு படுத்திய வேள்வி செய்தான். வேள்வி செய்த புரோகிதன் மாயவண்ணன். அவன் காட்டிய அறவழியில் அரசன் சென்றான். அத்துடன் அவனைப் பெரிதும் மதித்து அவன் ஒதும் பணிக்காக, நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரை அவனுக்குத் தானமாக வழங்கினான். அத்துடன் அவனைத் தன் அமைச்சனாகவும் அமர்த்திக்கொண்டான். வளமான உள்ளத்தோடு குற்றமற்றவனாக இளங்கியவன் இந்தச் செல்வக்கடுங்கோ வாழியாதன்
என ஏழாம் பத்தும் அதன் பதிகமும் செல்வக்கடுங்கோ வாழியாதன் பற்றி குறிக்கின்றன.

எட்டாம் பத்து

எட்டாம் பத்தைப் பாடிய புலவர் அரிசில் கிழார். இவர் குற்றமற்ற உண்மையைப் பேசுபவர் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளார். பாடப்பட்டோன் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை. அதியமானை வென்றான் என்று பதிகம் குறிப்பிடுவதிலிருந்து தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்றும் இவனைக் குறிப்பிடுவர். இந்தச் சேரனின் தந்தை செல்வக் கடுங்கோ. ஏழாம் பத்தின் தலைவன்.

அறாஅ யாண ரகன்கட் செறுவின்
அருவி யாம்ப னெய்தலொ டரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின்

இங்கு மிகப் பெரியதான அகண்ட வயலில் நெல்லை ஆறுக்கும் போது அதனோடு அங்குப் பூத்திருக்கும் ஆம்பலையும், நெய்தலையும் அறுத்து கட்டி வைப்பர் என கூறப்பட்டுள்ளது. ஆம்பலும் நெய்தலும் நீர்நிலைகளில் மலர்க்கூடிய மலர்கள். இங்கும் வயல்களில் நீர் நிறைந்த வளம் பற்றியச் சங்க கால குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் கழுவுள் ஆண்ட தோட்டிமலை (தொட்டபெட்டா) கோட்டையைக் கைப்பற்றினான் என்பதும் இப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.

இப்பத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை ஆளுகைக்கைக்கு அடங்காத நாட்டின் பண்டைய வளமும், போருக்குப் பின்னர் அடையும் பாழ்நிலையும், தன் பகையரசன் ஏறி வரும் யானையின் தந்தத்தை வெட்டித் தன் அரியணைக்குக் கால் செய்துகொள்வான் என்று அவன் வீரம் ,கொடை முதலியன பற்றி கூறப்பட்டிருக்கின்றன.

ஒன்பதாம் பத்து

இந்தத் தொகுப்பில் உள்ள பத்துப் பாடல்களைப் பாடியவர்பெருங்குன்றூர் கிழார். இந்தப் பத்தில் பாடப்பட்டவன்இளஞ்சேரல் இரும்பொறை. இளஞ்சேரல் இரும்பொறை ஐந்தெயில் என்னும் கோட்டையை வென்று துகளாக்கினான். அந்தக் கோட்டை அரிய காடுகளுடன் மலைப்பகுதியில் இருந்தது. அந்தப் போரில் கோட்டைக்கு உரிய அரசன் விச்சி என்பானும் அவனுக்குத் துணைநின்ற இரு பெரு வேந்தர்களும் (சோழன், பாண்டியன்) தோற்றனர் என்று பதிகம் கூறுகிறது.

ஈரம் உடைமையின் நீரோர் அனையை
அளப்பரு மையின் இருவிசும்(பு) அனையை     15
கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை
பல்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை

என்ற பாடலில் சேரன்

மன்ன! உன் நெஞ்சில் ஈரம் இருப்பதால் நீ நீர் போன்றவன். அளக்க முடியாதவனாக விளங்குவதால் விசும்பு போன்றவன். கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வம் படைத்தவனாக விளங்குவதால் பெருகிய நீருள்ள கடல் போன்றவன். பல மீன்களுக்கு இடையே தோன்றும் நிலாவைப் போல நீ உன் சுற்றத்தார்களுக்கு இடையே தோன்றுகிறாய் என்று அவன் ஈரம், கொடை பற்றி மிக அழகாக நீர், நிலம், ஆகாயம் ஆகியவாற்றோடு பொருத்தி கூறியுள்ளமை அறியதக்கது. மேலும் இப்பாடலில்

நின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ()என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே செருமிக்(கு)          55
உரும்என முழங்கும் முரசின்
பெருநல் யானை இறைகிழ வோயே.

