Showing posts with label புறத்திணை. Show all posts
Showing posts with label புறத்திணை. Show all posts

Sunday, 4 August 2019

பத்துப் பாட்டு நெடுநல்வாடை


பத்துப்பாட்டுத் தொகை நூல்களில் ஏழாவதாக நாம் காண இருப்பது நெடுநல்வாடை. நெடிய நல்ல வாடை என்பதே இதன் பெயர் விளக்கம்.
தலைவனும் தலைவியும் பிரிந்திருக்கிறார்கள்.  வாடைக்காலம் துவங்குகிறது. பிரிவில் வாடும் தலைவிக்கு வாடைக்காலம் நீண்டதாக தோன்றுகிறது. ஒரு நொடி என்பது ஒரு யுகமாக கழிகிறது

அதேகணம் போருக்காக தலைவியைப் பிரிந்தத் தலைவன், வெற்றிப்பெற்ற நிலையில் தனக்கு இவ்வெற்றியை வாங்கித் தந்த வீரர்களைக் பாசறையில் கண்டு அவர்களைத் தேற்றுகையில் அவனுக்கு இவ்வாடைக்காலம் நன்மையைத் தந்து வரும் ஒரு நல்ல வாடையாக அமைகிறது.

இப்பாடல் 188 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவில் அமைந்த நூல்.

பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன். கீரன் என்பது அவர் இயற்பெயர். ந என்பது சிறப்புக் கருதி விளிக்கப்பட்ட இடைச்சொல். நச்செள்ளையார், நக்கண்ணையார் நக்கீரனார் என அடைமொழிக் கொண்டு அழைக்கப்படும் வழக்கம் அன்று நிலவியிருக்கிறது.

பாடப்பட்டவன்: மதுரைக்காஞ்சியில் நாம் பார்த்த அதே வீர மன்னன், இளம் வயதிலேயே பகை அரசரை வென்று தமிழகத்தைத் தனித்தாண்ட தலைச் சிறந்த மன்னன் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

இந்நூல் அகம் பற்றி அதிகம் பேசுவதானாலும், பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு இதில் குறிக்கப்படுவதால் இது புறத்திணை நூல்களுல் வைக்கப்பட்டுள்ளது. எனவே வாகைத்திணையுமாயிற்று.

இப்பாடல் அழகான இரு காட்சிகளை நமக்கு காட்டுகிறது. வாடைக்காலத்தின் நடுங்கும் குளிர் பின்புலமாக அமைய தலைவனைப் பிரிந்து தலைவி வாடித் தவிக்கும் அரணமனைக் காட்சியும், வெற்றிப் பெற்றத் தலைவன் தன் வீரர்களின் காயம் பட்ட உடலைத் தழுவி அவர்களைத் தேற்றும் பாசறைக் காட்சியும் அழகுற காட்டப்பட்டுள்ளன.

முல்லைப்பாட்டில், தலைவி, “தலைவன் வரும் வரைக் கலங்கேன்” எனக்கூறி காத்திருக்கிறாள் என்றும். தலைவனோ “வந்துவிடுவேன்” என்று சொன்னச் சொல் தவறாவண்ணம் விரைந்து செல்லும் குதிரையை மிகவும் வேகமாகச் செலுத்தி வருகிறான் என்றும் முடிவதைப் பார்த்தோம்.

இந்நூலில் முடிவை நமது கற்பனைக்கு விட்டுவிடுகிறார் புலவர். தலைவியின் பிரிவுத் துயரும் தலைவனின் வெற்றியும் மட்டுமே காட்டப்படுகிறது.  படிக்கும் ஒவ்வொருவரும் பாண்டியனிடன் சென்று தலைவியை நினைவுக்கூறி அவள் துயரை நீக்காயோ என் கேட்கத் தோன்றும் படி விட்டுவிடுகிறார் புலவர்.

அற்புதமான இப்பாட்டில் சில வரிகளை இப்போது பார்ப்போம்…

நாம் முன்பு பார்த்த சங்க இலக்கியங்கள் சிலவற்றிலும் மழைப்பெய்தலை வர்ணிக்கும் பாடல்களைப் பார்த்தோம். இந்நூலிலும்

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென

இவ்வுலகம் குளிரும் படியாக வலப்புறமாக சுழன்று, என்றும் பொய்க்காத வானம் புதிய மழையை பெய்தது என மழைப் பெய்தலின் வர்ணனையுடன் துவங்குகிறது. வலப்புறமாகச் சுழன்று வீசும் போது காற்றும் மழையும் மிகும் என்பது காட்டப்பட்டிருக்கிறது.  இது அன்றைய மக்களின் அறிவுத்திறனை நாமறிய உதவுகிறது.

