Showing posts with label பதிற்றுப்பத்து. Show all posts
Showing posts with label பதிற்றுப்பத்து. Show all posts

Saturday, 28 July 2018

பதிற்றுப் பத்து - ஆறாம் பத்து முதல் மற்ற தொகுப்புகள்


ஆறாம் பத்து

ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன்  ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். ஆரியர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். வானவரம்பன் என்பது இவனது இயற்பெயர். இவனது வரலாற்றுச் சிறப்புகளை வடுஅடு நுண்அயிர், சிறுசெங்குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்குதடக்கை,  மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது. இப்பத்தினைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார். காக்கை கரையின் விருந்து வரும் என்று சிறப்பித்து பாடியதால் இப் பெயர் பெற்றார்.

வடுஅடு நுண்அயிர்

வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,

கடற் பரப்பில் வண்டுகள் நகர்வதால் ஏற்பட்ட வடுக்களை ஊதைக் காற்றானது அழிக்கும். வடு என்பது எளிதில் மறையாதது, எளிதில் மறையக்கூடிய மணற்கோடுகளை வடு என்றும், மறைத்தலை அடுதல் அல்லது கொல்லுதல் என்றும் சிறப்பித்துப் பாடியதால் இப்பெயர் பெற்றது.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மகிழ்ந்தாடித் திளைப்பதில் மென்மையானவன். என்றாலும் போரில் கடுமையானவன் என்கிறது இப்பாடல்.

வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என,
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?
மழை தவழும் பெருங் குன்றத்து,        
செயிருடைய அரவு எறிந்து,
கடுஞ் சினத்த மிடல் தபுக்கும்
பெருஞ் சினப் புயல் ஏறு அனையை;

சேரலாதன் விறலியர் நடனம் கண்டு களித்தவாறு இருப்பதால் இவன் மெல்லியன் என இவனை அறியாதார் நினைப்பர். ஆயின் இவன் மழைமேகம் தவழும் பெரிய குன்றத்தில் சினங்கொண்ட நாகப்பாம்பைக் கொன்று முழங்கும் இடியைப் போல பகைவரைத் தாக்குபவன் என்று சேரனின் வீரச் சிறப்பு சொல்கிறது முதல் பாடல்.

வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,
உள்ளியது முடித்தி; வாழ்க நின் கண்ணி

நீ வள்ளல் ஆதலால் உன்னைக் காண வந்துள்ளேன். நீ நினைத்ததை முடிக்கும் ஆற்றல் மிக்கவன் நீ. நான் நினைத்துவந்ததை முடித்துவைக்க வேண்டும். நீயும் உன் குடிப்பூவும் (பனை) நெடிது வாழவேண்டும் என்று மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துவதாய் அமைகிறது ஒரு பாடல்.

மாற்றொருப் பாடலில்

இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்,
கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை,  5
தண் கடல் படப்பை நல் நாட்டுப் பொருந!

பந்தர் துறைமுகம் கடலலை மோதும் ஊர். நல்ல கப்பல் வணிகத்தால் பெற்ற செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கும் ஊர் பந்தர். தாழம்பூ கமழும் கானல் பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக ஊர் இது. இந்தப் பந்தர் நகரைத் தலைநகராகக் கொண்ட நாட்டைப் போரிட்டு வென்று தனதாக்கிக்கொண்டவனே!
என் பந்தர் என்ற துறைமுக நகரைப்பற்றிய செய்தி பதியப்பட்டிருக்கிறது.

அடுத்து
அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி
அஞ்சே றமைந்த முண்டை விளைபழம்
ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும்

மொய்க்கும் இனிய சுவையுள்ள சதைப்பற்றுச் சேறு உடையதாய், வாளால் அறுக்கமுடியாத அடுமரம் கொண்டதாய், விளங்கும் பழம் முண்டைப்பழம் (முண்டம்-பழம், நேந்திரம்பழம், நேந்திரவாழைப் பழம்). வழிநடை மேற்கொள்பவர்களுக்கு உணவாகி அவர்களின் களைப்பைப் போக்கும்

என அக்கால மக்களின் அறச்செயல் காட்டப்பட்டிருக்கிறது.

