Friday 30 August 2019

கல்லிலே கலைவண்ணம்

பழந்தமிழகத்தின் வரலாற்றை அறிய, இலக்கியங்கள், கல்வெட்டுகள், அகழ்வாராச்சிகள் போன்றவை மிகுந்த உதவியாயிருக்கின்றன. அவ்வாறே பழந்தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்கள், அம்மன்னர் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு அன்று சிறப்புற்றிருந்த கலைகள், அவர்களின் பல்துறைச் சார்ந்த அறிவு ஆகியவற்றை நாமறிய உதவுகின்றன.
தமிழகத்தில் சோழர்களின் காலம் மிகச் செழிப்பானகாலம். அன்று பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன, நாட்டியம், நாடகம், இசை, சிற்பம், ஓவியம் போன்ற பல கலைகள் சிறப்புற்றிருந்தன. இதற்கு சாட்சியாக அமைவது சோழ மன்னர்கள் கட்டிய பல கற்கோயில்கள்.
சோழர்கள் தம் கோவில்களை வழிப்பாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் கருவூலமாகவும் கோட்டையாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்
கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கும் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவிலுக்கும் செல்லும் வாய்ப்புச் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது.
மிக அற்புதமான இவ்விரண்டு கோவில்களைப் பற்றிய சிறு அறிமுகம் செய்வதன் மூலம், இக்கோவில்களை நேரில் காணும் ஆவலை ஏற்படுத்துவதும், அவ்வாறு காணும் போது அவற்றை உணர்ந்து இரசிக்க வைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில்

மிகவும் பிரசித்திப் பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில்.
இம் மன்னன் கங்கைவரைச் சென்று வெற்றி பெற்ற தன் நினைவாக அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. போக்கு வரத்து வசதிகள் இன்றிருப்பது போல் அன்றில்லாத நிலையில் அப்பெரிய கோவிலைக் கட்ட அவ்வளவு கற்கள் எவ்வாறு கொணரப்பட்டன என்பது இன்றும் ஆச்சரியம்.
வரலாற்றில் தனது தந்தையின் புகழ்மங்கி விடக் கூடாது என்றே இக்கோவிலைச் சற்று சிறியதாக இராஜேந்திரசோழன் கட்டினான் என்பர். என்றாலும் இங்குள்ளச் சிற்பங்களின் மேன்மை அனைத்தையும் விஞ்சி நிற்கிறது.
இக்கோவிலைக் கட்டிய சிற்பி குணவன், தஞ்சைக் கோவிலைக் கட்டிய இராஜராஜ பெருந்தச்சனின் மாணவன் என்பதும் அவனது திறமையைக் கண்டு  ‘நித்த வினோத பெருந்தச்சன்’ என்ற பட்டத்தைச் சூட்டினான் இராஜராஜ சோழன் என்பதும் நமக்குத் தெரியவரும் வரலாற்றுச் செய்திகள். இவற்றை இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியம். ஏனெனில் இக்கோவில்கள் சிற்பக் கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றன..
இனி வரலாற்றைக் கடந்து, கண் முன்னே நாம் கண்ட இக்கோவில் சிற்பங்களின் அழகைப் பகிர்ந்து கொள்வோம்.

கோவில் நுழைவாயில்
நீண்ட பாதையில் நடந்துச் செல்லும் போது உயர்ந்து நிற்கும் கோபுர நுழைவாயில் இடிந்த நிலையிலிருந்தாலும் அன்றைய முழு கோபுர வாயிலின் பிரம்மாண்டத்தை நாம் கற்பனைச் செய்யத் தூண்டுகிறது.
கருவறை வெளிச்சுவர்
அதைத் தாண்டி உள்நுழைந்தால் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் மிக அற்புதமான, சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட மிகப் பெரியநந்தி சிலை கம்பீரமாய் நம்மை வியக்கவைக்கிறது. இதில் ஒரு அதிசயம் சூரிய ஒளியானது நந்தி சிலையின் மேல் பட்டு கருவறையிலுள்ள பிரகதீஸ்வர் மேல் மிக நேர்த்தியாக விழுகிறது.
அகண்ட படிகள் ஏறிச் சென்றால் கருவறையில் பெருவுடையார், பிரகதீசுவர் என்றழைக்கப்படும் சோழீசுவரர் பிரம்மாண்டமான லிங்க வடிவில் காட்சித் தருகிறார். தஞ்சை பெரிய கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் மிகுந்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன. 
கருவறை கோபுரத்தின் வெளிப்புறத்தில் பல சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்வதாய் அமைந்துள்ளது. முக்கியமாக அங்கு அமைந்துள்ள நடராசர் சிலை
நடராசர் சிலை
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே

என்று நம்மை நெக்குருகச் செய்யும். 



அர்த்தநாரீஸ்வரர்
அர்த்தநாரீஸ்வர் சிலை மற்றும் ஞான நிலையிலிருக்கும்  சரஸ்வதி மற்றும் லஷ்மி சிலைகள் சிற்பக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்ததைக் காட்டும் வகையில் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.


இங்குள்ள நர்த்தன விநாயகர் சிலையின் ஏழு உறுப்புக்களிலிருந்து ஏழுசப்தங்கள் எழுவதாக அங்கிருப்போர் நமக்குத் தெரிவிக்கின்றனர்.
 
நர்த்தனவிநாயகர்
இங்குள்ள சிம்மக் கிணறு வருவோரைக் கவரும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சிம்ம வடிவில் அமைந்த குகைப் போன்ற படிகள் அமைக்கப்பட்டு அது பக்கத்திலுள்ள பெரிய கிணறுக்குச் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. இக்கிணறு இராஜ வம்சத்தவரால் உபயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மன்னர்களின் குடும்பத்தார் போர்காலங்களில் மறைந்திருக்க பாதாள வழிகள் இங்குள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சிம்மக் கிணறு
கோவிலில் தாயார் பெரிய நாயகி அம்மைக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. பெயருக்கேற்றார் போல் 9 அடி பெரிய வடிவில் தாயார் அருள் பாலிக்கிறார்.
இடிந்த சன்னதி
கல்வெட்டுகள்
இக்கோவிலில் இடிந்த நிலையில் சில சிலைகள், கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இவை பல காலகட்டத்தில் போர் போன்ற காரணங்களால் இடிபாட்டிற்கு உள்ளானதாய் அறியப்படுகின்றன. இக்கோவிலில் இன்றும் பல கல்வெட்டுகளை நாம் காணமுடிகிறது. தமிழக தொல்லியல் துறை இக்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்து பல தகவல்களுடன் நூல்களை வெளியிட்டிருக்கின்றது.


பல ஆண்டுகள் முன்பாக, இக்கோவில் கட்டப்பட்ட காலத்தில் மக்கள் நடமாட்டம் எப்படி இருந்திருக்கும், சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இவ்விடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்பதை நினைக்கையில், இக்கோவில் பற்றிய பல வரலாற்று புதினங்களில் வருவதை போன்ற நிகழ்வுகள் நம் கற்பனையில் தெரிகின்றன.
இக்கோவிலை விட்டு வெளிவரும் போது

ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே !

என்ற கருவூர் தேவரின் பாடல் சொல்வதைப்போல் பக்தியால் நம் கைகள் குவிகின்றன கூடவே வியப்பால் நம் கண்கள் விரியவும் செய்கின்றன.முழுதும் காணமுடியா நிலையில் கோவிலை விட்டு நகர்ந்து, சற்றே மனக்குறையுடன் தாராசுரம் நோக்கி பயணப்பட்டோம்...

தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் நம்மை வியப்பின் எல்லைக்கே இட்டுச் செல்கிறது...

