Showing posts with label எட்டுத் தொகை. Show all posts
Showing posts with label எட்டுத் தொகை. Show all posts

Saturday, 14 April 2018

நற்றிணை 2 குறிஞ்சி


வணக்கம்
முன்பு நாம் பார்த்த பாடல் மருத நிலப் பாடல். வயல், வயலைச்சார்ந்த நிலத்தின் அழகை இரசித்தோம்.
அடுத்த பாடல் நற்றிணையில் 182 வது பாடல்.
இது குறிஞ்சி நிலத்திற்குரியது. மலையும் மலைச்சார்ந்த இடமும் – சற்றே சுற்றி வருவோம் வாருங்கள்...
    
நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 
    
ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் 
    
பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 
    
சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள் 
கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 
    
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 
    
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 
    
கீழும் மேலும் காப்போர் நீத்த 
    
வறுந்தலைப் பெருங்களிறு போலத் 
தமியன் வந்தோன் பனியலை நிலையே. 

தலைவன் மணம்புரிந்துகொள்ள காலம் நீட்டித்தமையால் தலைவி வருந்துவதறிந்த தோழி, இரவுக்குறிக்கண் வந்த தலைவன் அறியுமாறு கூறுவதாக அமைந்த பாடல்.

தோழி ! நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 
தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது;

ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின்
ஓவியம் வரைந்தாற் போன்ற அழகிய அகன்ற இடங்கொண்ட வீட்டில்

பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 
சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள்
அழகிய பெண்ணான உன்னை, சிறந்த செல்வம் போல் காக்கும் தாயும் உறங்கிவிட்டாள்.

கீழும் மேலும் காப்போர் நீத்த 
வறுந்தலைப் பெருங்களிறு போலத் 
தமியன் வந்தோன் பனியலை நிலையே. 

கீழிருந்து தன்னை நடத்துவோரும், மேலமர்ந்து தன்னைச் செலுத்துவோரும் இல்லாது தனித்து வந்த சிறிய தலையினைக்கொண்ட பெரிய களிறினைப் போல் தனித்து வந்துள்ளான் தலைவன். நீ வருந்த வேண்டாம்.

கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 

கீழே விழுந்து இழந்து போன நல்ல அணிகலன் கிடைத்ததைப் போன்று மகிழ்ச்சியைத் தரக்கூடிய அவனது மார்பை சேர்ந்து மெல்ல வருவோமா, ஆராய்ந்து கூறுவாயாக!

நிலவும் மறைந்தது என்றது, களவின் கண் வருவதற்கு தலைவிக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சலையும்,
இருளும் வந்தது என்றது வழியில் தலைவிக்குண்டாகும் துன்பத்தையும் மறைமுகமாக எடுத்துக்கூறி மணமுடிக்க விரைவுப்படுத்துகிறாள்.

களிற்றானையோடு தலைவனை ஒப்பிட்டமை பெருமிதம் கருதியமையும், அவனைக் காணுதல் தொலைத்தப் பொருளை மீண்டும் அடைந்தால் வரும் இன்பத்தை போன்ற இன்பந்தரும் என்பது தலைவன் பால் கொண்ட அன்பினையும் உணர்த்தும்.
என்றாலும் காப்போர் நீத்த களிறு என்றதனால், தன்னை வழி நடத்துவோரில்லது, மணமுடிக்க காலம் நீட்டிக்கின்றான் என்பதையும் மறைமுகமாக எடுத்துணர்த்துகிறாள்.

ஓவியத்தைக் குறிக்கும் ஓவம் என்ற சொல் சங்க இலக்கியதில் பல இடங்களில் பயிலபட்டுள்ளது. ஓவியம் தீட்டப்பட்ட சித்திர மாடங்களும், அந்தபுரங்களும் இருந்ததை எல்லாம் சங்க இலக்கியங்களிலிருந்து நாமறியலாம்.