இந்நூலின் சிறப்பே இவ்வாடைக்காலத்தின் வர்ணனைகள். இப்பாடல்களைப் படிக்கும் போது சற்றே நம் உடலும் குளிரில் நடுங்குவதாய் உணர்வோம். 

மழைப் பொழிந்து வெள்ளம் கடல் போல் சூழ்கிறது.  கையிலே வளைந்த கோலை கொண்டுள்ள கோவலர்கள் இவ்வெள்ளத்தை வெறுத்தனர். கையிலே கொடுங்கோல் வைத்திருப்பதை முன்பும் முல்லைப்பாட்டில் பார்த்தோம். கோவலர் இக்கழிகளைக் கொண்டு தம் நிரைகளுக்கு இலைத் தழைகளை செடிகளினின்றும் வளைத்துக் கொடுப்பர். அவற்றைக் கொண்டு தட்டியவாறே மேய்த்தும் செல்வர். வெள்ளத்தில் ஆநிரைகளை காத்தல் அரிது என்பதால் தம் நிலம் விட்டு நீங்கி வேறு இடம் பெயர்ந்தனர். அதனால் வெள்ளத்தை அவர் வெறுத்தனர். அது மட்டுமல்ல இவர்கள் இக்குளிரை தாங்க நெருப்பில் தம் கைகளைக் காட்டி சூடேற்றி தன் கண்ணங்களில் ஒற்றிக் கொண்டனர். எனவே இவர்களை “கைக்கொள் கொள்ளியர்” எங்கிறார் புலவர். இன்றும் தீமூட்டி கையைக்காட்டி உடலைச் சூடுபடுத்திக்கொள்வதை நாமறிவோம்.

மக்கள் மட்டுமா? ஆநிரைகளும் மேய்ப்பதை மறந்தன, குரங்குகளின் உடல் குளிரால் கூனிப் போயின.  பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து கீழே விழுந்தன.  கன்றுகளுக்குப் பால் கொடுக்கும் மாடுகள் பால் குடிக்க வரும் கன்றுகளைத் தவிர்த்து கோபத்தோடு உதைத்துத் தள்ளின. குன்றையே குளிர்விக்கும் படியாக இருந்தது அந்த குளிர்கால இரவு.
இப்படி நடுக்கத்துடன் துவங்குகிறது இப்பாடல்.

இம்மழை நடுக்கத்தை மட்டுமல்ல பெருக்கத்தையுமல்லவாக் கொடுக்கின்றது. அடுத்து மழைக்காலச் செழிப்பை மிகச் சிறப்பாக காட்டுகிறார் புலவர்.

முசுண்டைக் கொடியில் பொறிப்பொறியாக வெண்ணிறப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அதனோடு புதர்தோறும் பீர்க்கம் பூ பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. ஈர மணலில் இருக்கும் பசுமை நிறக் கால்களை உடைய கொக்கு, சிவந்த கால்களை உடைய நாரை ஆகியவை எளிமையாகக் கவர்ந்துண்ணும்படி கயல் மீன்களை ஆற்று வெள்ளம் அடித்துவந்தது. வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர் வளைந்து தொங்குகிறது. பாக்கு மரத்தில் காய்கள் சதைப் பிடிப்புடன் முற்றித் தொங்குகின்றன. காட்டில் பூத்திருக்கும் குளிர்கால மலர்களில் பனித்துளிகள் தூங்குகின்றன. இப்படி மிகுந்த அழகையும் வளத்தையும் வாடைக்காலம் கொண்டு வருகிறது.