வழிச்சாலைகளில்        இனிய      பழமரங்களை     அறத்தின் பொருட்டுவைத்து     வளர்ப்பது    பண்டையோர்    இயல்பு.   வழிச்செல்வோர், அப்பழங்களையுண்டு,  வழி வருத்தம் போக்கிக் கொள்வது பயன். இக்காலத்தில் இப்படிப்பட்ட அறங்கள் தொலைந்துப் போயின.

இன்னும் ஆறாம் பத்தில் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான். பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான். வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான். மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான். கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான் என்றச் செய்திகள் பல காணக்கிடைக்கின்றன.

ஏழாம் பத்து

பாடினோர்     : கபிலர்
பாடப்பட்டோர்: செல்வக் கடுங்கோ வாழியாதன்

பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
என்ற பாடலில்

நன்கு முற்றி பழுத்த பலா பழத்தின் வெடிப்பிலிருந்து வெளிவரும் தேனை வாடைக்காற்றானது தெரிக்கும் என நாட்டின் வளமும்
ஓவியம் வரைந்தார் போன்று அழகிய மனையில் ஓவியப் பாவையைப் போன்று விளங்கும் நல்லாளின் கணவன் என்பதில் ஓவியக் கலை அறிவு அன்று இருந்தது என்பதைத் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

புலர்ந்த சாந்திற் புலரா வீகை
.
ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்

என்ற மிக அழகிய வரிகளில் சேரன் தன் மார்பில் அணிந்த சாந்தின் ஈரம் வேண்டுமானால் காய்ந்துப் போகும் ஆனால் அவன் என்றும் இரப்பார்க்கு ஈயும் ஈரநெஞ்சினைக் கொண்டவன் என்றும்
அது மட்டுமின்றி ஈதலால் தன் செல்வம் குறைவதைப் பற்றி இரங்காதவன்,வருத்தம் கொள்ளாதவன். மேலும் ஈவது மேலோர் கடமை என்றுணர்ந்தவனாதலால் ஈவதால் மகிழ்வும் கொள்ளான் என மிகச்சிறந்த அறம் இங்கே காட்டப்பட்டுள்ளது அறிந்து உணரத்தக்கது.
இப்படி
செல்வக்கடுங்கோ வாழியாதன் காடுகளை அழித்து நாடாக்கி ஊராக்கினான். பெரும் படையிடன் பகைவர்களை ஓட்டிப் பல போர்களில் வெற்றி கண்டான். நாட்டை விரிவு படுத்திய வேள்வி செய்தான். வேள்வி செய்த புரோகிதன் மாயவண்ணன். அவன் காட்டிய அறவழியில் அரசன் சென்றான். அத்துடன் அவனைப் பெரிதும் மதித்து அவன் ஒதும் பணிக்காக, நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரை அவனுக்குத் தானமாக வழங்கினான். அத்துடன் அவனைத் தன் அமைச்சனாகவும் அமர்த்திக்கொண்டான். வளமான உள்ளத்தோடு குற்றமற்றவனாக இளங்கியவன் இந்தச் செல்வக்கடுங்கோ வாழியாதன்
என ஏழாம் பத்தும் அதன் பதிகமும் செல்வக்கடுங்கோ வாழியாதன் பற்றி குறிக்கின்றன.

எட்டாம் பத்து

எட்டாம் பத்தைப் பாடிய புலவர் அரிசில் கிழார். இவர் குற்றமற்ற உண்மையைப் பேசுபவர் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளார். பாடப்பட்டோன் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை. அதியமானை வென்றான் என்று பதிகம் குறிப்பிடுவதிலிருந்து தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்றும் இவனைக் குறிப்பிடுவர். இந்தச் சேரனின் தந்தை செல்வக் கடுங்கோ. ஏழாம் பத்தின் தலைவன்.

