Monday 25 June 2018

பதிற்றுப்பத்து – நான்காம் பத்து.


நான்காம் பத்து
பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்
பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்

முதலில் பத்து பாடல்களில் கூறப்படும் நிகழ்வுகளை ஒருங்கே கொண்ட பதிகத்தைப் பார்ப்போம்,

பதிகம்

ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்(து)
ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின் 5
பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ
உருள் பூங் *கடம்பின் பெருவாயில் நன்னனை*
நிலைச்செருவி னால்தலை யறுத்(து)அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் 10
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: கம்ழகுரற் றுழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடுபறந்தலை, வான்மயங்கு கடுந்தார், வலம்படு வென்றி, பரிசிலர்வெறுக்கை, ஏவல் வியன்பனை, நாடுகானவிர்சுடர். இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: நாற்பதுநூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆளவ்திற் பாகங்கொடுத்தான் அக்கோ.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

கருத்து

இந்தப் பத்தின் பாடல்-தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்.
இவன் தந்தை சேரலாதன்.
தாய் பதுமன் என்பானின் மகள்.
போர்முனையை நடுங்கச் செய்வதற்கென்றே பிறந்தவன்.
போர்முனையால் புகழை வளர்த்துக்கொண்டவன்.
பெற்றோர் ஊழ்வழியே இவனுக்குச் சிறப்பு வந்தது.
படையுடன் சென்று பூழி நாட்டைத் தாக்கி அந்த நாட்டை நட்பு-நாடாக ஆக்கிக்கொண்டான்.
கடம்பின் பெருவாயில் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த நன்னன் ஆற்றலை அறுத்தெறிந்தான். அவன் காவல்மரம் வாகையை வெட்டி எறிந்தான்.
ஓடும் இரத்தம் யானையையே இழுக்கும்படிப் பல போர் செய்து செங்கள வேள்வி செய்தான்.
வாடிய குடிமக்களின் வளத்தைப் பெருக்கினான். இவன்மீது 10 பாடல்களைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார்.
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். 
பாடிய புலவருக்கு 40 நூறாயிரம் (40,00,000) பொன் பரிசாகத் தந்தான். அத்துடன் தன் ஆட்சி வருவாயில் ஒரு பகுதியைக் கொடுத்தான். 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

பாடல்களைச் சுருக்கமாக காண்போம்.

முதல் பாடல்  - கமழ்குரல் துழாய் –

நறுமணம் வீசும் பூங்கொத்துக்களையுடைய துளவமாலையை அணிந்த திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து உண்ணா நோன்பிருந்து வணங்குவர். தனித்தனிப் பூக்களாக எடுத்துத் தொடுக்கப்படாது கொத்துக் கொத்தாக வைத்துத்  தொடுக்கப்படும்  சிறப்பும்,  மிகச் சிறிதாகியதும் மணங்கமழும் மாண்புமுடைய துழாயை, துளசியை கமழ்குரற் றுழாய் எனச் சிறப்பித்தமையால், இப் பாடல் இப் பெயர் பெற்றது. இப்பாடலில் உண்ணாநோன்பிருந்து திருமாலை வழங்கும் வழக்கம் காட்டப் பட்டிருக்கிறது. மேலும்

மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு
கோடுகூடு மதிய மியலுற் றாங்குத்
துளங்குகுடி விழுத்துணை திருத்தி முரசுகொண்
டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு

நீல நிற மணியின் வண்ணம் கொண்ட கரிய இருளானது அகலும் படி கோடு கூடு மதியம் என்பது -  பிறை நிலாவின் இரு கோடுகளும் கூடும் போது முழுநிலவாகும். இம்முழு நிலவு இருளகற்றி   ஒளியைச்   சொரிந்து  செல்வதுப் போல,  இச் சேரமானும்   குடிமக்களுக்கு   உண்டாகியிருந்த   துன்பங்களை எல்லாம்    நீக்கி,அருளைச்     செய்து,     திருமாலை     வழிபடுதல்      முதலிய நல்லொழுக்கம் நிலவும் படிச்செய்தான், எனவும்
இவன் மனைவி வானத்து மகளிருள் செம்மீன் (அருந்ததி) போன்ற கற்புடையவள். அது அறம்சால் கற்பு. தழைத்த கூந்தலை உடையவள். அந்தக் கருங்கூந்தலுக்கு விளக்குப் போல நெற்றியைக் கொண்டவள். வயிற்றுக் கொப்பூழ் வரையில் தொங்கும் பொன்னாலாகிய இழை (தாலி ஆகலாம்) அணிந்தவள் மற்றும் இவன் படை வீரர்கள் புறமுதுகிட்டு ஓடும் பகையோரின் மேல் போர்க்கருவிகளை எய்யாத அறம் கொண்டவர்கள் எனவும் பலவாறு இச்சேரமன்னனின் திறம் போற்றப்படுகிறது இப்பாடலில்.

இரண்டாவதுப்பாடல் - கழையமல் கழனி

மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுதிப்படுத்தி இந்தப் பாடல் கூறுகிறது.
முடந்தை   நெல்லின்    கழையமல் கழனி  - வளைந்த    கதிர்களையுடைய    நெல்லின்   மூங்கில்     போலும் தாள்கள்  செறிந்த கழனிகள் பொருந்திய; பிழையா விளைச்சலைக் கொண்ட நாடு, அப்படிப்பட்ட நாடுகளை தன்னகப்படுத்துக்கொண்டவன் என்றாலும் தன்னைப் பழிக்கும் பகைவரையும் சினக்காது பொறையுடையவன் எனபலவாறு சிறப்பிக்கப்படுகிறான் சேரமன்னன்.