அடுத்த பாடல் குறிஞ்சி நிலத்தின் வளத்தை அழகாக கட்டும்

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை 
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் 
திரையணற் கொடுங்கவுள் நிறைய முக்கி
வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தையூ ணிருக்கையில் தோன்று நாடன்
வந்தனன் வாழி தோழி யுலகங்
கயங்கண் அற்ற பைதறு காலைப்
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே.
இதன் பொருள்
தோழீ! மலைப்பக்கத்தில் கொடிச்சியால் காக்கப்படுகின்ற பசிய பயிரை அறுப்பதற்கு முன்பாகவே பறித்து கொய்து கொண்ட பெண்குரங்கானது, பாய்தலன்றி அறியாத ஆண்குரங்கினோடு நல்ல மலை மீதேறி, மழைப்பெய்த்தனால் தன் முதுகு புறம் நனைந்தவாறு அமர்ந்து அப்பயிரை கயக்கி தூய்மையாக்கி தன் கவுள் நிறைய உண்டவாறு இருப்பது, தை நோன்புடையவர் நீரில் குளித்த ஈரத்துடன்,உணவை உண்பது போல இருக்கிறது.
அத்தகைய நாட்டைச் சேர்ந்த உன் தலைவன், உலகத்துக் குளங்கள் வரண்டுபோய், ஈரமில்லாமல்,உலர்ந்து வாடும் இளம் நெற்கதிர்களுக்கு நடு இரவில் மழை பொழிவது போல, மிகுந்த இன்பந்தரும் திருமணச் செய்தியுடன் வந்தான்! அவன் வாழ்க! என்பதாம்
தினைக் கதிர்களை மந்தி, கடுவனுடன் உண்பதுபோல, தலைவி மகிழ்வுடன் தலைவனுடன் திருமணம் செய்துகொண்டு மனையறம் புரிவாள் என்பது உள்ளுறை உவமமாக கூறப்பட்டுள்ளது.
பயிற் முற்றும் காலமே, பெண் கொள்ளும் காலம் என்பது பண்டைய மரபு. இப்படி மிக அழகாக இயற்கையோடு இயைந்த மக்கள் வாழ்க்கையையும் மரபையும் பண்பையும் சங்க இலக்கியங்களிலிருந்து நாமறியல்லாம்.

அறிவோம், சுவைப்போம்
அடுத்து ஒரு நெய்தல் நில நற்றிணை பாடலுடன் விரைவில்..
அன்புடன்
உமா

Sunday, 8 April 2018

நற்றிணை 1 மருதம்

'வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் ' என்ற  ஒளவையார் வாக்கினை மனத்தில் இருத்தி , தமிழர்களின் மாபெரும் செல்வமான சங்க பாடல்கள் சிலவற்றை பகிர்வதன் மூலம் அதன் நலன் பாராட்டுவது மட்டுமின்றி நம் உளம் நலம் பெறும் என்ற நோக்கத்தில் சில பாடல்களை பகிர முனைந்துள்ளேன்.

கவிதை தவிர பிற எழுதுவதில் இது எனது முதல் முயற்சி.  எனை வளப்படுத்தும் வகையில் தங்கள் மறுமொழி இருக்குமாயின் மகிழ்வேன்.

சங்க இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள்ள பல இணைய பக்கங்கள் உள்ளன.

சங்க இலக்கியம் பெரும்பாலும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெங்கீழ் கணக்கு என பெரும் பிரிவுகளைக் கொண்டது.

முதலாவதாக நற்றிணையில் சில பாடல்களை அறிவோம் சுவைப்போம்..

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை அகப்பொருள் பற்றியது.
சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாது தலைவன், தலைவி, தோழி என்பார் கூற்றாக பாடல்கள் அமைக்கபட்டிருக்கும்.

சங்க இலக்கியங்கள் தமிழரின் வாழ்க்கையை இப்பாடல்கள் மூலம் படம் பிடித்துக் காண்பிக்கின்றன. தலைவனும் தலைவியும் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும், தோழி என்பாள் அறிவுக்கூர்மையும், மிகுந்த பண்பும் உடையவளாகவும் காட்டப்படுகின்றனர்.

சுவைபோம் வாருங்கள்.

நற்றிணை 210 வது பாடல்

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

இது தலைவனை நோக்கி தோழியின் கூற்றாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் மிளைகிழான் நல்வேட்டனார்.  

சங்க இலக்கியத்தில் பாடல் எழுதியவர் பெயர் தெரியாதிருப்பின் அவர் தம் பாடலின் மிகச்சிறந்த வரியாலோ அல்லது அவர் தனிச்சிறப்போடு எடுத்துரைத்த உவமையினாலோ அறியப்படுவார்.. இந்த அழகை நாம் வியக்காமலிருக்க முடியாது.