அறாஅ யாண ரகன்கட் செறுவின்
அருவி யாம்ப னெய்தலொ டரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின்

இங்கு மிகப் பெரியதான அகண்ட வயலில் நெல்லை ஆறுக்கும் போது அதனோடு அங்குப் பூத்திருக்கும் ஆம்பலையும், நெய்தலையும் அறுத்து கட்டி வைப்பர் என கூறப்பட்டுள்ளது. ஆம்பலும் நெய்தலும் நீர்நிலைகளில் மலர்க்கூடிய மலர்கள். இங்கும் வயல்களில் நீர் நிறைந்த வளம் பற்றியச் சங்க கால குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் கழுவுள் ஆண்ட தோட்டிமலை (தொட்டபெட்டா) கோட்டையைக் கைப்பற்றினான் என்பதும் இப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.

இப்பத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை ஆளுகைக்கைக்கு அடங்காத நாட்டின் பண்டைய வளமும், போருக்குப் பின்னர் அடையும் பாழ்நிலையும், தன் பகையரசன் ஏறி வரும் யானையின் தந்தத்தை வெட்டித் தன் அரியணைக்குக் கால் செய்துகொள்வான் என்று அவன் வீரம் ,கொடை முதலியன பற்றி கூறப்பட்டிருக்கின்றன.

ஒன்பதாம் பத்து

இந்தத் தொகுப்பில் உள்ள பத்துப் பாடல்களைப் பாடியவர்பெருங்குன்றூர் கிழார். இந்தப் பத்தில் பாடப்பட்டவன்இளஞ்சேரல் இரும்பொறை. இளஞ்சேரல் இரும்பொறை ஐந்தெயில் என்னும் கோட்டையை வென்று துகளாக்கினான். அந்தக் கோட்டை அரிய காடுகளுடன் மலைப்பகுதியில் இருந்தது. அந்தப் போரில் கோட்டைக்கு உரிய அரசன் விச்சி என்பானும் அவனுக்குத் துணைநின்ற இரு பெரு வேந்தர்களும் (சோழன், பாண்டியன்) தோற்றனர் என்று பதிகம் கூறுகிறது.

ஈரம் உடைமையின் நீரோர் அனையை
அளப்பரு மையின் இருவிசும்(பு) அனையை     15
கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை
பல்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை

என்ற பாடலில் சேரன்

மன்ன! உன் நெஞ்சில் ஈரம் இருப்பதால் நீ நீர் போன்றவன். அளக்க முடியாதவனாக விளங்குவதால் விசும்பு போன்றவன். கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வம் படைத்தவனாக விளங்குவதால் பெருகிய நீருள்ள கடல் போன்றவன். பல மீன்களுக்கு இடையே தோன்றும் நிலாவைப் போல நீ உன் சுற்றத்தார்களுக்கு இடையே தோன்றுகிறாய் என்று அவன் ஈரம், கொடை பற்றி மிக அழகாக நீர், நிலம், ஆகாயம் ஆகியவாற்றோடு பொருத்தி கூறியுள்ளமை அறியதக்கது. மேலும் இப்பாடலில்

நின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ()என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே செருமிக்(கு)          55
உரும்என முழங்கும் முரசின்
பெருநல் யானை இறைகிழ வோயே.

நீ வாழும் நாள் ஒவ்வொன்றும் மாதம் போல பெருகட்டும். மாதம் ஒவ்வொன்றும் ஆண்டு போல் பெருகட்டும். அண்டு ஒவ்வொன்றும் ஊழி போல் பெருகட்டும். ஊழி ஒவ்வொன்றும் வெள்ள-ஊழி போல் பெருகட்டும். இப்படிப் பெருகவேண்டும் என்று வாழ்த்திக்கொண்டு உன்னைக் காண வந்துள்ளேன். இடி போல் முரசு முழங்க, பெரிய நல்ல யானைமீது போர்களத்தில் இருக்கும் உன்னைக் காண வந்துள்ளேன் என்று மிக அழகாக வாழ்த்து கூறுகிறார் புலவர்.