நீ வாழும் நாள் ஒவ்வொன்றும் மாதம் போல பெருகட்டும். மாதம் ஒவ்வொன்றும் ஆண்டு போல் பெருகட்டும். அண்டு ஒவ்வொன்றும் ஊழி போல் பெருகட்டும். ஊழி ஒவ்வொன்றும் வெள்ள-ஊழி போல் பெருகட்டும். இப்படிப் பெருகவேண்டும் என்று வாழ்த்திக்கொண்டு உன்னைக் காண வந்துள்ளேன். இடி போல் முரசு முழங்க, பெரிய நல்ல யானைமீது போர்களத்தில் இருக்கும் உன்னைக் காண வந்துள்ளேன் என்று மிக அழகாக வாழ்த்து கூறுகிறார் புலவர்.

பதிற்றுப் பத்தின் இத்தொகுப்புகளில் சேரமன்னர்களின் வீரம், கொடை, அகவாழ்வு ஆகியவற்றோடு நாட்டின் வளமும், மக்களின் ஒழுக்க வழக்கம், அறம் ஆகியவையும் அறியமுடிகிறது.

தமிழின் தொன்மையையும் தமிழரின் மிகச் சிறந்த வாழ்க்கையையும் காட்டும் சங்க இலக்கியங்கள் அனைவரும் படித்து அறிந்து மகிழவேண்டியவை..

அறிவோம், சுவைப்போம்.

மீண்டும் அடுத்த பதிவோடு விரைவில்
அன்புடன்
உமா

Sunday 15 July 2018

பதிற்றுப்பத்து – ஐந்தாம் பத்து



இப்பத்தின் பதிகம் தரும் செய்திகளை முதலில் காண்போம்.

  • ·         கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
  • ·         ஆரியரை வணக்கினான்
  • ·         கண்ணகி கோட்டம் அமைத்தான்
  • ·         கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்
  • ·         வியலூரை அழித்து வெற்றி கண்டான்
  • ·         கொடுகூரை எறிந்தான்
  • ·         மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான்
  • ·         கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்
  • ·         சோழர் ஒன்பதின்மரை வென்றான்
  • ·         படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான்


கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார்  பத்துப்பாட்டு.
அவைதாம்: சுடர்வீவேங்கை, தசும்புதுளங்கிருக்கை, ஏறாவேணி, நோய்தபுநோன்றொடை,ஊன்றுவையடிசில், கரை வாய்ப்பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில்வாழ்க்கை, செங்கைமறவர்,வெருவருபுனற்றார். 
 பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு வாரியையும் தன்மகன் குட்டுவன் சேரலையுங் கொடுத்தான்அக்கோ.
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.

மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர்(பு) எழுந்த சுடர்வீ வேங்கைப்
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச்

என்ற முதற் பாடலில் சுடர்வீ வேங்கை என்பதற்கு ‘ஒளிச் சுடர்கள் ஏற்றியது போன்ற பூக்கள் கொண்ட வேங்கை மரம் என்பது பொருளாகும்.

''இசையை எழுப்புவதற்குரிய நரம்புகள் கட்டப் பெற்ற வளைந்த கோட்டை உடைய யாழை இளைய மகளிர் சுமந்து வருவர். பண்ணோடு பொருந்திய முழவு, ஒரு கண்ணை உடைய மாக்கிணை, மற்றும் ஆடல் துறைக்கு உரியதும், கணுவை இடைவிட்டு மூங்கிலால் அறுத்துச் செய்யப்பட்டதுமான பெருவங்கியம் (பிற இசைக் கருவிகள்) ஆகிய இவற்றையெல்லாம் ஒரு சேரக் கட்டி மூட்டையாக்குவர். அம்மூட்டையைத் தோளில் தொங்கும் காவடியில் ஒரு பக்கத்தில் கட்டி, அதை இளைஞர்கள் தூக்கிக் கொண்டு அச்சம் மிக்க காட்டு வழியில் என்னோடு நடந்து வருவர்.