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

‘பொன்னியின்செல்வன்’ கதையில் நமக்கு அதிகமாக பரிச்சயமான பழையாறை நகரின் ஒரு பகுதிதான் தாராசுரம் என்பது. இன்றும் சோழமன்னர் காலத்தில் வணங்கப்பட்ட பிரம்மாணடமான சோமநாசுவாமி கோவில் இடிந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றது. இதன் அமைப்பை ஒட்டி அமைந்தது தான் தாராசுரம் கோவில். யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தாராசுரம் கோவில் இன்று முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஆச்சரியத்தின் உச்சம். பக்தி உணர்வோடு மட்டுமல்லாமல், மிகுந்த கலையுணர்வோடும் இக்கோவிலைச் சுற்றி வர வேண்டும். இக்கோவிலின் அழகிய சிற்பங்களைக் கண்டு இரசிக்க ஒருநாள் போதுமானதாக இருக்காது. கண்டிப்பாக பலமுறை இக்கோவிலுக்கு விஜயம் செய்ய வேண்டும். இச்சிற்பங்கள் அக்கால மக்களின் கலை, பண்பாடு, வாழ்க்கையை தெரிவிக்கும் கண்ணெதிர் தெரியும் ஆதாரங்களாக உள்ளன. ஒரு துளி இடம் கூட வீணாகாமல் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் சிற்பங்கள் அலங்கரிப்பதை நம்மால் வியக்காமலிருக்க முடியவில்லை. வாருங்கள் இரண்டாம் இராஜராஜன் பெருமையோடு வருகைத்தந்த அந்த பழைய கோபுர நுழைவயிலைப் பார்ப்போம்.
பழைய நுழைவாயில்
இன்று சிதிலமடைந்த நிலையில் பயன்படாமலிருக்கும் இக்கோபுர நுழைவாயில் கோவிலின் பிரம்மாண்டத்தையும், இரண்டாம் இராஜராஜனின் கம்பீரததையும் நமக்குப் பறைச் சாற்றுவதாய் உள்ளது. இன்று பக்கவாட்டு வழியாகவே மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இதன் முழுவடிவையும் அதன் வழியே யானையில் இரண்டாம் இராஜராஜன் படைச்சூழ வரும் காட்சியை சற்று கற்பனைச் செய்து பாருங்கள். ஆம் இவர்களோடு தான் நாம் இக்கோவிலைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம்.

இசைப் படிகள்
தரைப் பகுதியிலிருந்து சற்றுத் தாழ்வாக 7 அல்லது 8 படிகள் இறங்கி வரும்படியாக அமைந்துள்ள நந்தி மண்டபமும் பலிபீடமும் தான் நாம் முதலில் காணக்கூடியவை.  இந்த பலிபீடத்தின் படிகளில் சப்தஸ்வரங்கள் எழுவதாக சொல்கிறார்கள். இன்று, பாதுகாப்புக் கருதி இரும்புக் கம்பிகளிடப்பட்டிருக்கிறது.
நந்தியையும் விநாயகரையும் வணங்கி உள் நுழைந்தால் நாம் காண்பது இராஜகம்பீர திருமண்டபம். ஒவ்வொரு அணுவையும் பார்த்து வியக்கக் கூடிய வகையில் அமைந்தது இம்மண்டபம்.
இராஜ கம்பீர மண்டபம்
தூண்களில் நடன சிற்பம்