பதிற்றுப் பத்தின் இத்தொகுப்புகளில் சேரமன்னர்களின் வீரம், கொடை, அகவாழ்வு ஆகியவற்றோடு நாட்டின் வளமும், மக்களின் ஒழுக்க வழக்கம், அறம் ஆகியவையும் அறியமுடிகிறது.

தமிழின் தொன்மையையும் தமிழரின் மிகச் சிறந்த வாழ்க்கையையும் காட்டும் சங்க இலக்கியங்கள் அனைவரும் படித்து அறிந்து மகிழவேண்டியவை..

அறிவோம், சுவைப்போம்.

மீண்டும் அடுத்த பதிவோடு விரைவில்
அன்புடன்
உமா

Monday, 25 June 2018

பதிற்றுப்பத்து – நான்காம் பத்து.


நான்காம் பத்து
பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்
பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்

முதலில் பத்து பாடல்களில் கூறப்படும் நிகழ்வுகளை ஒருங்கே கொண்ட பதிகத்தைப் பார்ப்போம்,

பதிகம்

ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்(து)
ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின் 5
பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ
உருள் பூங் *கடம்பின் பெருவாயில் நன்னனை*
நிலைச்செருவி னால்தலை யறுத்(து)அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் 10
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: கம்ழகுரற் றுழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடுபறந்தலை, வான்மயங்கு கடுந்தார், வலம்படு வென்றி, பரிசிலர்வெறுக்கை, ஏவல் வியன்பனை, நாடுகானவிர்சுடர். இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: நாற்பதுநூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆளவ்திற் பாகங்கொடுத்தான் அக்கோ.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

கருத்து

இந்தப் பத்தின் பாடல்-தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்.
இவன் தந்தை சேரலாதன்.
தாய் பதுமன் என்பானின் மகள்.
போர்முனையை நடுங்கச் செய்வதற்கென்றே பிறந்தவன்.
போர்முனையால் புகழை வளர்த்துக்கொண்டவன்.
பெற்றோர் ஊழ்வழியே இவனுக்குச் சிறப்பு வந்தது.
படையுடன் சென்று பூழி நாட்டைத் தாக்கி அந்த நாட்டை நட்பு-நாடாக ஆக்கிக்கொண்டான்.
கடம்பின் பெருவாயில் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த நன்னன் ஆற்றலை அறுத்தெறிந்தான். அவன் காவல்மரம் வாகையை வெட்டி எறிந்தான்.
ஓடும் இரத்தம் யானையையே இழுக்கும்படிப் பல போர் செய்து செங்கள வேள்வி செய்தான்.
வாடிய குடிமக்களின் வளத்தைப் பெருக்கினான். இவன்மீது 10 பாடல்களைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார்.
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். 
பாடிய புலவருக்கு 40 நூறாயிரம் (40,00,000) பொன் பரிசாகத் தந்தான். அத்துடன் தன் ஆட்சி வருவாயில் ஒரு பகுதியைக் கொடுத்தான். 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

பாடல்களைச் சுருக்கமாக காண்போம்.