நடைவருத்தம் மறப்பதற்காக அவர்கள் கடவுளை வாழ்த்திக் குரல் எழுப்புவர். அந்த ஓசை புலியின் உறுமல் போல் கேட்கும். அதைக் கேட்டு அங்குள்ள வலிமை மிக்க யானை, ஏற்றிய சுடர்கள் போல ஒளி வீசும் பூக்களை உடைய வேங்கை மரத்தை வீரம் மிக்க புலியின் தோற்றம் என்று தவறாகக் கருதிச் சினம் கொள்ளும்; வேங்கை மரத்தின் கிளையை வளைத்துப் பிடித்துப் பிளக்கும்; அதனைத் தன் தலையிலே அணிந்து கொள்ளும். பகைவர் மீது போர் கருதிச் செல்லும் வீரர் கையில் தண்டாயுதத்தைத் தாங்கி ஆரவாரிப்பது போல அந்த யானை பேரோசை எழுப்பும். அந்த ஓசை சுரபுன்னை மரம் நிறைந்த காடு முழுவதும் கேட்கும்.

மழை இல்லாமையால் பசையற்றுக் காய்ந்த மூங்கில்கள் உள்ள வழிகள் பல. அவற்றைக் கடந்து திண்மை மிக்க தேர்களையும் நல்ல புகழையும் கொண்ட உன்னைக் காண வந்தேன்.

பகைவரை வெல்வதாக உன்னுடன் சேர்ந்து வஞ்சினம் (சபதம்) கூறியவர்கள் உன் படை வீரர்கள். அதைத் தவறாது முடித்த வாய்மை மிக்கவர்கள் அவர்கள். அவர்களோடு சென்று முரசு முழங்கும் போரில் பகை அரசர் வீழ்ந்து படுமாறு போர் செய்தாய். நட்புக் கொண்ட அரசர் ஆக்கம் பெறச் செய்தாய். பகைவருடைய தலைகளை உலக்கையால் மிளகை இடிப்பதைப் போல் நீ ஏந்திய தோமரத்தால் (மரத்தால் ஆன ஆயுதம்) இடித்து அழித்தாய். முழங்குகின்ற கடல் போல உன் முரசு குறுந்தடியால் அடிக்கப்பட்டு முழங்கும். தலையாட்டம் என்னும் அணியை அணிந்த வெள்ளைக் குதிரை மீது ஏறி வருபவன் நீ. கடலின் அலைகள் திவலைகளாக (துளிகளாக) உடைந்து போகுமாறு நடந்து சென்று போர் செய்து வருந்தின உன் கால்கள். அக்கால்கள் தாம் கொண்ட வருத்தத்தை நீங்குமா? சொல்வாயாக.

இசைக்கருவிகளை எல்லாம் இளைஞர் சுமந்துவர நான் காடு பல கடந்து உன்னைக் காண வந்தேன். அதற்கே என் கால்கள் வருந்தினவே! கடலில் சலியாது போர் செய்த உன் கால்கள் மிக வருந்தியிருக்குமே'' என்று பாணன் ஒருவன் கேட்பது போல் புலவர் இப்பாடலைப் பாடியுள்ளார்.

மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்றுஇரண்டு அலபல கழிந்து

(கழை = மூங்கில்; திரங்கு = காய்ந்து வற்றிய; அத்தம் = வழி)

பாணன் கடந்து வந்த பாலை வழிகள் பல. அவற்றின் கொடுமையை ஒரே வரியில் அழகாகக் கூறுவது எண்ணத்தக்கது.

அடுத்ததாக
தசும்பு துளங்கிருக்கை
கள்குடங்கள் வைக்கப்பெற்ற அசைகின்ற இருக்கை என்பது பொருள்.

கள் நிரம்பிய மிகப் பெரிய குடங்கள் உருண்டு விடாதபடி அவற்றை ஓர் இருக்கையில் வைப்பார்கள். வீரர்கள் மீண்டும் மீண்டும் குடங்களிலிருந்து முகந்து கள்ளை உண்பார்கள். அதனால் கள் உண்டவர்கள் மயக்கத்தால் ஆடுவது போலவே கள் கொண்ட குடங்களும் ஆடும். இந்த இருக்கை கள் குடத்தின் ஆடல் மேடை போல் தோன்றும். அதுவும் சேர்ந்து ஆடும். வெற்றிக் களிப்பில் வீரர் அனைவரும் கூத்தாடும் போது, குடமும் இருக்கையும் ஆகிய உயிர் இல்லாத அஃறிணைப் பொருள்கள் கூட மகிழ்ந்து ஆடும் என்னும் அழகிய நயம் தோன்ற இத்தொடர் அமைந்துள்ளது. அழகிய கற்பனையைக் கொண்ட இத்தொடர் பாடலில் உள்ளதால் அதுவே, பாடலின் பெயர் ஆகச் சூட்டப்பட்டுள்ளது.

