Tuesday 5 June 2018

ஐங்குறுநூறு - பாலை 1

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் – பாலை நிலத்தின் உரிப் பொருள். பாலை நிலமென்பது முல்லை நிலமும் குறிஞ்சியும் தன் நிலையிலிருந்து மாறிய நிலையில்,  நீர் வறண்ட வெப்பம் மிகு நிலம். தலைவன் தலைவியுடன் உடன் போக்கினால் தமரைப் பிரிதல் மற்றும் தலைவியைப் பிரிதல் என இருவகையான பிரிவுகளை கொண்டது. ஓலாந்தையார் எழுதிய பாலை நிலப் பாடல்களில் உள்ள பத்து தொகுபுகள்

1. செலவழுங்குவித்த பத்து
2. செலவுப் பத்து
3. இடைச்சுரப் பத்து
4. தலைவி இரங்கு பத்து
5. இளவேனி்ற் பத்து
6. வரவுரைத்த பத்து
7. முன்னிலைப் பத்து
8. மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து
9. உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து
10. மறுதரவுப் பத்து

செலவழுங்குவித்த பத்து:

பிரிவிற்கு ஒரு காரணமான பொருளீட்டுதல் பொருட்டு தலைவன் தலைவியைப் பிரிய நினைப்பான். அங்கணம் பிரியாமல் தோழி தடுத்து கூறுவதாய் அமைந்த பத்து பாடல்களின் தொகுப்பு இது. செலவு – செல்லுதல், அழுங்குவித்தல் – தடுத்தல்..

கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர்ப் பத்தல் யானை வெளவும்
கல் அதர்க் கவலை செல்லின், மெல்லியல்
புயல் நெடும் கூந்தல் புலம்பும்,
வயமான் தோன்றல்! வல்லாதீமே.

அறியாமையையுடைய இடையர்கள் தங்களது கோலால், பசுக்கள் குடிப்பதற்காக, உண்டாக்கிய  பள்ளத்தில் உள்ள நீரை காட்டு யாணைகள் குடிக்கும்.. கற்கள் நிறைந்த பிரிவுகள் கொண்ட காட்டுப்பாதையில் நீ சென்றால், மென்னையானவளும் நீண்ட கூந்தலைக் கொண்டவளுமாகிய என் தோழி மிகவும் வருந்துவாள். குதிரைகளைக் கொண்ட தலைவனே நீ செல்லாதே என்ற் தோழி கூறுவதாக உள்ளது இப்பாடல்.
இதில் பசுக்களுக்காக தோண்டப் பட்ட குழியில் உள்ள நீரை காட்டு யாணைகள் குடிக்கும் என்றது நீ பிரிவாயானால் உனக்கான இவள் எழில் பசலையால் அழியும் என குறிப்பாக கூறுகிறாள். கல்லாக் கோவலர் கருவிகள் இல்லாமல் கோலின் தோண்டிய பள்ளம் என்றது, கொடுப்பாரும் கொள்வாரும் இல்லாமல் தாமாகத் தேடிக் கொண்ட காதல் வாழ்வைக் குறிக்கும்.

செலவுப் பத்து:

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்,
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்,
நீடுவர் கொல், என நினையும் என் நெஞ்சே.

வேங்கை பூவைப் பறிப்பவர்கள், பாலைப்பண்ணைப் பாடினாலும், வழிசெல்வோருக்கு பண் இனிமையைத்தராது பாலையின் கொடுமையையே காட்டும். அப்படியே காட்டிற்குச் சென்ற தலைவன் வாராது காலம் கடத்துவாரோ என்றே என் நெஞ்சம் வாடும். எனத் தலைவி தோழியிடம் கூறுவதாய் அமைந்துள்ளது இப்பாடல்.

இடைச்சுரப்பத்து

முதற்பத்தில் தலைவன் செல்லாமல் தோழி தடுப்பதும், அடுத்தபத்தில் அவன் பிரிந்து செல்வதும் கூறப்படுகிறது. இடைச்சுரப்பத்தில் அவ்வாறு தலைவன் பிரிந்து செல்கையில் வழியில் ஆற்றாமை கொண்டு தலைவியின் குணநலங்களையும் அவளது துன்பத்தையும் நினைவு கூர்வான். இவ்வகையில்அமைந்த பத்துபாடல்களின் தொகுப்பு இது.