இப்பொழுது மழைப் பெய்தல் நின்று தூவலாக காணப்படுகிறது இதனை

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப,   2  
என அழகாகக் காட்டுகிறார்

மிகுந்த நீரைப் பொழிந்து பொழிந்து பழகிய மேகம், இனிமேலும் பொழிதல் தவறு என உணர்ந்தனவாய் வறண்ட வெண்மேகமாகி, சிறிதாகத் தூவ பழகுவதுப்போல் பெய்ததாம் மழை. என்னே ஒரு நயம்.
அடுத்து ஊரையும், அங்கு வாழும் மக்கள் செய்கைகளையும் நமக்குக்காட்டுகிறார்.

மாட மோங்கிய மல்லன் மூதூர்
ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்

பழமையான ஊர். வளமான ஊர். ஓங்கிய மாடமாளிகைகள். ஆறு கிடந்தது போல் அகன்ற தெருக்கள் இருக்கின்றன. முழு வலிமை பெற்று முறுக்கான உடல் கொண்ட மக்கள் குளிரில் முதுகு கூனி முடக்கத்துடன் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வண்டு மொய்க்கும் தேறல் பருகியிருக்கிறார்கள் என்று காட்டுகிறார்.
பெண்களைக் காட்டும் போது,

மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்
பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்

மென்மையான உடல்,முத்துப் போன்ற புன்னகை, காதுக் குழைகளை காணும் ஆவலோடு காதுவரை நீண்ட மழைக்கண்கள் என்கிறார். புலவரும் குளிரால் தாக்குண்டார் போலும், ஈரமான, எழிலான கண்களை மழைக்கண் என்கிறார்.

இவர்களால் மழைக்காலத்தில் காலையா மாலையா என அறிய முடியவில்லை. எனவே பூக்கூடையில் உள்ள பூக்கள் மலர்வதால் கணித்துத் தெரிந்துகொள்கின்றனர்.
பின்பு இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் திரியைத் திரித்து விட்டு விளக்கு ஏற்றுகின்றனர். நெல்லும் மலரும் தூவி வழிபடுகின்றனர். மாலைக்காலத்தை வழிபடுகின்றனர்.

அடுத்ததாக செல்வந்தர் வீடு இக்குளிர் காலத்தில் எவ்வாறு இருக்கிறது என நயம் படக் காட்டுகிறார்.

·         பாதுகாப்பாளர் இருக்கக்கூடிய செல்வர் மாளிகை.
·      
       பணியாளர்கள் கொள்ளுப் போன்ற உடலுக்குச் சூட்டைத்தரும் பொருள்களை அரைக்கின்றனர்.
·         வட்டமான சந்தனக் கல்லும் கட்டையும் அரைக்கப்படாமல் தூங்குகின்றன. (சந்தனம் குளுமைக்காகப் பூசப்படுவது ஆகையால் குளிர் காலத்தில் பயனற்றுக் கிடக்கிறது)
·         பெண்கள் அதிக பூச்சூடவில்லை. நெருப்பில் அகில் கட்டைத் துகள்களையும், வெண்ணிற அயிரையும் (சாம்பிராணியையும்) போட்டுப் புகைத்து கூந்தலை உலர்த்திக்கொண்டனர்.
·         கைத்தொழில் கலைஞன் கம்மியன் செய்து தந்த செந்நிற வட்ட விசிறி விரிக்கப்படாமல் சுருக்கித் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் சிலந்திப் பூச்சி கூடு கட்டும் அளவுக்குப் பயன்படுத்தப்படாமல் கிடந்தது.
·         மேல்மாடத்தில் தென்றல் வீசும் சன்னல் திறக்கப்படாமல் தாழிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
·         வாடைக்காற்றின் நீர்த் துவலை தூவிக்கொண்டே இருந்ததால் யாரும் கூம்பிய கன்னல் சொம்பில் குளிர்ந்த நீரைப் பருகவில்லை.
·         மாறாக அகன்ற வாயை உடைய தடவில் சுடச்சுட வெந்நீரைப் பருகினர்.
                                                                                                                                
சற்று இன்றைய நம் வீடுகளை எண்ணிப்பாருங்கள். குளிர் காலத்தில் நாம் என்னவெல்லாம் செய்வோம்?

