Monday 7 May 2018

ஐங்குறுநூறு - மருதம் – 2


மருத நில பாடலில் அடுத்ததாக
வேழப் பத்து

மருத நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று வேழம் எனக் குறிக்கப்படும் வேழக் கரும்பு. இவ்வேழக் கரும்பு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி வேழப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

மனைநடு வயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்னும் யாமே;
அல்லன் என்னும்என் தடமென் தோளே!

(வயலை = பசலைக்கொடி; வேழம் = வேழக் கரும்பு)
என்ற பாடலில் வீட்டில் நட்ட பசலைக்கொடி வெளியே வேழக்கரும்பில் சுற்றிப் படர்வது போல் தலைவன் பரத்தையை நாடிச் சென்றான். அவன் அப்படிச் சென்றாலும் பிறர் அலருக்கு வெட்கி, தலைவன் நல்லவன் என்று நாங்கள் கூறுகிறோம்; ஆனால் பிரிவால் மெலிந்துள்ள என் தோள்கள் அவன் நல்லவனல்லன் என்று சுட்டுகின்றன என்று கூறுகிறாள்.

மற்றொரு பாடலில்

கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை...

எங்கிறாள். 
அஃதாவது கரையிலிருக்கும் வேழம் வயலிலுள்ள தீங்கரும்பைப் போல் பூக்கும் துறையுடை ஊரன் என்றது தலைவன் பொது மகளிருக்கு குல மகளிரைபோல் சிறப்புச் செய்கிறான் என்பதாம். அவனது கொடுமையை பெரிதும் தான் பொறுத்துக் கொண்டாலும், அணிகளையெல்லாம் இழக்கும் படி மெலிந்த என் தோள்கள் பொறுத்துக்கொள்ளவிலை என்கிறாள்

புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்,
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிதாகின்று, என் மடங்கெழு நெஞ்சே.

இப்பாடலில்
முட் புதரிலே நின்று அதன் மேல் அசையும் மணமற்ற இழிந்த வேழ வெண்பூ தூயதான வானத்தில் பறக்கும் சிறந்த அன்னம் போலக் காணப்படுதல் போன்று இவனுக்கும் இழிகுலத்தில் தோன்றி நடிக்கும் பரத்தையர், தூயவரும் சிறந்தவருமாகிய குலமகளிர் போலக் காணப்படுகின்றனர் என்பதாம்.

இப்படி கருப்பொருள் வேழக்கரும்பை உவமையாகக் கொண்டு உள்ளுரையாக பரத்தமையைக் கொண்டொழுகும் தலைவன் செயல் ஏசப்படுகிறது.

மூன்றாவது பத்து களவன் பத்து

களவன்= நண்டு
நண்டு இடம் பெற்ற பத்துப் பாடல்களின் தொகுதி களவன் பத்து என்று குறிக்கப்படுகிறது.

முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்துறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்!

என்ற பாடலில் ஆம்பல் தண்டினை அறுக்கும் நண்டு உள்ளுறைக்காக இடம் பெற்றுள்ளது. தலைவன் தனக்குப் பரத்தைத் தொடர்பு இல்லை என்று தெளிவுபடுத்தியும் உன் கண் ஏன் சிவக்கிறது என்று தோழி தலைவியைக் கேட்கிறாள்.

களவன் ஆம்பல் அறுக்கும் 'தண்துறை யூரன்' எனறது, நீரில் உள்ள நாண்டு அங்கிருக்கும் ஆம்பலை அறுக்கும். அவ்வாறே, தலைவனும் தன்னுடைய கரை கடந்த காமத்தினால் கொண்ட மடமையினலே, இல்லறத்தின் இனிமையான மனைவாழ்வைச் சிதைத்தனன் என்பதாம். எனவே, தலைவி, அவன் தெளிவித்தாலும் தெளியாளாகித் தான் மெலிந்தனள் என்பதுவாம்.

தோழிக்கு உரைத்த பத்து
அக இலக்கியத்தில் இன்றியமையாத இடம் வகிப்பவள் தோழி. தோழியே தலைவிக்கு உற்ற துணையாவாள். தலைவி, தோழியிடம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கூற்றுகள் (பேச்சு) நிகழ்த்திய பாடல்களின் தொகுதி தோழிக்கு உரைத்த பத்து என்று குறிக்கப்படுகிறது.

புலவிப் பத்து
மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடல். ஊடலின் வேறு பெயர் புலவி. புலவியை மையமாகக் கொண்டு அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி புலவிப் பத்து என்று வழங்கப்படுகிறது.

தோழி கூற்றுப் பத்து
தோழி கூற்றில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தோழி கூற்றுப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

கிழத்தி கூற்றுப் பத்து
தலைவனின் புறத்தொழுக்கம் (பரத்தையர் ஒழுக்கம்) கண்ட தலைவி, அவனோடு புலந்து உரைக்கும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிழத்தி கூற்றுப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

புனலாட்டுப் பத்து
ஆற்று நீரில் விளையாடுதல் என்பது மருத நிலத்துக் கருப்பொருளாகும் விளையாட்டில் ஒன்று. ஆற்று நீரில் விளையாடுதலே புனலாட்டு என்பதாகும். புனலாட்டு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி புலனாட்டுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

புலவி விராய பத்து
புலவி குறித்துத் தலைவி, தோழி, பரத்தை ஆகியோர் கூறுவதும் வாயில் மறுத்துக் கூறுவதுமாக வரும் பத்துப் பாடல்களின் தொகுதி புலவி விராய பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

எருமைப் பத்து
மருத நிலத்தின் கருப்பொருள்களில் ஒன்று எருமை. எருமை இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி எருமைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

நெறிமருப்பு எருமை நீல இரும்போத்து 
வெறிமலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும்
 
கழனி ஊரன் மகளிவள்
 
பழன வெதிரின் கொடிப் பிணையலளே!

(இரும்போத்து = பெரிய ஆண் விலங்கு; மயக்கும் = சிதைக்கும்) இந்த பாடலில்
வளைந்த கொம்புகளையுடைய கரு நீல ஆண் எருமை, மிக்க நறுமணமுள்ள, குளத்தில் வளரும் வெள்ளை ஆம்பலின் மலர்களைச் சிதைக்கும் வயல்கள் நிறைந்த ஊரனின் மகள் இவள். வயலில் உள்ள கரும்பு மலர்களை மாலையாகப் பின்னி அணிந்துள்ளாள். இங்கு எருமை ஆம்பலை அழிக்கும் என்றது நற்றன்மையை ஆராயாது கெடுக்கும் தன்மையன் தலைவன் என்றதாம். கரும்பின் பூவைச் சூட்டினாள் என்பது தலைவி பேதையாக உளாள் என்பதாம்.


ஐங்குறுறூறின் பிற திணைகளுக்கான பாடலுடன்...

மீண்டும் விரைவில்...

அன்புடன்
உமா...

No comments:

Post a Comment