Friday 1 June 2018

ஐங்குறுநூறு - முல்லை 1


பேயனார் பாடிய முல்லைநிலப் பாடல்களில் அமைந்த பத்து தொகுப்புகள்
1.       செவிலி கூற்றுப் பத்து
2.       கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
3.       விரவுப் பத்து
4.       புறவணிப் பத்து
5.       பாசறைப் பத்து
6.       பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து
7.       தோழி வற்புறுத்த பத்து
8.       பாணன் பத்து
9.       தேர் வியங்கொண்ட பத்து
10.   வரவுச்சிறப்பு உரைத்த பத்து

காடும் காடு சார்ந்த இடமும் முல்லையாகிறது என்பதை அறிவோம். இருத்தல் இருத்தல் நிமித்தமும் அதன் உரிப்பொருள்.

முதல் பத்து செவிலி கூற்று, தலைவியின் இல்லம் சென்று வந்த செவிலி நற்றாய்க்கு தலைவியின் இல்லற வாழ்வை மகிழ்வோடு கூறுவதாய் அமைகிறது இப்பத்து. இப்பாடல்களில்  இல்லற பண்புகள் மிக அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

குட்டி மானை இடையிலே கொண்ட ஆண், பெண் மான்களைப் போல பெற்ற மகனை நடுவில் கிடத்தி அவனும் அவளும் உறங்குவது இனிய காட்சியாகும். சினமே இல்லாமல் நீல நிற வானத்தில் வாழும் தேவரும் இவர்களைப் போல இன்பம் பெற முடியாது.

மறி இடைப்படுத்த மான் பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக, நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை; முனிவு இன்றி
நீல் நிற வியலகம் கவைஇய
ஈனும், உம்பரும், பெறலருங்குரைத்தே.

தலைவி மகனைத் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள்.
தலைவன் அவள் முதுகைத் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறான்.
பாணர் கையில் யாழைத் தழுவியிருப்பது போல இது இனிமையாக உள்ளது.
இதில் நல்லதொரு பண்பாடும் இருக்கிறது.

புதல்வற் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல,
இனிதால்; அம்ம! பண்புமார் உடைத்தே.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

என்ற வள்ளுவன் வாக்கிற்கொப்ப தலைவனும் தலைவியும் தங்கள் புதல்வனோடும் கொண்ட மிகுந்த அன்பால் விளைந்த இல்லற மாண்பை மிக அழகாக படம்பிடித்துக்காட்டுகின்றன இப்பத்துப் பாடல்கள்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை
பண்பும் பயனும் அது.
என்பது வள்ளுவன் வாக்கு. 


அடுத்ததாக கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

பெண்ணே!
இதுதான் நாம் விரும்பிய பருவ காலம்.
அதுதான் நாம் நினைத்த முல்லை நிலம்
இருவரும் சேர்ந்து இன்பமாக கழித்தால் நம் இளமை இனிதாகும்
இனியவர் சேர்ந்திருப்பதுதான் இன்பம்.

இதுவே, மடந்தை! நாம் மேவிய பொழுதே;
உதுவே, மடந்தை! நாம் உள்ளிய புறவே;
இனிது உடன் கழிக்கின், இளமை
இனிதால் அம்ம, இனியவர்ப் புணர்வே!

தாம் கூறிய பருவம் வருமுன்னரே வந்த தலைவன் தலைவியை நோக்கி, பொன்னைப் போல் கொன்றையும் நீல மணிபோல் காயாவும் பூத்து குலுங்குகின்றன, அதோ பூக்களில் வண்டுகள் தேனுன்டு இனிது பாடுகின்றன, பூக்கள் மலர்ந்து பூந்தாதுக்கள் கொட்டிருக்கின்றன, ஆண் யாணையானது தன் பெண் யாணையின் உறவை நாடுகின்றது என இனிய முல்லை நிலத்தின் கண் காணும் கார்கால நிகழ்வுகளை எல்லாம் கூறி வா நாமும் இன்பம் நுகர்வோம் என்பதாய் அமைந்திருப்பது இப்பத்துப் பாடல்கள்.

விரவுப் பத்து

வலிமை மிக்க சக்கரம் கொண்டதும், விரைந்து பாயும் குதிரை பூட்டியதுமான தேரை, நீண்ட கொடியில் பூத்திருக்கும் முல்லையும் தளவமும் உதிரும்படி விரைந்து செலுத்திக்கொண்டு நாம் சென்றால் முன்னங்கையில் நிறைந்த வளையல்களை உடைய அவள் வருந்தமாட்டாள்.

கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி,
நெடுங் கொடி முல்லையொடு தளவமலர் உதிர,
விரையுபு கடைஇ நாம் செல்லின்,
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே.

கார்காலத்தில் விரைந்து தேர் செலுத்தி வரும் தலைவனை நாம் முன்பும் கண்டிருக்கிறோம். இப்பத்துப் பாடல்கள் முல்லை நிலத்திற்கான பல துறைச் செய்திகள் கொண்டதாய் அமைந்திருக்கின்றன.

புறவணிப் பத்து

முல்லை நிலத்தின் அழகை கூறும் பாடல்கள் அமைந்த தொகுப்பு. பிரிவுக்கு உடன்பட்டாலும் தலைவி தலைவன் செல்லும் வழி அரிது என ஆற்றாதவளாய் கூற, கார்காலத்தில் சென்றமையால் சுரம் –வழி நன்றே என்பதாய் அமைந்துள்ளன இப் பத்துப்பாடல்கள்

அவர் சென்ற வழி நல்ல வழி. குட்டியுடன் பெண்மான் துள்ளி விளையாடும். ஈர மழை பொழியும் இன்பமும் அங்கு உண்டு.

நன்றே, காதலர் சென்ற ஆறே!
மறியுடை மான்பிணை உகள,
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே.

பாசறைப் பத்து

போர்ப் பாசறையில் இருக்கும் தலைவன் தலைவியின் நினைவில் கலங்குகிறான். கார்காலம் வருவேன் எனக்கூறி பிரிந்த தலைவன் வினை முடியாமையால் மீள முடியாது தலைவியிடம் சென்று வந்த தூரர்கள் மொழி கேட்டு வருந்துவதாய் அமைந்துள்ளன இப்பத்துப்பாடல்கள்.

செம்மையானவளாகிய என்னவளிடம் யான் சொன்ன உறுதி மொழி பொய்மை உடைத்தாயின. கார் காலம் இடியுடன் வந்திருக்கிறது. நான் செய்வதறியாமல் கையற்றுப் பிரிந்திருக்கிறேன்.  எனக்கே இது துன்பம் தருகிறது.  என்னவளுக்கு எப்படி இருக்கும்?  நான் படும் வேதனையை அவள் அறிந்தால் நல்லது.

ஐய ஆயின, செய்யோள் கிளவி;
கார் நாள் உருமொடு கையறப் பிரிந்தென,
நோய் நன்கு செய்தன எமக்கே;
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே.

முல்லை நிலத்தின் மற்ற ஐந்து தொகுப்புகளுக்கான பாடல்களுடன் விரைவில்

அன்புடன்
உமா.


No comments:

Post a Comment