·         குளிரூட்டும் கருவியை பயன் படுத்தாது, கொதிகலங்களைப்  பயன் படுத்துவோம்.
·         குளிர்பானங்களைத் தவிர்த்து சூடான காப்பி,டீ அருந்துவோம்.
·         கதவு சன்னல்களை அடைத்து சூடாக்கிக் கொள்வோம்.
·         கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்த்து மூடிய திரையரங்கு அல்லது பெரிய கடைகள் கொண்ட உள்ளரங்குகளில் பொழுது போக்குவோம்.
·         குளிருக்கு அடக்கமாக உடை உடுத்துவோம்.
·         சூடான நீரைப் பருகுவோம்.
·         மின்விசிறி நம்வீட்டிலும் சுழலாமல் நிற்கும்.
·         உணவிலும் குளிச்சிதரும் பொருட்களைத் தவிர்ப்போம்.
·         உள்ளரங்கு விளையாட்டுகள் விளையாடத் துவங்குவோம்

இப்படி இப்பாடலில் கூறியது போல் இன்றும் குளிர்காலம் நம் பழக்கவழக்கங்களை  மாற்றத்தான் செய்கிறது. ஆனாலும் அதை ஒரு நயமிக்க கவிதையாக புனைவோர் இல்லாமல் போனதுதான் வருத்தம்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக நேர்த்தியாக படம் பிடித்தது போல் நம் முன்னே காட்டுகிறார் புலவர். நாமும் அதே வீட்டில் இருப்பது போல் அக்குளிரை உணர்வோம். அதனால் அத்தலைவியின் உணர்வையும் புரிந்து கொள்வோம் அல்லவா?

இதோ, அடுத்ததாக அரண்மனைப் போன்ற அரசியின் இல்லத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் புலவர். கொஞ்சம் எட்டித்தான் பார்ப்போமே!

…………………………………………மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்,
இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 75
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து,

திசை எங்கும் விரிந்த கதிர்களைப் பரப்பியச் சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழ,  இரு கோலினை நட்டு அதன் நிழல் ஒரு பக்கம் சார்ந்துவிழாத நண்பகல் பொழுதில், கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை. இங்கு கட்டிடக்கலை அறிவை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறார் புலவர்.

இப்படி மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட்ட அரணமனையின் தோற்றம், அதன் கோபுர வாயில், முற்றம், முன்வாயில், அங்கு எழும் ஓசைகள் ஆகியாவற்றைக் கூறி அந்தபுரம் பற்றி காட்டுகிறார் புலவர்.

அரசியின் மனை மலைப் போல்  உயர்ந்து தோன்றுகிறது. மலைமேல் வானவில் கிடப்பது போல் துணியாலான பலவண்ணக் கொடிகள் அங்கு பறந்து கொண்டிருந்தன. அது வெள்ளி போல் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட வெள்ளை மாளிகை. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இருந்தது. அதில் வளைந்து வளைந்து கொடி படர்வது போல் மணிகள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த மனைக்குக் கருவறை என்று பெயர்.

அதில் தலைவிக்கான வட்டமான கட்டில் உள்ளது, அதன் அமைப்பு, அலங்காரம் ஆகியவற்றை விவரித்துக் கூறுகிறார் புலவர்,

குற்றமற்ற பல்நிறம் ஊட்டப்பட்ட மயிர்க்கற்றைகள் விரவி உருவாக்கிய  கட்டிலின் விரிப்பில் சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவினைப் பொறித்திருந்தனர்.  அதன் மீது அகன்ற காட்டிலே மலரும் முல்லையோடு பல்வேறு மலர்களையும் இடையே சேர்த்துப் பரப்பிய மென்மையான போர்வையை விரித்திருந்தனர்.  இப்படுக்கைச் மேலும் சிறப்புற, காதலோடு துணையைப் புணர்ந்த அன்னங்களின் வெண்மையான சிறகினை இட்டுச் செய்த இரண்டு மெத்தையைக் கட்டிலின் மீது பரப்பினர்.  அதில் தலையணைகளையும் இட்டிருந்தனர்.  மலரின் இதழ்கள் போன்று அமைந்த கஞ்சியிடப்பட்டுத் துவைத்து மடித்த ஆடையினைப் படுக்கையின் மீது விரித்திருந்தனர். வெற்றி பல கண்ட செல்வச் செழிப்பான மன்னனின் தலைவியல்லவா அவள்? அதனால் அவள் இருக்கும் அரணமனையும் அலங்காரமாக இருந்திருக்கிறது. 