இப்பாடலில் செங்குட்டுவனின் படை வீரத்தையும், கொடைத் திறத்தையும் பரணர் புகழ்கிறார்.
மாஇருந் தெள்கடல் மலிதிரைப் பெளவத்து
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண்பல வரூஉம் புணரியின் பலவே.

கடலின் பெரிய நீர்ப்பரப்பில், நுரையாகிய வெள்ளைத் தலைகளைக் கொண்ட நீர்த்துளிகள் உடைந்து சிதறும்படி, மேலும் மேலும் வந்து மோதும் கடல் அலைகளை விட எண்ணிக்கையில் அதிகமான குதிரைகளை அல்லவா நீ இரவலர்க்கு வழங்கியுள்ளாய்!''
எண்ணிக்கை மிகுதிக்கு, கடலின் அலைகளை உவமை காட்டுவது சிறப்பு. பிடரி மயிர் சிலிர்த்துக் குதித்து ஓடிவரும் குதிரைகளுக்கு நுரைபொங்கக் குதித்து வரும் கடல் அலைகளை உவமையாகும்படி, குறிப்பாகப் பாடி இருப்பதும் சிறந்த கற்பனை அறிந்து மகிழத்தக்கது.

ஏறாவேணி

கோக்காலி என்பது பொதுவாக ஏறுவதற்குப் பயன்படும் பெரிய உயர்ந்த நாற்காலி போன்ற ஏணி ஆகும். ஆனால் இந்தக் கோக்காலி ஏறுவதற்குப் பயன்படாமல் கள்குடம் வைக்கும் இருக்கையாய்ப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது ஏறா ஏணி என்று நயமாகக் குறிப்பிடப்படுகிறது. அதுவே பாடலின் பெயராக அமைந்தது.

இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்     30
தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே

நிணம்சுடு புகையொடு கனல்சினந்(து) அவிராது
நிரம்(பு)அகல்(பு) அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடி(து)இராத் தசும்பின் வயிரியர்
உண்(டு)எனத் தவாஅக் கள்ளின்    35
வண்கை வேந்தேநின் கலிமகி ழானே. (43)
வள்ளல் தன்மை மிகுந்த கையை உடையவனே! தூங்கலோசை உடைய பாட்டிற்குப் பொருந்த முழவு இசை முழங்குகிறது. உண்ணுதற்குரிய இறைச்சியைச் சுடும் புகை நாற்றமும், வெப்பமும் நீங்காமல் உள்ளன. நிரம்புதலும் குறைதலும் அறியாத கள் குடங்கள் கோக்காலியில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் கள் நிரம்பி நெடுநேரம் இருப்பதில்லை. வீரர்கள் முகந்து பருகிக் கொண்டே இருக்கின்றனர். அவை மீண்டும் நிரப்பப்படுவதால் குறைந்தும் நெடுநேரம் இருப்பதில்லை. ஏறாத ஏணியில் கள்ளின் மட்டம் மட்டும் எப்படித்தான் ஏறுகின்றதோ? இவ்வாறு விளங்கும் உன் செல்வப் பெருமையெல்லாம் கண்டேன். மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டேன்.''

இவ்வாறு குட்டுவனை வாழ்த்துகிறார் பரணர்.

நோய்தபுநோன்றொடை

இதன் பொருள் நோயில்லாத ஆற்றல் மிக்க உடம்பு என்பதாம். சேரனின் உடல் வலிமை, அழகு, நலம் இவற்றை  மிகச் சிறிய தொடரால் வாழ்த்தியமையால் இப்பாட்டு இப்பெயர் பெற்றது.
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முர(சு)டைத் தாயத்(து) அரசுபல ஓட்டித்  
துளங்குநீர் வியல்அகம் ஆண்(டு)இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய நாடே.

