Saturday 5 May 2018

ஐங்குறுநூறு -1


ஐங்குறுநூறு எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று. பாடல்களைப் பார்க்கும் முன் இதன் அமைப்பை தெரிந்துக்கொள்வது சிறப்பாக இருக்கும். குறிஞ்சி, முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐந்து திணைக்கும் 100 பாடல்கள் வீதம் 500 பாடல்களைக் கொண்டது. இது 5 புலவர்களால் பாடப்பட்டது.
மருதத் திணைப் பாடல்கள் (100) – ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) – பேயனார்

எட்டுத்தொகை நூல்களில் தொல்காப்பியம் கூறும் வரிசைப்படி குறிஞ்சித் திணையை முதலில் வைக்காமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய பாடல் இது ஒன்றே ஆகும்.
ஒவ்வொரு 100 பாடலும் பத்து பத்து பாடல்களால் ஆன பத்து தொகுப்பினைக் கொண்டது. சொல்லாட்சியினாலோ அல்லது பொருளாலோ இவை பத்து பத்து பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு திணைக்கான பாடலையும் காணும் முன் திணைக்கான நிலம் சொல்லும் முதற்பொருளும், மக்களின் ஒழுக்கம் கூறும் உரிப்பொருளும் தெரிந்துக்கொள்வோம்.
குறிஞ்சித் திணைமலை, மலை சார்ந்த நிலம், புணர்ச்சியும் புணர்ச்சி நிமித்தமும்
முல்லைத் திணைகாடும் காடு சார்ந்த நிலமும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதத் திணைவயலும் வயல் சார்ந்த நிலமும், ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தற்  திணைகடலும் கடல் சார்ந்த நிலமும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலைத் திணைமணல் பரப்பு, தமிழில் பாலை என்பது குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பினின்றும் மாறிய நிலை, பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

முதலில் மருத நிலப்பாடல்...
மருதத் திணைவயலும் வயல் சார்ந்த நிலமும், ஊடலும் ஊடல் நிமித்தமும்
இதை மனதிற்கொண்டு பாடலைப்பார்ப்போம்.
முதல் பத்து - வேட்கைப் பத்து , வேட்கை என்றால் விருப்பம்

வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே

வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன் வாழ்க அவினி (இவை சேர மன்னர்கள்),
நெல் பல பொலிக – நெல் நிறைய விளையாட்டும்,
பொன் பெரிது சிறக்க – செல்வம் கொழிக்கட்டும்,
என வேட்டோளே யாயே – இவ்வாறு விரும்புகின்றாள் என் தோழி,
யாமே – நாங்கள்,
நனைய காஞ்சி – மொட்டுக்களையுடைய காஞ்சி மரங்கள்,
சினைய சிறு மீன் – சிறிய சினை மீன்கள்,
யாணர் ஊரன் – செல்வம் பொருந்திய ஊர் தலைவன்,
வாழ்க – வாழ்க,
பாணனும் வாழ்க – அவனுடைய பாணனும் வாழ்க,
என வேட்டேமே – என்று நாங்கள் விரும்பினோம்

காவலுக்காக அரசர் வாழ்க
விருந்தோம்பலுக்காக நெல் நிறைந்து விளையட்டும்
இரவலருக்கு ஈவதற்காக பொன் மிகுதியாக உண்டாகட்டும் என இல்லத்திற்கு வேண்டியதையே என் தோழி விரும்புகின்றாள்.
ஆயினும் நீ ஒழுகிய ஒழுக்கத்தால் நினக்கும் அதற்கு துணையான பாங்கனுக்கும் தீங்குண்டாகுமென அஞ்சி யாணரூரன் வாழ்க பாணனும் வாழ்க என்கிறாள்.

அஃதாவது தலைவியை விட்டு பரத்தையரை நாடியிருந்த தலைவன் திரும்புகிறான். தலைவியின் ஊடலை தோழி இவ்வாறு உரைக்கிறாள்.
சிறப்பு மிக்க நெல்லையும் பொன்னையும் ஒப்பக் கூறுதல் மரபு. ஆயின் காஞ்சி மலர்களும், மீன்களையும் உடைய ஊரன் என்று பூவையும் புலாலையும் ஒன்றாக கூறியது, தலைவன் நல்ல குலமகளையும் பொதுமகளையும் ஒப்பக் கொண்டொழுகுவான் என்பதால்.

அடுத்தப்பாடலில்
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோ ளே யாயே யாமே
பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே.
இப்பாடலில்
வாழ்க ஆதன்! வாழ்க அவினி! வயல்களில் விளைச்சல் சிறக்கட்டும், இரவலர் வரட்டும் என்று விரும்பினாள் என் தோழி. பல இதழ்களையுடைய நீல மலர்கள் நெய்தல் மலர்களைப் போல் தோன்றும் குளிர்ச்சியான துறையின் ஊரன் என் தோழியோடு கொண்டுள்ள ஆழ்ந்த நட்பு என்றும் தழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என்கிறாள்.
பல இதழ் கொண்ட நீல மலர்கள் நெய்தல் பூவினை ஒக்கும் என்றது தலைவன் குல மகளோடு பொதுமகளையும் ஒப்ப நினைப்பான் என கூறியதாகும்.

வாழி ஆதன்வாழி அவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்வின் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை
அம்பல் ஆகற்க எனவேட் டேமே.

இதில் நல்லது சிறக்க வேண்டும், தீது இல்லாது ஆக வேண்டும் என விரும்பினாள் என் தோழி. கயல் மீனை உண்ணும் நாரையானது நெற்போரில் தங்கும் நீர்த்துறையுடைய நாடனது நட்பு பிறர் பழிக்காளாக வேண்டாம் எனவும் விரும்பினோம் என்கிறாள். இங்கு நாரை நெற்போரில் தங்கும் என்றது தலைவன் தன்னிடம் விட்டு தகாத இடம் தங்கினான் என்பதாம்.

இப்படி ஒரு பொருள் பற்றி பல உவமைகளுடன் இறைச்சியாக பாடப்பட்ட 10 பாடல்களின் தொகுப்பு அறிந்து வியக்கத்தக்கது.
பாடல் புனைய விரும்புவோர் கற்பனைக்கும் கருத்தாழத்திற்கும் சொல்லாட்சிக்கும் இப்பாடல்களைப் பயின்றால் சிறப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அடுத்ததாக மருத நிலத்திலேயே மற்ற தொகுப்புகளை சுறுக்கமாகக் காண்போம்.
விரைவில் மீண்டும்

அன்புடன்
உமா.

No comments:

Post a Comment