என்றாலும் தலைவனைப் பிரிந்திருந்த தலைவி, நீண்டு தொங்கும் நுண்ணிய குழையினைக் களைந்துவிட்டு, குழையின்றி தாழ்ந்து தொங்கும் காதின் சிறு துளைகளில் தாளுருவி என்னும் சிறிய காதணியை அழுத்தியிட்டிருந்தாள்.  பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த முன் கைகயில் வலம்புரிச் சங்கால் செய்த வளையலை அணிந்திருந்ததோடு, காப்பு நூலும் கட்டியிருந்தாள்.  வாளை மீனின் பிளந்த வாயை ஒத்து விளங்கிய வளைந்த மோதிரத்தை அணிந்த சிவந்த விரலில், செந்நிறமுடைய சிறிய மோதிரத்தைச் செருகியிருந்தாள். பூ வேலைப்பாடு அமைய உருவாக்கப்பட்ட பட்டாடை உடுத்தியிருந்த உயர்ந்த வளைவினையுடைய அல்குலில் மாசு படிந்த அழகிய நூலால் நெய்யப்பட்ட ஆடையினை உடுத்தியிருந்தாள். 

இவ்வாறு, ஒப்பனை செய்யாத ஓவியத்தைப் போன்ற தலைவி, ஒப்பனைமிக்கக் கட்டிலில் தான் ஒப்பனை ஏதுமின்றி இருந்தாள்.

தோழிகளும் செவிலியும் அவளைத் தேற்றுகிறார்கள். ஆனாலும் தேறாதாளாய் மிகவும் கலங்குகிறாள்.
கட்டிலின் மேல் விதானத்தில் திங்களோடு என்றும் பிரியாது நிலைபெற்று விளங்கும் உரோகிணி எனும் நாள்மீனின் சித்திரம்  வரையப்பட்டிருந்தது.  அதனைக் கண்ட  தலைவி, தானும் உரோகிணி போன்று கணவரைப் பிரியாமல் வாழும் பேற்றினைப் பெறவில்லையே என்று பெருமூச்சுவிட்டாள். அவளின் குவளை மலர் போலும் இமைகளில் தங்கிய கண்ணீர் மிகுந்து விழ, அதனைத் தன் சிவந்த விரலால் கடைக்கண்ணில் ஒன்று கூட்டி, சில துளி கண்ணீரை விரலால் தெறித்துத் தனிமைத் துயரில் வருந்தினாள்.

செவிலியரும் தோழிகளும்

நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர, விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம      (166 - 168)

அன்பு மிகுந்த கலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத வருத்தம் தீரும் வகையில், தலைவனுக்குப் போரில் வெற்றியைத் இப்பொழுதே தருக என்று வெற்றியைத் தரும் கொற்றவையை வேண்டினர் என்பதாக அரண்மனைக்காட்சி சொல்லப்பட்டிருக்கிறது.

இனி அரசனின் நிலை

………………………மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
 நீள் திரள் தடக்கை நில மிசைப் புரள,                                                          
களிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர்,
ஒளிறு வாள் விழுப்புண் காணிய, புறம் போந்து,

ஒளி வீசும் முகபடாம் விளங்கும் போர்த் தொழில் பழகிய யானையின் நீண்ட திரண்ட கை, நிலத்தில் புரளுமாறு வெட்டி வீழ்த்திய பெரும் மறச்செயலைச் செய்தவர் மறவர்.  அவ்வீரர்கள், போரிலே வாளினால் பட்ட விழுப்புண்களைக் காண்பதற்றகாகப் பாசறையிலிருந்து வெளியே சென்றான் தலைவன்.

தலைவன் தன் இடப்பக்கத்து வீழ்ந்த அழகிய ஆடையினை எடுத்துத் தழுவி அணைத்துக் கொண்டான்.  தனது வலது கையினை வாளைத் தோளிலே கோர்த்துள்ள வலிமையான வீரனின் தோளின்  மேலே வைத்துக் கொண்டு, போரில் விழுப்புண்பட்ட வீரர்களின் மனம் விரும்பும் வகையில் முகம் மலர நோக்கினான்.  இவ்வாறு வீரர்களைப் பார்த்த வரும் மன்னன் மேல் மழைத்துளி படாதவாறு, நூலால் கோர்க்கப்பட்ட முத்துமாலைகள் தொங்கும் வெண் கொற்றக் குடை மறைத்து நின்றது.  நள்ளென்ற இரவுப் பொழுதிலும் துயில் கொள்ளாது பாசறையில் இருக்கிறான் என்பதாக இரண்டாம் காட்சி முடிகிறது.