பசுமையானதும் கொழுப்பற்றதுமான இறைச்சித் துண்டை வைத்த இடத்தை மறந்து விட்ட உச்சிக் கொண்டையை உடைய கோட்டான், கவலையோடு பிற கோட்டான்களையும் வருத்தக் கூவும் இடுகாடு; அங்கு அரசர் பலரை வென்று இவ்வுலகை ஆண்ட மன்னர் பலர் தாழியிலே இடப்பட்டு வன்னி மரத்தின் நிழலை உடைய இடுகாட்டு மன்றத்திலே புதைக்கப்பட்டனர். நோயற்ற உன் உடம்பினை அந்தத் தாழியாகிய மட்குடம் காணாது நீங்குவதாக. அதாவது, என்றும் நீ இறவாது நீடு வாழ்வாயாக'' என்று பரணர் பாடியுள்ளார்.

அறுகை என்ற குறுநில மன்னனுக்காகச் செங்குட்டுவன் பழையன் மீது படையெடுத்து அவன் அரண்களை அழித்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு இப்பாட்டால் கூறப்பட்டது.
தபு என்றால் கொல்லும் என்று பொருள். நோய்தபு வன்மையான உடம்பு என்றால், நோயையே கொன்று வெற்றி கொள்ளும் வலிமை மிக்க உடம்பு என்றும் பொருள் தருகிறது. மேலும், போர்செய்து பகைவரை வென்று அடையும் பொருளைக் கொடையாக ஈந்து, பரிசிலர்களாகிய எங்களின் பசி முதலிய நோய்களை அழிக்கும் வலிமை மிக்க உடம்பு என்றும் நயப்பொருள் தருகின்றது. இந்த அருமை மிக்க அழகிய தொடரைக் கொண்டுள்ளதால் இப்பாட்டுக்கு அது பெயராகிறது.

ஊன்துவை அடிசில்
ஊன் என்பது கறி, இது மாமிசம், இறைச்சி எனப்படும். ஊனோடு குழைத்துச் சமைத்த சோறு என்பது இத்தொடரின் பொருள் இப்பாட்டு சேரன் செங்குட்டுவனின் வீரச் சிறப்பைக் கூறுகின்றது

சோறு வேறு, ஊன் வேறு என்று பிரித்தறிய முடியாதவாறு இரண்டும் ஒன்றாய்க் குழைந்த சோறு ஊன் துவை அடிசில் ஆகும். அந்த உணவை உண்ணும் உன் வீரர்களுக்குத் 'தம் உடம்பில் உள்ள ஊன் வேறு; நீ தந்த சோறு வேறு என்று பிரித்துப் பார்க்காத அளவுக்குச் செஞ்சோற்றுக் கடன் என்னும் நன்றி உணர்வு உள்ளது. அதனால்தான் மிக்க வீரத்துடன் போர் செய்கின்றனர். வெற்றியைக் குவிக்கின்றனர். இந்தக் குறிப்புப் பொருளை உணர்த்தும்படி நயமாக அமைந்துள்ளது இந்தத் தொடர். இதனால்தான் இப்பாடலுக்குப் பெயராக அமைந்தது.

ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
முள்இடு(பு) அறியா ஏணித் தெவ்வர் 15
சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனியார் உளரோநின் முன்னும் இல்லை

மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துளங்(கு)இரும் கமம்சூல் 20
வயங்குமணி இமைப்பின் வேல்இடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே.

பகைவரின் குதிரைகள் முதலியன வருவதைத் தடுக்க முள் இட்டு வைத்தலை அறியாத எல்லைப் புறத்தையும், பகைவரின் அம்பு வேகத்தை அடக்கும் கேடயத்தையும் கொண்ட அரசர்களில் நீ ஒப்பு அற்றவன்.

கடல், மேகங்கள் வந்து முகந்து கொள்ளுதலால் குறைந்து போவதில்லை. ஆறுகள் வந்து சேர்வதால் நிரம்பி வழிவதும் இல்லை. காற்றால் அசைக்கப்பட்டு அலைகள் ஓயாமல் உள்ளது அக்கடல். அதன் மீது வேலைச் செலுத்தி, அக்கடலிடத்தே எதிர்த்த பகைவரை வெற்றி கொண்ட உன்னை ஒத்தவர் இனிப் பிறக்கப் போவதில்லை. உன் முன்னோரிலும் ஒருவரும் இல்லை.'' இவ்வாறு பரணர் சேரனைப் புகழ்கிறார்.