நெடுங்கழைமுளியவேனில்நீடி,
கடுங்கதிர்ஞாயிறுகல்பகத்தெறுதலின்,
வெய்யஆயின, முன்னே; இனியே,
ஒள்நுதல்அரிவையைஉள்ளுதொறும்
தண்ணியஆயின, சுரத்திடைஆறே!

உயர்ந்து வளர்ந்த மூங்கில் காயும் படியும்  கற்கள் வெடிக்கும் படியாகவும் வெயில் காய்கிறது. ஒளிப்பொருந்திய நெற்றியைக் கொண்ட அரிவையாகிய என் தலைவியின் நினைவு வந்ததும் அவையே குளுமையானதாய் தெரிகிறதே!

தலைவியின் நினைவால் வெப்பம் மிகு பாலையும் தண்ணிய ஆயின. இதே தலைவன் போகும் வழியில் மழைப் பெய்கிறது. மலர்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன  என்றாலும் குளிர்ந்த அவ்விடம் தலைவியில்லாது வேதனையையே அவனுக்குத் தருகிறது. இவ்வாறு தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் தலைவியின் நினைவால் வாடும் தன் நிலையை நெஞ்சுக்குச் சொல்வதாய் அமைந்துள்ளன இப்பத்துப் பாடல்கள்.

தலைவி இரங்கு பத்து

அம்மவாழி, தோழி! சிறியிலைக்
குறுஞ்சினைவேம்பின்நறும்பழம்உணீஇய
வாவல்உகக்கும்மாலையும்
இன்றுகொல், தோழி! அவர்சென்றநாட்டே?

தலைவன் பிரிந்து சென்று விட்டான். அவன் பிரிவால் வாடும் தலைவி வருந்தி சொல்வதாகவும், அவளை ஆற்றுவிப்பாளாய் தோழி சொல்வதாயும் அமைந்த பாடல்கள் இதன்கண் உள்ளன.

அம்ம வாழி தோழி என்று விளித்து, சிறிய இலைகளைக் கொண்ட மரத்தின் கிளையில் வேம்பு பழுத்திருக்கும். அதை உண்ணும் விருப்பத்தோடு மாலையில் வவ்வால் வரும். அப்படிப்பட்ட மாலை நேரம் அவர் சென்ற நாட்டில் இல்லையோ என்று குறித்து பருவம் வந்தும் தலைவன் வராமையால் மாலை நேரம் அவளை வாட்டுவதாய் வருந்திக் கூறுகிறாள்.

இளவேனிற் பத்து

அவரோ வாரார்; தான் வந்தன்றே
குயில் பெடை இன் குரல் அகவ,
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே!

இளவேனிற் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று சொல்லித் தலைவன் பொருளீட்ட செல்கிறான். இளவேனிற் காலம் வந்தும் தலைவன் திரும்பாத்தால் தலைவி தோழியிடம் இப்படிச் சொல்லி வருந்துகிறாள்.

பெண்குயில் தன் இனிய குரலில் பாடுகிறது. ஆற்றில் வரும் தெளிந்த நீரில் நுண்மணல் படிகிறது. இளவேனிற் காலம் வந்துவிட்டது ஆனால் அவர் வரவில்லை

அழகிய கிளைகளில் பாதிரிப்பூக்கள் பூத்துக் கிடக்கிறது என்று குயில்கள் பாடுகின்றன ஆனால் அவர் வரவில்லை என்று பலவாறாக தலைவி வருந்தி சொல்வதாய் அமைந்துள்ளன இப்பாடல்கள்.

தலைவனைப் பிரிந்து தலைவியும் தலைவியைப் பிரிந்து தலைவனும் படும் துன்பம் பாலை நிலத்தின் நிகழ்வுகளோடு மிக அழகாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன இப் பாடல்களில். பாலையில் மற்ற தொகுப்புக்களின் பாடலோடு விரைவில் 

அன்புடன்
உமா.

No comments:

Post a Comment