நலங்கிளர் அரிவைக்கு மட்டுமல்ல மன்னனுக்கும்

…………………………விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம      (166 - 168)

வெற்றியைத் தந்து இப்பொழுதே இவர் துயர் முடிப்பாயாக! என்று முன்னதில் இருந்து முடிவினை பெற வைக்கிறார் புலவர்.

மன்னனுக்கு வெற்றியும் கிட்டிவிட்டது,  தலைவியோ காத்திருக்கிறாள். இவர்கள் இன்னல் தீர, மன்னன் இல்லம் ஏகுவான் என்ற நம்பிக்கையோடு நாமும் சற்று குளிர்காய்வோம்….

இந்நூலிலிருந்து மனத்தை அகற்ற முடியாமல்…

அடுத்த பதிவை விரைவில் தரும் ஆவலோடு

அன்புடன்
உமா…



Monday, 24 December 2018

சிறுபாணாற்றுப்படை


சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டுள் மூன்றாவது நூலாக இடம் பெற்றுள்ளது. இஃது ஆசிரியப்பாவால் ஆனது. 269 அடிகளைக் கொண்டது. குழல், யாழ் முதலான இனிமையான இசை தரும் கருவிகளை இசைப்பதில் (வாசிப்பதில்) திறம் பெற்றவர்களைப் பாணர் என்பர்.

மிடற்று வழியாக (குரல் வழியாக-வாய் வழியே) இன்னிசையை இசைப்பவர் (பாடுபவர்) இசைப்பாணர் ஆவர்.

யாழ் என்னும் இசைக்கருவியை இசைப்பதில் திறம் பெற்றவர்களை யாழ்ப்பாணர் என்பர்.

யாழ்ப்பாணர்களுள் பெரிய யாழை இசைப்பவர் பெரும்பாணர், சிறிய யாழை இசைப்பவர் சிறுபாணர்.

சிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். பாட்டுடைத் தலைவன் நல்லியக் கோடன்.

நல்லியக்கோடன் என்பவன் ஒரு சிற்றரசன். இவனைப் புகழ்ந்து பாடிய சிறுபாணன் ஒருவன் பரிசு பெற்று வருகிறான். இவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு சிறுபாணனை இம்மன்னனிடம் சென்று பரிசுபெறும் வகையில் நெறிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஒரு சிறுபாணன் வேறு ஒரு சிறுபாணனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.
பாணர்கள் வறுமைத் துன்பத்தில் தவிக்கின்றனர். அவர்களது துன்பத்தை மேலும் அதிகப்படுத்துவதாகப் பாலை நிலத்தின் இயல்புகள் உள்ளன. பாணர்களின் நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள துன்பத்தை மிகுதிப்படுத்திக் காட்டும் வகையில் பாலைநிலப் பின்னணியைப் புலவர் நத்தத்தனார் அமைத்துள்ளார்.

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று

நிலத்தைப் பெண்ணாகப் புலவர் உருவகம் செய்கிறார். அவள் மூங்கில் ஆகிய தோள்களை உடையவள். மலையில் இருந்து வீழும் அருவியே அவள் மார்பகத்தின் மேல் கிடக்கும் முத்துமாலை. அருவி, மலையைவிட்டு இறங்கி அருகில் உள்ள காட்டிற்குள் நுழைகிறது. பிறகு காட்டாறாக மாறுகின்றது.  இது கார்காலக் காட்சி.

ஆனால் இப்பொழுது கார் காலம் முடிந்து விட்டது. வேனில் காலம் தொடங்கி விட்டது. இக்காலத்தில் குறிஞ்சி மற்றும் முல்லை நிலக்காட்சி மாறுகிறது. மலையில் அருவிகள் இல்லை. காட்டாற்றில் நீர் இல்லை. அதனால் குயில்கள் பூம்பொழிலில் நுழைந்து விளையாடுகின்றன. தம் அலகால் பூக்களைக் கொத்துகின்றன. பூக்கள் உதிர்ந்து கரிய நிறத்தில் உள்ள ஆற்று மணற் பரப்பில் கிடக்கின்றன.