கரைவாய்ப் பருதி
ஓரத்தில் குருதியின் சுவடு படிந்த தேர்ச் சக்கரம் என்பது பொருள். (பருதி = சக்கரம்; கரை = ஓரம், விளிம்பு)
இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கைத்
திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப்   5
பணியா மரபின் உழிஞை பாட
இனிதுபுறந் தந்(து)அவர்க்(கு) இன்மகிழ் சுரத்தலின்

'நல்ல அணிகலன்களையும் காதில் குழைகளையும் கழுத்தில் மாலையையும் உடைய பெண்கள், ஒளிமிக்க வளையலை அணிந்த முன்கையைக் கொண்டவர்கள்; மணிமாலை விளங்கும் மார்பினை உடையவர்கள்; வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவர்கள்; அக்கூந்தலைக் கொண்டையாக முடித்தவர்கள் அந்தப் பாடல் மகளிர், அவர்கள் நரம்பால் தொடுக்கப் பெற்ற யாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்க்குப் பணியாத குட்டுவனின் உழிஞைத் திணைச் செயலைப் புகழ்வர். அவர்களுக்குக் குட்டுவன் இனிய கொடை பல அளிப்பான். போர்க்களத்தில் காடுகள் போன்ற தடைவழிகள் பலவற்றின் வழியாகச் செலுத்தப்படும் தேரின் சக்கரத்தின் ஓரத்தில் குருதிக் கறை படியப் பல வீரர்களின் தலைகள் அச்சக்கரத்தில் அகப்பட்டு நலியும். அத்தகைய போர்கள் பலவற்றை வென்ற, கொல்லும் இயல்புடைய யானைகளையுடைய வேந்தன் குட்டுவன். தன் வேற்படையால் கடலை இடமாகக் கொண்டு போர் செய்தோரையும் தோற்றோடச் செய்தான். பெருமை மிக்க அச்செங்குட்டுவனின் புகழைப் பாடிப் பரிசு பெற்றோர் தம் ஊர்க்கு மீண்டு செல்லக் கருத மாட்டார்.

இவ்வாறு சேரன் பரிசில் பெற வரும் கலைஞர்களுக்கு அன்புடன் முகம் மலர்ந்து கொடை வழங்கும் பண்பைப் பரணர் பாராட்டுகிறார். அதே நேரத்தில் தன் பகைவர்களுக்கு எந்த அளவு கடுமை பொருந்தியவன் என்பதை, அவனது தேர்ச்சக்கரத்தை வைத்தே குறிப்பாக உணர்த்துகிறார். இனிய முகம் கொண்ட இவனது தேரின் சக்கரம் இரத்தக் கறை படிந்த வாயாகக் காட்டப்படுகிறது. இந்தச் சிறப்பினால் கரைவாய்ப் பருதி என்னும் தொடர் பாடலின் பெயராக ஆயிற்று.

நன்னுதல் விறலியர்

நல்ல நெற்றியை உடைய ஆடுமகளிர் என்பது இதன் பொருள். நன்னுதல் என்னும் சொல் குறிப்பாகக் கற்பில் சிறந்தவள் என்பதை உணர்த்தும் மரபுச் சொல்.

அட்(டு) னானே குட்டுவன் அடுதொறும்
பெற்(று) னாரே பரிசிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்
சொரிசுரை கவரும் நெய்வழி(பு) உராலின்  5
பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல
நன்நுதல் விறலியர் ஆடும்
தொல்நகர் வரைப்பின்அவன் உரைஆ னாவே. (47)

சேரன் பகைவரை அழித்து வேர் அறுக்கும் செயலில் ஓய்வதில்லை. ஒவ்வொரு முறை அவன் போரிடும் போதும், யானைகளைப் பரிசிலாகப் பெறுவதில் கலைஞர்கள் ஓய்வதில்லை. மலை மேலிருந்து வீழும் அருவி போல மாடங்களின் உச்சியில் இருந்து காற்றால் அலைக்கப் படும் கொடிகள் தெருவில் அசையும். அத்தெருக்களில் எரியும் விளக்குகளில் நெய்யை ஊற்றுவர். அந்நெய் விளக்கின் உட்பகுதியிலிருந்து நிரம்பி வழிவதால் விளக்கின் பருத்த திரி பெரிதாக எரியும். அவ்வொளியில் நல்ல நெற்றியையுடைய விறலியர் ஆடுவர். அத்தகைய ஊர்களில் எல்லாம் குட்டுவனைப் பற்றிய புகழுரைகள் ஓய்தல் இல்லை'' என்று சேரனைப் புகழும் இப்பாடலில், ஆடும் தொழிலையுடைய மகளிரும் குலமகளிர்போல் கற்பிற் சிறந்து விளங்கினர் என்று அவன் நல்ல ஆட்சித் திறன் பாராட்டப்படுகிறது. இதனால் நன்னுதல் விறலியர் என்னும் தொடரால் இப்பாடல் பெயர் பெற்றது.