வரம்பில் வெள்ளம்

கொடி கட்டிய தேரில் செல்லும் தலைவனே 
உன்னைப் போரில் எதிர்த்து நிற்கும் மன்னர்கள் உன்னை வெறுக்கின்றனர்.

வரம்பு இல்லாத வெள்ளம் போன்று, நீர் நிலைகளுக்கு கரையுண்டு ஆனால் இவன் படை வரம்பில்லாது அதிக எண்ணிக்கை கொண்டது இவன்  யானைப் படை. அவற்றின்  கழுத்தில் வார்ப்பு-மணியும் தென்னை போன்று பருத்த கால்களும் கொண்டவை. அவை பகைவரின் காவல் மரங்களை அணைத்திழுத்து அளிக்கின்றன. விரிந்து கிடக்கும் நீர்த்துறைகளைக் கலக்குகின்றன. பகைநாடே மூழ்கும்படி அவை செல்கின்றன.  இப்படி சேரனின் படைச்சிறப்புக் கூறப்படுகிறது.

ஒண்பொறிக் கழற்கால்

ஒள்ளிய  பொறிகள் பொறித்துள்ள வீரகண்டை யணிந்த கால்களை உடைய பகைவர் உன்னைக் கண்டால் அஞ்சி ஒடுங்குவர். போரில்  தான் செய்த  அரிய  செயல்களைத் தம் கழலில் பொறித்துக் கொள்ளுதல் பண்டையோர் மரபு. இப்படி அரியச் செயல் புரிந்தவர்காளை வென்றவன் என இவன் சிறப்புக் கூறப்படுகிறது.

மெய்யாடு பறந்தலை

தலை துண்டிக்கப்பட்டு, வேறாக வெட்டப்பட்ட உடல் ஆடும் போர்க்களம் காண்டவன் இச்சேரன் என இவன் வெற்றிச் சிறப்பும் போரின் கடுமையும் கூறுகிறது இப்பாடல்

வாண்மயங்கு கடுந்தார்

வெட்டப்பட்டுக் கிடக்கும் பனை மரம் போன்று கைத்துண்டிக்கப் பட்ட யானைகள் வீழ்ந்துக் கிடக்கும் களத்தில் வாட்படைகள் தங்களுக்குள் பொருதும், வீழும் பிணங்களைத் தின்ன கழுகும் பருந்தும் வரும் போர்காளம் என்று கூறுயவாறு இவன் வெற்றிச்சிறப்பும் போர்க்காள கடுமையும் கூறுகிறது இப்பாடல்.

வலம்படு வென்றி

வான்  தோய்  நல்லிசை - வான்  புகழ உயர்ந்த நல்ல புகழானது;  
உலகமொடு   உயிர்ப்ப   -  உலக  முள்ளளவும் தான் உளதாகுமாறு  நிலைபெற; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் -   வீழ்ந்த   குடியினரை   உயரப்பண்ணிய   வெற்றி  பெறுதற்குக் காரணமான  செய்கையும் உடையவன் என சேரனது பல குணங்களையும், செல்வத்தையும் போற்றிக் கூறுகிறது இப்பாடல்.

பரிசிலர் வெறுக்கை

பரிசிலர் - தன்னிடம் பரிசு பெற்றவரும் பாணரும் சிறப்பாக வாழும் படி செய்பவன் என்றவாறு அவன் கொடைச்சிறப்புக் கூறுகிறது இப்பாடல். பாணர் பாக்கள் பாடி பரிசு பெறும் புலவர்களுக்கு ஒப்பாகமாட்டார் என்பதால் பாணரும் பரிசிலரும் என் தனித்து கூறுகிறார் ஆசிரியர்.

ஏவல் வியன்பணை

இடிப் போல் முழக்கமும் படைவீரரை பகையிடத்தே மேலும் மேலும் முன்னேறிச் செல்லுமாறு எவக் கூடியதுமான முரசினைக் கொண்டவன் என கூறி அவன் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் கூறுகிறது இப்பாடல்.

நாடுகாண் அவிர்சுடர்

நன்னனை வென்றது, நேரிமலையில் வெற்றிவிழா கொண்டாடியது, விறலியர் நேரிமலை விழாவுக்குச் சென்று பரிசில் பெறலாம் என்றது – ஆகிய செய்திகள் இப்பாடலில் கூறப்பட்டுள்ளன. நாட்டிலுள்ளோரும் காணும் படி காட்டில் பெரிதாக எரியும் தீயினைப் போன்ற சினத்தை கைவிட்டவன், அவனிடம் பயமின்றி நீர் போனால் தங்கம், யானை போன்ற பரிசில்களைப் பெறாலாம் என ஆற்றுப் படுத்தி அவன் கொடைச் சிறப்பு கூறுகிறது இப்பாடல்.

பதிற்றுப்பத்தின் பிற பாடல்களை ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு, விடுப்பு முடிந்ததும் கூடிய விரைவில்

அன்புடன்
உமா 





No comments:

Post a Comment