Friday 22 March 2019

சங்க காலம் முதல் சம காலம் வரை பெண்கள் நிலை.


சென்னைத் துறைமுகத் தமிழ்ச் சங்கத்தின் 'தன்மரம்' பெண்கள் தின சிறப்பிதழில் வெளியானது

சங்க காலம் முதல் சம காலம் வரை பெண்கள் நிலை.
சி.உமா, பொது நிர்வாகத் துறை

மார்ச் 8 – உலக மகளிர் தினம். 19 ம் நூற்றாண்டில் உலக மகளிர் இணைந்து உரிமைக்காக போராடிய தினம். அவர்களது போராட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, சம உரிமை, சம ஊதியம் போன்றவை. நூறாண்டுகள் கழிந்த பின்னும் ,இந்த இலக்குகள் எட்டப்பட்டனவா என்பது கேள்விக் குறியே!
இக்கட்டுரையில் தமிழகத்தில் சங்க காலம் முதல் சமகாலம் வரை பெண்களின் நிலை பற்றி காண்போம்.


சங்க இலக்கிய காலத்தில்  1446 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இதில் பெண்பாற்புலவர்கள் 32 பேர். ஆண்பாற்புலவர்களுக்கு இணையான இலக்கிய ஆளுமைக் கொண்ட இப்புலவர்கள் சிறந்த பல தனிப்பாடல்கள் மற்றும் தொகுப்புக்களைத் தமிழுக்கு ஈந்திருக்கிறார்கள். என்றாலும் இப் புலவர்களின் இயற்பெயர் எதிலும் குறிப்பிடப்படவில்லை என்பதே ஆய்வாளர்கள் கருத்து. பெண்கள் திறமை மிக்கவர்களாக இருந்தப் போதும் தங்களை முன்னிருத்த அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் எழுதிய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சிறந்த சொற்களைக் கொண்டே அறியப்பட்டனர்.
பொதுவாக சங்க இலக்கிய காலத்தில் பெண்கள் ஆணின் உடைமையாகவே பார்க்கப்பட்டனர். எனவே அவர்களது அழகே முன்னிருத்தப்பட்டு பாடல்கள் புணையப்பட்டன. என்றாலும் சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களும் அகப் பொருள் பற்றிச் சுதந்திரமாகப் பாடியமை காணமுடிகிறது
பின்னர் தோன்றிய பக்தி இலக்கிய காலத்தில் பல பெண்பாற் புலவர்கள் இறைவனைப் பாடி இருக்கின்றனர். ஒளவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர். அக்கால பெண்பால் கவிகளின் பாடுபொருள் இயற்கை, இறைபக்தி, நன்னெறி கூறுகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. சங்க இலக்கிய காலத்தைப் போன்று பிற்காலத்தில் பெண்கள் சுதந்திரமாக தன் உள்ளத்தைப் பாடுவதை, அகப் பொருள் இலக்கியம் படைப்பதை ஏற்றுக் கொள்ளாத நிலையையே காணமுடிகிறது. அக்காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையில் பெண்களின் நிலை பலவகையிலும் மாறிக் கொண்டே வந்திருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது.
நவீன இலக்கிய காலத்தில் சமூகம், வாழ்வியல் நெறி, பெண்ணியம், காதல், இறை வழிபாடு என்று பல தளங்களிலும் பெண் கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். இலக்கியம் படைக்கின்றனர். என்றாலும் பெண் படைப்பாளிகள் மிகச் சிலராகவே இருக்கின்றனர். அவர்களுக்கான அங்கீகாரமும் போராடி பெறவேண்டிய நிலையே காணப்படுகிறது.
சங்க கால சமூகத்தில் பெண்கள் வீட்டு வேலை, கதிரறுத்தல், திணைப் புலம் காத்தல் போன்று குடும்பம் சார்ந்த தொழில்களில் மட்டுமே ஈடுபட்டநிலை இருந்தது. பெண்கள் பொருளீட்ட வெளியில் செல்லும் நிலைக் காணப்படவில்லை. சமூக வளர்ச்சியில் பங்கேற்றதையும் காணமுடியவில்லை.
இந்நிலை சிறிது சிறிதாக மாறி 18ம் நூற்றாண்டில் வேலு நாச்சியார் போன்ற பெண்கள் வீரத்துடன் சமூக நலனுக்காக வெளிவந்ததைக் காணமுடிகிறது. சுதந்திர போராட்ட காலத்திலும் ஆண்களோடு பல பெண்களும் வீரத்தோடு பங்கேற்றதை சரித்திரம் நமக்குச் சொல்லும்.
தற்போது பெண்கள் கல்வி அறிவு பெற்று ஆட்சித்துறை, தொழில்துறை, அறிவியல் துறை, மருத்துவத்துறை, சட்டத்துறை, காவல்துறை, இலக்கியத்துறை போன்ற பல துறைகளில் பணியாற்றுவதுடன் வெற்றிநடை போடுவதையும் காண்கிறோம்.
இன்றைய பெண்கள் தொழில்செய்வதில் வல்லவர்களாக திகழ்வதோடு, தொழிற்சாலைகள் தொடங்கி அதில் பலருக்கு வேலை வாய்ப்பளிப்பதையும் காணமுடிகிறது. கிராமப்புற மகளிர் கூட சுயஉதவிக்குழு உருவாக்கி அதன் வழியாக சேமித்த தொகையுடன் அரசிடமிருந்து கடன் உதவி பெற்று சிறுசிறு கைத்தொழில்களை செய்து மேன்மையுடன் வாழ்கின்றனர். இன்றைய பெண்கள் வீட்டு பொறுப்போடு கூட வேலை ஒன்றை தேடி அதையும் சிறப்பாக செய்து வருகிறார்கள். விளையாட்டு துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். வன்மைத்தன்மையுடைய கராத்தே, ஜிம்னாஸ்டிக், குத்துச் சண்டை போன்றவைகளில் ஈடுபட்டு நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்குமளவு முன்னேறி வருகிறார்கள். ஆண்களுக்கு இருக்கும் சகலவிதமான திறமைகளும் பெண்களுக்கும் உண்டு என்பதற்கு ஏற்ப காவல்துறையிலும் பலர் உயர்பதவிகளில் இருந்து சிறப்பான சாதனைகளை செய்து பணியாற்றி வருகிறார்கள். ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்றிருந்த பல வேலைகள் இன்று பெண்களால் செய்யப்படுகின்றன.  
புதுமைப்பெண்களாக, புரட்சி பெண்களாக, துப்பாக்கி ஏந்தி போரிடும் வீராங்கனைகளாக, மருத்துவராக, அறிவூட்டும் ஆசானாக, ஒப்பற்ற இல்லத்தலைவியாக, விண்வெளி ஆராய்ச்சியாளராக, தகவல் தொடர்பு வல்லுனர்களாக என அனைத்துத்துறைகளிலும் பெண்கள் இன்று சிறந்து விளங்குகிறார்கள்.