பேர்எழில் வாழ்க்கை   
பெருமையும் அழகும் உடைய வாழ்க்கை என்பது இதன் பொருள்.

நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
பொழில்வதி வேனில் பேர்எழில் வாழ்க்கை    15
மேவரு சுற்றமோ(டு) உண்(டு)இனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சிஅம் பெருந்துறை மணலினும் பலவே.

உன் நாட்டில் உள்ள மலையிலே தோன்றி, உன் நாட்டில் உள்ள கடலிலே கலக்கும் நீர் நிறைந்த ஆற்றில் கொண்டாடப்படும் புனலாட்டு விழாவும், சோலையில் கொண்டாடப்படும் வேனில் விழாவும் உடையது, பெருமையும் அழகுமுடையது, உன் வாழ்க்கை. உன்னுடைய சுற்றத்தாரோடு சேர்ந்து உண்டு செல்வ மக்கள் கூடி விளையாடும் காஞ்சி என்னும் ஆற்றின் துறையில் பரந்த நுண்ணிய மணலை விட எண்ணிக்கையில் மிகுந்த, பல்லாண்டுகள் நீ வாழ்வாயாக!'
ஆற்று மணலின் எண்ணிக்கையை விட அதிக ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துவது சங்க காலக் கவிதை மரபு. வேனிற்காலத்தில் அரண்மனையில் வாழாமல், இனிய சோலையில் பகைவர் பற்றிய அச்சம் இன்றித் திரியும் குடிமக்களுடன் வாழும் அழகிய வாழ்க்கை பேரெழில் வாழ்க்கை எனப்பட்டது. இதுவே பாடலின் பெயர் ஆகியது.

செங்கை மறவர்
சிவந்த கையினையுடைய மறவர் என்பது இதன் பொருள்.

சினமிக்க போர் செய்த குட்டுவனைக் கண்டு வருவதற்காக நாங்கள் போகிறோம். அசையும் கூந்தலையும் ஆடும் இயல்பையும் கொண்ட விறலியர்களே! நீங்களும் வாருங்கள். இசைப்பாட்டில் திறமை மிக்க உங்கள் சுற்றத்தார் உடையும் உணவும் பெறுவர்''. என்று சேரன் கொடைச் சிறப்பைப் படைச் சிறப்போடு சேர்த்துப் புகழ்கிறார் பரணர். அவன் நாடுகளை வெல்வதே விறலியர் பாணர் போன்றவர்களுக்குப் பரிசு வழங்குவதற்காகத்தான் என்கிறார்.

அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கை சிவந்து போகும் போதுதான் அதைச் செங்கை என்று பாராட்டுவது வழக்கம். இங்குச் சேர வீரரைச் செங்கை மறவர் என்கிறார் பரணர். ஆனால் அவர்களது கை பகைவரின் இரத்தத்தால் செங்கை ஆனது. நம் போன்ற கலைஞர்களுக்குப் பொன், பொருளை வாரிக் கொடுப்பதற்காகப் போர் செய்ததால் அந்தக் கை அன்றே சிவந்து - வள்ளலின் செங்கை ஆகிவிட்டது என்று நயமாகக் குறிப்பு மொழியால் சொல்கிறார்.

வெருவரு புனல்தார்.
அஞ்சத் தக்க காலாட் படையாகிய வெள்ளம் என்பது இதன் பொருள்.

மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கால்மயங்கு கதழ்உறை ஆலியொடு சிதறிக்
கரும்(பு)அமல் கழனிய நாடுவளம் பொழிய

வளம்கெழு சிறப்பின் உலகம் புரைஇச்
செங்குணக்(கு) ஒழுகும் கலுழி மலிர்நிறைக்    5
காவிரி அன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூடல் அனையை

''பெரிய மலையிடத்தே மேகம் முழக்கம் செய்வதால் மான் கூட்டம் அஞ்சும். காற்று அசைப்பதால் ஆலங்கட்டி சிதறக் கடுமழை பொழியும். கரும்பு வயல்களை உடைய நாடுகள் வளம் பெருகவும், வளம் பொருந்திய உலகைப் பாதுகாக்கவும் காவிரியாற்றின் வெள்ளம் நேர் கிழக்காக ஓடிவரும். அரசே! நீ அக்காவிரி போன்றவன் மட்டுமல்லன். பூக்கள் விரிந்த நீரைக் கொண்ட மூன்று ஆறுகள் சேரும் இடமான முக்கூடலையும் ஒத்தவன்.