பாடலுக்கு வருவோம்...
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்... அக்காலத்தில் ஆளுயர வளரும் நெற்கதிர்களை அறுவடை செய்த உடனேயே மறுபோகம் விளைவிக்கப் படுகிறது. அப்படி  நெற்கதிர்கள் வெட்டப்பட்டு அதன் அரிகால் அல்லது நெற்றாளின் அடி, தாளடி மட்டும் இருக்கும் வயல் அகலமானதாய் தெரிகிறது.

மறு கால் உழுத ஈரச் செறுவின்,
அந்த வயலில் மறுபடியும் உழுது , அது ஈரமானதாய் இருக்கும் பொழுது

வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
விதைப்பதற்காக விதை கொண்டு போனவர்கள், விதைத்து முடித்து விதை எடுத்து வந்த வட்டியில் பற்பல மீனொடு திரும்பக்கூடியவாறு வளமும் மிக்க வருவாயும் கொண்ட ஊரினைச் சேர்ந்தவனே!
என தலைவனை அழைக்கிறாள் தோழி..

வயலில் மீன்கள் வாழும் வகையில் நீர் வளம் மிக்கதாம் அவன் ஊர்.
இதன்படி,
• அறுவடையின் போதே மீண்டும் விதைக்கப்பட்டது
• அறுவடையின்போதும் வயலில் மீன் வாழுமளவு நீர் இருந்தது
• விதைப்புக்காக, நீரை வடித்தனர். அப்போது மீன்கள் சிக்கின
-ஆகிய செய்திகளை உணர முடிகிறது.
பண்டைய விவசாய முறைகளை எடுத்தியம்பும் பல பாடல்ள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன.


....நெடுநீர் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் பிறழும் – (புறம் 287)
என்ற புறப்படலும்

கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளை கழனி – புறம் 396
(அதாவது வயலில், நீரின் அடியில் மீன், மேலே குவளை மலர், இவற்றுக்கிடையே நெற் பயிர்)

என்ற மற்றொறு புறப்பாடலும் வயலில் மீன்கள் வாழும் நீர் வளச்சிறப்பை எடுத்துரைக்கின்றன..

இபபடி விதைக்கச் சென்றவர்கள் மீனொடு திருப்புவது போல் பரத்தையரொடு நீ திரும்பாதே...
என்பது தோழி வஞ்சினமாய், மறைமுகமாய் தலைவனுக்கு சொல்லும் செய்தி..

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;

நெடிய மொழிதல் -- தலைவனின் வருகையை தெரிவிக்கும் போது அவனது வீரச் செயல்கள்,அவன் மேன்மையான பண்புகளைச்சொல்லி இன்னார் வருகிறார் என உரைப்பது வழக்கம்...
இப்படி நெடிய பெயரால் அழைக்கப்படுவதோ அல்லது தேர், யானை போன்றவற்றில் ஏறி செல்லுதலாகிய அருஞ்செயல்களெல்லாம் செல்வமல்ல, அவை தான் முன்பு செய்த வினைப்பயனே.

சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

 சான்றோர் செல்வம் எனக்கூறுவது தன்னை அடைக்கலமாக வந்தாரின் துன்பத்திற்கு அஞ்சி , அவர் துன்பப்படாமல் காத்தலாகிய பண்பே ஆகும் எனத் தோழி கூறுகிறாள். இதன் மூலம் தலைவனைப்பிரிந்த தலைவியின் துன்பத்தினைப் போக்கி காத்தலே தலைவனுக்கு உகந்த செயல் என்பதை அறிவிக்கிறாள் தோழி. 
அக்காலத்தில் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்ய அஞ்சினர் மக்கள்.
இப்பாடலில் மருத நில வளமும், அக்கால மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும் அவர்தம் பண்பு நலனும்  மிக அருமையாக விளக்கப்பட்டிருப்பது எண்ணி வியக்கத்தக்கது.

சற்று இந்த வளமிக்க மருத நிலத்தில் பண்புடைத் தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் வாழ்வை கற்பனை செய்து பாருங்கள்..

இன்று ஆறில்லை, நீரில்லை, வரண்ட வயலில் விளைச்சலில்லை ...
குறிஞ்சி, முல்லை,மருதம் , நெய்தல் என்ற நானிலங்களில்லை.
அத்தனை நிலங்களும் பாலையாய் பொய்த்து போன நிலை...


இன்று விவசாயத்தைப்பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் வளரும் தலைமுறை..
எங்கு தவறினோம்...

சிந்திப்போம்...  சிந்தனை செயலாகலாம்.... முயற்சிப்போம்

இன்னுமொரு பாடலுடன் விரைவில்

அன்புடன் 
உமா...