ஒருபுறம் குதிரையும் மறுபுறம் யானையும் இழுத்துச் செல்லும் ஒரு தேர்போல் அமைக்கப்பட்டுள்ளது.  இராஜராஜனின் யானை போரில் ஆவேசத்துடன் போரிடும் காட்சியை நம் கண்முன்னே காட்டுகிறது இந்த யானை. குதிரையின் வேகத்தில் மண்டபம் நகர்ந்து விடுமோ என எண்ணத் தோன்றுகிறது. சூரிய சக்கரம் போல் அமைந்த தேர்ச் சக்கரங்கள் சிற்பக் கலையின் வியப்பு. மண்டபத்தில் 120 தூண்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தூண்களில் பல புராணக்கதைகள் மிக நுணுக்கமாக சில சென்டிமீட்டர் அளவேயுள்ள சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். இத்தூண்களில் நாட்டிய கலையின் அனைத்து நிலைகளையும், முக்கியமாக முத்திரைகள் மிக நேர்த்தியாக, சில சென்டிமீட்டர் அளவில் சிறியதாக கற்சிற்பமாக வடித்திருப்பது ஆச்சரியமானது. 
மண்டபத்தை அடுத்து கருவறையில் ஐராவதேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். இந்திரனின் யானையாகிய ஐராவதம் சாப விமோசனம் பெற்றதால் மூலவர் ஐராவதேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். தாயார் தெய்வநாயகி அம்மைக்கு தனியாக வலப்புறம் கோவில் அமைந்திருப்பது சிறப்பு.
கருவறையைச் சுற்றி வெளிப்புறச் சுவற்றில் 63 நாயன்மார்களின் கதை கற்சித்திரமாக செதுக்கியிருப்பது இக்கோவிலின் மிகச் சிறப்பான அம்சம்.  சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அமைந்த வரிசைப் படியே கருவறையின் வலப்புறம் துவங்கி, தில்லை வாழ் அந்தணர் முதலாக 63 நாயன்மார்களின் கதையும் மிகச் சிறிய சிற்பங்களாக செதுக்கியிருப்பது வியக்க வைக்கிறது.
மேலும் இங்கு மனித சக்கரம் என்று சொல்லும் படி இருவர் பிணைந்து சக்கரம் போல் இருக்கும் காட்சி,  பெண் ஒருத்திக்கு இருவர் பிரசவம் பார்க்கும் காட்சி,  ஜிம்னாஸ்டிக் என்பது போல் உடலை வளைத்து செய்யும் சாகசங்கள் போன்ற சிற்பங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
அக்காலத்தில் பெண்களும் போரிட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் போரிடும் பெண்கள் சிற்பம்,  மேலும் இசைக் கருவிகளோடு கலைஞர்களும் பெண்களும் நடமாடும் வழக்கத்தைக் காட்டும் இசைக் குழுவினர் சிற்பம்,  என அற்புதமான சிற்பங்கள் மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை இம்மக்களின் பல் கலை திறனை நமக்கு எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற  அன்னப்பூரணி சிலை ஒன்றும் இருக்கிறது.  இங்குதான் ஒட்டக்கூத்தர் தனது ‘தக்கயாக பரணி’யை அரங்கேற்றம் செய்ததாகக் கூறுகின்றனர். தக்கயாக பரணி எங்கிற இலக்கியம், தக்கனின் யாகத்தை சிவபெருமான் தடுத்து வென்றதையும் சோழமன்னன் ஈழத்தை வென்றதையும் குறிக்கும் விதமாக சிலேடையாக பாடப்பட்டது என்பர். இங்கு இன்னும் பலசிற்பங்களும் நாகராஜன், 8 கைகளுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் என எங்கும் காணப்பெறாத கடவுள் சிலைகளும் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு வரலாற்று சிறப்புகளை பார்வையாளர்கள் தெரிந்துக் கொள்ளுமாறு குறிப்புகள் அங்கில்லாதிருப்பது சற்று வருத்தத்திற்குரியதே. வலைத்தளங்களில் பார்த்து தெரிந்துக் கொண்டு வருபவர்களுக்குக்கூட நேரில் அவற்றைத் தேடி கண்டுபிடிப்பது சிரமான காரியமே.
இக்கோவில்களின் சிற்ப அழகைக் காண கண்ணாயிரம் வேண்டும். இக்கோவிலைச் சுற்றி வருகையில், இவற்றின் பின்னனியில் இருக்கும் புராண கதைகள், வரலாற்று நிகழ்வுகள்,  சமயக் கருத்துக்கள் இவற்றையெல்லம் தெரிந்துக் கொள்ளும் பேரார்வம் நம்மை வந்தடைகிறது. அது மட்டுமல்லாது பன்னிருத் திருமறையையும் அதில் பாடப்பட்டுள்ள அத்தனைத் தலங்களையும் அறிந்து சுற்றி வர பேராசைக் கொள்கிறது மனது.
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!
வளர்க தமிழர்தம் புகழ்!










No comments:

Post a Comment