கொல்களிற்(று), உரவுத்திரை பிறழ வல்வில் பிசிரப்
புரைதொல் வரைப்பின் எஃகுமீன் அவிர்வர
விரவுப்பணை முழங்(கு)ஒலி வெரீஇய வேந்தர்க்(கு)      10
அரணம் ஆகிய வெருவரு புனல்தார்

கொல்லுகின்ற யானைகளாகிய பெரிய அலைகள் திரண்டு வர, வலிமை மிக்க விற்படை அம்புகளை நீர்த்துளிகளாகச் சிதறி வர, கேடயத்தின் மேலே மின்னும் வேல்கள் மீன்களாக விளங்க, போர்ப்பறையோடு முரசொலி கலந்து வெள்ளத்தின் ஓசையாய் முழங்க, அதனைக் கேட்டு அஞ்சிப் பணிகின்ற அரசர்களுக்குக் காவலாகவும், எதிர்த்தவரை அழிக்கும் பெரும் வெள்ளமாகவும் உன் காலாட்படை பாய்ந்து செல்லும். படையாகிய அந்த வெள்ளம் கடலிலும் மலையிலும் பிற இடத்திலும் உள்ள பகைவர் அரண்களை அழித்து, அவர் நாட்டின் நிலப்பரப்பு முழுவதிலும் பாய்ந்து பரவி நிரம்பிவிடும். பகைவரின் புகழ் கெடும். அவர்களின் சினம் என்னும் தீயை அவித்துவிடும். இக்காலாட் படைக்குத் தலைவனாகிய செங்குட்டுவனே! சாந்து பூசித் திலகமிட்டு, மைதீட்டிய பெண்களின் பல வண்ணங்களும் கலையும்படி அவர்களைக் கூடி அவர்களின் மென்மையான கூந்தலாகிய படுக்கையில் கிடந்து, அவர்களைத் தழுவிச் சிறுதுயில் பெறுவதை இழந்தாய். இவ்வாறு போர்க்களத்திலேயே நாள் பலவும் கழிந்தன. இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு கழியுமோ?''.

''வாழும் நாட்களின் பெரும் பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்து விடுகிறாயே? எங்களைக் காக்கும் கடமைக்கே நாட்களை ஒதுக்கிவிட்டதால், உனக்கு இன்பம் தரும் காதலுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டதே'' என்று கவலையோடு கேட்கிறார் பரணர்.

வீரன் குட்டுவனின் தன்னலம் அற்ற கொடை உள்ளம், தன் குடிமக்களுக்காகக் காதல் இன்பத்தைக் கூட இழக்கத் தயங்காதது என்று உணர்த்துகிறார். சேரனின் படையைப் பகைவர் நிலப்பரப்பை விழுங்கும் பெரு வெள்ளமாக உருவகம் செய்து பாடுகிறார். இதனால் வெருவரு புனல்தார் என்ற உருவகத் தொடர் பாடலின் பெயர் ஆகியது.

பரணர் சங்க காலப் புலவர்களில் புகழ் மிக்கவர். சங்க இலக்கியங்களில் இவர் எண்பத்தாறு பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் மிகுதியாக இடம் பெறும்.

இப்பாட்டின் தலைவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன். மேற்குக் கடலில் வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்துத் தொல்லை செய்து வந்தனர் கடற்கொள்ளையர்கள். இவர்களைத் தன் கப்பல் படை கொண்டு அடக்கி வெற்றி பெற்றான். இதனால், இவன் கடல் பிறக்கோட்டிய என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். இப்பத்துப் பாடல்களில் பரணர் செங்குட்டுவனின் வீரம், கொடை ஆகிய இருபெரும் பண்புகளைப் போற்றுகிறார். அறிந்து மகிழ்வோம்..

ஆறாம் பத்தின் பாடல்களோடு விரைவில்

அன்புடன்
உமா