முதல் பாடல்  - கமழ்குரல் துழாய் –

நறுமணம் வீசும் பூங்கொத்துக்களையுடைய துளவமாலையை அணிந்த திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து உண்ணா நோன்பிருந்து வணங்குவர். தனித்தனிப் பூக்களாக எடுத்துத் தொடுக்கப்படாது கொத்துக் கொத்தாக வைத்துத்  தொடுக்கப்படும்  சிறப்பும்,  மிகச் சிறிதாகியதும் மணங்கமழும் மாண்புமுடைய துழாயை, துளசியை கமழ்குரற் றுழாய் எனச் சிறப்பித்தமையால், இப் பாடல் இப் பெயர் பெற்றது. இப்பாடலில் உண்ணாநோன்பிருந்து திருமாலை வழங்கும் வழக்கம் காட்டப் பட்டிருக்கிறது. மேலும்

மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு
கோடுகூடு மதிய மியலுற் றாங்குத்
துளங்குகுடி விழுத்துணை திருத்தி முரசுகொண்
டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு

நீல நிற மணியின் வண்ணம் கொண்ட கரிய இருளானது அகலும் படி கோடு கூடு மதியம் என்பது -  பிறை நிலாவின் இரு கோடுகளும் கூடும் போது முழுநிலவாகும். இம்முழு நிலவு இருளகற்றி   ஒளியைச்   சொரிந்து  செல்வதுப் போல,  இச் சேரமானும்   குடிமக்களுக்கு   உண்டாகியிருந்த   துன்பங்களை எல்லாம்    நீக்கி,அருளைச்     செய்து,     திருமாலை     வழிபடுதல்      முதலிய நல்லொழுக்கம் நிலவும் படிச்செய்தான், எனவும்
இவன் மனைவி வானத்து மகளிருள் செம்மீன் (அருந்ததி) போன்ற கற்புடையவள். அது அறம்சால் கற்பு. தழைத்த கூந்தலை உடையவள். அந்தக் கருங்கூந்தலுக்கு விளக்குப் போல நெற்றியைக் கொண்டவள். வயிற்றுக் கொப்பூழ் வரையில் தொங்கும் பொன்னாலாகிய இழை (தாலி ஆகலாம்) அணிந்தவள் மற்றும் இவன் படை வீரர்கள் புறமுதுகிட்டு ஓடும் பகையோரின் மேல் போர்க்கருவிகளை எய்யாத அறம் கொண்டவர்கள் எனவும் பலவாறு இச்சேரமன்னனின் திறம் போற்றப்படுகிறது இப்பாடலில்.

இரண்டாவதுப்பாடல் - கழையமல் கழனி

மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுதிப்படுத்தி இந்தப் பாடல் கூறுகிறது.
முடந்தை   நெல்லின்    கழையமல் கழனி  - வளைந்த    கதிர்களையுடைய    நெல்லின்   மூங்கில்     போலும் தாள்கள்  செறிந்த கழனிகள் பொருந்திய; பிழையா விளைச்சலைக் கொண்ட நாடு, அப்படிப்பட்ட நாடுகளை தன்னகப்படுத்துக்கொண்டவன் என்றாலும் தன்னைப் பழிக்கும் பகைவரையும் சினக்காது பொறையுடையவன் எனபலவாறு சிறப்பிக்கப்படுகிறான் சேரமன்னன்.

வரம்பில் வெள்ளம்

கொடி கட்டிய தேரில் செல்லும் தலைவனே 
உன்னைப் போரில் எதிர்த்து நிற்கும் மன்னர்கள் உன்னை வெறுக்கின்றனர்.

வரம்பு இல்லாத வெள்ளம் போன்று, நீர் நிலைகளுக்கு கரையுண்டு ஆனால் இவன் படை வரம்பில்லாது அதிக எண்ணிக்கை கொண்டது இவன்  யானைப் படை. அவற்றின்  கழுத்தில் வார்ப்பு-மணியும் தென்னை போன்று பருத்த கால்களும் கொண்டவை. அவை பகைவரின் காவல் மரங்களை அணைத்திழுத்து அளிக்கின்றன. விரிந்து கிடக்கும் நீர்த்துறைகளைக் கலக்குகின்றன. பகைநாடே மூழ்கும்படி அவை செல்கின்றன.  இப்படி சேரனின் படைச்சிறப்புக் கூறப்படுகிறது.