இத்தகைய மணல் பரப்பு வெப்பத்தால் சூடாகிக் கிடக்கிறது. அம்மணலில் கிடக்கும் பரல் கற்களும் (பருக்கைக் கற்கள் - சிறிய கற்கள்) வெப்பத்தால் சூடாகிக் கிடக்கின்றன. வெப்பம் மிகுந்த மணலும், பரல் கற்களும் அவ்வழியாக நடந்து செல்லும் பாணர்களின் கால்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தருகின்றன. இப் பாலை நில கொடுமையை

வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப….

காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப

என்ற வரிகளில் அழகாகக் காட்டுகிறார். பொதுவாக நண்பகல் சூரியனே மிகவும் சுடும். ஆனால் வேனிற் காலத்தில் காலைக் கதிரவனும் வெப்பம் மிகுதியாக செய்கிறது.

அடுத்த சில வரிகளில் விறலியரின் கூந்தல் (முடி) முதல் பாதம் (அடி) வரை புலவர் நத்தத்தனார் வருணனை செய்துள்ள அழகு நயமாக உள்ளது.

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்   15
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என   20
மால் வரை ஒழுகிய வாழை வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி  (13-22)

ஐது வீழ் இகு பெயல்
உலகிற்கு அருள் செய்ய வல்ல, மெல்லியதாய் வீழ்கின்ற மழையைப் போன்ற அழகு உடைய கருமையான கூந்தல்.
மென்மெய்யாக வீழ்கின்ற மழை, அருள் செய்கின்ற மழை போன்று அவள் கூந்தல் இருக்கிறதாம்.

இங்கு ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 3ம் பாடலில்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஎன்று தீங்கில்லாமல் பெய்யும் மழை கூறப்பட்டுள்ளது நோக்குதற்குரியது.
கெடுக்கும் மழையை நாமறிவோம் அல்லவா?

விறலியரின் கூந்தலை மழை மேகம் என்று மயில்கள் நினைத்தன. அதனால் மகிழ்ச்சியாகத் தம் தோகையை விரித்து ஆடின. அவர் கண்கள் நீலமணி போன்றவை. எயிறு என்றால் பல். நுங்கின் இனிய நீர் போன்று சுவையை உடையதாக எயிற்று நீர் அமைந்துள்ளது. ஓடி இளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கைப் போன்ற பாதம். சிலம்பு முதலிய அணிகலன்கள் ஏதும் இன்றி அழகற்று இருக்கிறது. இப்படி கேசாதிபாதம் விறலியரின் அழகு வர்ணிக்கப்படுகிறது. வருமையும் காட்டப்படுகிறது.

இத்தகு அழகு வாய்ந்த விறலியரின் மென்மையான இயல்பையும் புலவர் குறிப்பிடத் தவறவில்லை. விறலியர், முல்லை சான்ற கற்பும், மெல்லியல்பும், மான் நோக்கும், வாள் (ஒளி பொருந்திய) நுதலும் உடையவர் என்பதை,

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
என்னும் அடிகள் சுட்டுகின்றன.

இங்கு பாடினியின் அழகுக்கு புலவர் காட்டும், அடுக்கி வரும் உவமை, அடுக்குவமை புதுமையானதும் அறிந்து மகிழத்தக்கதுமாகும்.

மழை போல் கதுப்பு
கதுப்பு போல் மயில்
மயில் போல் சாயல்
சாயல் போல் நாய்நாக்கு
நாய்நாக்கு போல் (கால்)அடி
அடிதோயும் யானைக்கை போல் குறங்கு (கால்தொடை)
குறங்கு போல் உயரும் வாழை
வாழைப்பூ போல் ஓதி (கொண்டை)
ஓதி போல் பூக்கும் வேங்கை
வேங்கைபு பூ உதிர்ந்து கிடப்பது போல் மேனியில் சுணங்கு
சுணங்கணிந்த கோங்கம் பூ போல் முலை
முலை போல் பெண்ணை (பனங்காய்)
பெண்ணை நுங்கு போல் வெண்ணிற எயிறு (வெண்பல்)
எயிறு போல் குல்லைப்பூ
குல்லை போல் முல்லை
முல்லை சான்ற கற்பு
இப்பாணர்கள் வறுமைக் காரணமாக விரலியருடன் தமக்கு யாரேனும் உதவமாட்டார்காளா என்று எண்ணியவாறு பாலை நிலம் தாண்டி இரவல் பெறும் நோக்கோடு போகிறார்கள்.