இந்த நூற்றாண்டில் கிராம பஞ்சாயத்துக்களில், நகர, மாநகராட்சிகளில் உறுப்பினராகி மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார்கள். மேலும் அரசியலில் ஈடுபட்டு பல உயர்பதவிகளில் பொறுப்பேற்று அரிய சேவை செய்து வருகின்றனர்.
இப்படி வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வளர்ந்து காட்டிய பெண்களை இச் சமூகம் எவ்வாறு பார்கின்றது.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்..,”
இது மகாகவி பாரதியின் வரிகள் மட்டுமல்ல… அக்கவிஞனின் கனவு….!
பட்டங்கள்  பெருமளவு  பெண்கள் கைகளில் வசப்பட்டிருப்பது மகிழ்ச்சியே…! ஆனால் சட்டங்கள்  இயற்றும் இடத்தில்  பெண்கள்  இருக்கிறார்களா  என்பது கேள்விக் குறியே? நம் பெண்கள் பெற்ற பட்டங்களும், எத்தனை பேருக்கு சுய சிந்தனையையும், ஆளுமையும், தனித்துவத்தையும் கொடுத்திருக்கிறது என்றால் வெகு சிலரே என்பது வருத்தத்திற்குரியதே…! பெண்களுக்காக ஒதுக்கப் பட்ட இடங்களிலும் பெயருக்கு பெண்களை நிறுத்தி ஆண்களே ஆளுமைச் செய்யும் நிலையைத்தான் அரசியலில் மட்டுமல்லாது குடும்ப நிர்வாகம் மற்றும் எல்லா துறைகளிலும் இன்று நாம் காண்கிறோம். அலுவலகங்களில் உயர் பதவிகளில் பெண்களின் பங்கு மிகக் குறைவே.
இன்றும் மகளீர் தின கொண்டாட்டங்கள் மீண்டும் மீண்டும் பெண்களை அழகுடன் சம்பந்தப் படுத்தியே அமைவது வருத்தத்திற்குரியது. அவர்களின் உள் வலிமையை இன்றும் கொண்டாடுவதில்லை என்பதே நிலை.
நகரத்தில் அனைத்து உரிமைகளையும்  பெற்ற ஒரு  பெண்  மகளிர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கையில்,  எங்கோ ஒரு மூலையில் கூலி வேலை செய்து கொண்டிருக்கும்  கிராமப்பெண்ணிற்கு மகளிர் தினம் என்றால் என்ன என்றே தெரியாதே?   நம்மில் பெரும்பாலான பெண்கள் இன்னமும் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில்தானே உள்ளனர்…!
இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல கோணங்களில் பெருகி இருப்பதைக் காணமுடிகிறது அல்லவா? இன்னமும் பெண்கள் வலிமையற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கும் நிலை இன்றும் அதிகம் காணப்படவில்லை.
இந்நிலை மாறவேண்டும். முன்னேற்றம் என்பது ஒரு சார்பாக இல்லாமல் அனைத்து தர பெண்களும் முன்னேற வாய்ப்புகளும் அவர்களுக்கான பாதுகாப்பும், சமுகத்தில் சம உரிமையும் காணவேண்டும். இதற்கான விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவேண்டும். இது முக்கியமாக சமூகத்தில் முன்னேறிய பெண்களின் தலையாயக் கடமை. அப்படிப்பட்ட ஒரு நிலை கண்டால் மட்டுமே மார்ச் 8 கொண்டாட்ட நாளாக இருக்கும். அதுவரை போராட்ட தினமே.
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
****************

No comments:

Post a Comment