ஒண்பொறிக் கழற்கால்

ஒள்ளிய  பொறிகள் பொறித்துள்ள வீரகண்டை யணிந்த கால்களை உடைய பகைவர் உன்னைக் கண்டால் அஞ்சி ஒடுங்குவர். போரில்  தான் செய்த  அரிய  செயல்களைத் தம் கழலில் பொறித்துக் கொள்ளுதல் பண்டையோர் மரபு. இப்படி அரியச் செயல் புரிந்தவர்காளை வென்றவன் என இவன் சிறப்புக் கூறப்படுகிறது.

மெய்யாடு பறந்தலை

தலை துண்டிக்கப்பட்டு, வேறாக வெட்டப்பட்ட உடல் ஆடும் போர்க்களம் காண்டவன் இச்சேரன் என இவன் வெற்றிச் சிறப்பும் போரின் கடுமையும் கூறுகிறது இப்பாடல்

வாண்மயங்கு கடுந்தார்

வெட்டப்பட்டுக் கிடக்கும் பனை மரம் போன்று கைத்துண்டிக்கப் பட்ட யானைகள் வீழ்ந்துக் கிடக்கும் களத்தில் வாட்படைகள் தங்களுக்குள் பொருதும், வீழும் பிணங்களைத் தின்ன கழுகும் பருந்தும் வரும் போர்காளம் என்று கூறுயவாறு இவன் வெற்றிச்சிறப்பும் போர்க்காள கடுமையும் கூறுகிறது இப்பாடல்.

வலம்படு வென்றி

வான்  தோய்  நல்லிசை - வான்  புகழ உயர்ந்த நல்ல புகழானது;  
உலகமொடு   உயிர்ப்ப   -  உலக  முள்ளளவும் தான் உளதாகுமாறு  நிலைபெற; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் -   வீழ்ந்த   குடியினரை   உயரப்பண்ணிய   வெற்றி  பெறுதற்குக் காரணமான  செய்கையும் உடையவன் என சேரனது பல குணங்களையும், செல்வத்தையும் போற்றிக் கூறுகிறது இப்பாடல்.

பரிசிலர் வெறுக்கை

பரிசிலர் - தன்னிடம் பரிசு பெற்றவரும் பாணரும் சிறப்பாக வாழும் படி செய்பவன் என்றவாறு அவன் கொடைச்சிறப்புக் கூறுகிறது இப்பாடல். பாணர் பாக்கள் பாடி பரிசு பெறும் புலவர்களுக்கு ஒப்பாகமாட்டார் என்பதால் பாணரும் பரிசிலரும் என் தனித்து கூறுகிறார் ஆசிரியர்.

ஏவல் வியன்பணை

இடிப் போல் முழக்கமும் படைவீரரை பகையிடத்தே மேலும் மேலும் முன்னேறிச் செல்லுமாறு எவக் கூடியதுமான முரசினைக் கொண்டவன் என கூறி அவன் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் கூறுகிறது இப்பாடல்.

நாடுகாண் அவிர்சுடர்

நன்னனை வென்றது, நேரிமலையில் வெற்றிவிழா கொண்டாடியது, விறலியர் நேரிமலை விழாவுக்குச் சென்று பரிசில் பெறலாம் என்றது – ஆகிய செய்திகள் இப்பாடலில் கூறப்பட்டுள்ளன. நாட்டிலுள்ளோரும் காணும் படி காட்டில் பெரிதாக எரியும் தீயினைப் போன்ற சினத்தை கைவிட்டவன், அவனிடம் பயமின்றி நீர் போனால் தங்கம், யானை போன்ற பரிசில்களைப் பெறாலாம் என ஆற்றுப் படுத்தி அவன் கொடைச் சிறப்பு கூறுகிறது இப்பாடல்.

பதிற்றுப்பத்தின் பிற பாடல்களை ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு, விடுப்பு முடிந்ததும் கூடிய விரைவில்

அன்புடன்
உமா