இவர்களுக்கு நல்லியக் கோடனிடம் பரிசில் பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் பெற்ற வளத்தையெல்லாம் சொல்லி அவனிடம் சென்று வேண்டியதைப் பெருக என ஆற்றுப்படுத்துகிறான்,

கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
………
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று    50

என்ற வரிகளில் வஞ்சி நகரின் வளம் காட்டப்படுகிறது. இப்படி வளமான வஞ்சி நகரம் வறியது என்றென்னும் படி வழங்குவான் நல்லியக் கோடன்

அடுத்ததாக மதுரை நகரின் வளம் கூறுகையில்

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று..

தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்.

……….ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்   80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று

நற்றேர் செம்பியன் தூங்கெயில் கோட்டையை வென்று அதன் அடையாளமாகத் தன் கையில் காப்புத்தொடி அணிந்துகொண்டான். அந்தத் தூங்கெயில் ஓங்கி உயர்ந்த கதவினைக் கொண்டது. மேகம் அந்தத் தொங்கும் கோட்டையில் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும் அளவுக்கு அந்தக் வானளாவ உயர்ந்து தொங்கியது. அதனைக் கைப்பற்றிக்கொண்ட செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர். இங்கு தூங்கு எயில் எறிந்த என்பதில் சிவன் திரிபுறம் எரித்தது கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக கடையேழு வள்ளல்களின் கொடைத்திறன் போற்றப்படுகிறது. இந்த ஏழு பேர் இழுத்துச் சென்ற ஈகை என்னும் தேரை இழுக்கும் நுகத்தை நல்லியக்கோடன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் என்று பாடல் வளர்கிறது. அதாவது, அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் இருந்த ஒரே ஒரு வள்ளல் இவன் மட்டுமே எனப் போற்றப்படுகிறான்.

கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா   115

நல்லியக்கோடனை விரும்பி அவனிடம் முன்பொரு காலத்தில் நானும் எனது சுற்றத்தாரும் சென்றோம். அவனைப் புகழ்ந்து பாடினோம். அவன் எங்களது தகுதியை எண்ணிப் பார்க்கவில்லை. மாறாகத் தன்னுடைய தகுதியை எண்ணிப் பார்த்தான். தன் தந்தை தனக்கு வைத்துவிட்டுச் சென்ற வானளாவிய மலைபோன்ற செல்வத்தை அளவிட்டுக் கொண்டான். வழங்கினான்.

அன்று எங்கள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அதை மாற்றுவானாய் நல்லியக்கோடன் கன்னத்தில் கண்ணின் மதம் வழியும் யானையைப் பரிசாகத் தந்தான். அஞ்சாமைக் குணம் பூண்டிருக்கும் யானையைத் தந்தான். யானையோடு தேரும் தந்தான். இப்போது நாங்கள் செம்மாப்போடு யானைமீதும் தேர்மீதும் வந்து கொண்டிருக்கிறோம். நீங்களும் இங்கு வருந்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உங்களது சுற்றத்தாரோடு செம்மாந்த உள்ளம் கொண்டு அவனிடம் செல்லுங்கள்

என்றும், செல்லும் வழியிலுள்ள வேலூர் அழகும் ஆமூர் அழகும் சொல்லி நல்லியக் கோன் அவையில் வீற்றிருக்கும் அழகையும் அவன் குணமும் விவரித்துக்கூறி அவனிடம் நீங்கள் விரும்பிச் சென்றால் உங்களது வாழ்க்கையானது வளம் பெறத்தக்க வகையில் பரிசில் பெறுவீர்கள். போகும்போது நடந்து செல்லும் நீங்கள் வரும்போது தேரில் வருவீர்கள் என்று ஆற்றுப்படுத்துவதாய் அமைகிறது சிறுபாணாற்றுப்படை. இப்பாடலில் சிற்றரசனின் ஈகை குணம் அழகாக காட்டப்பட்டுள்ளது.

அடுத்த பதிவோடு விரைவில்
அன்புடன்
உமா