Saturday 24 November 2018

பத்துப் பாட்டு - திருமுருகாற்றுப்படை



இதுவரை சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களைப் பற்றி அறிந்துக் கொண்டோம். இப்போது மற்றொரு தொகை நூலான பத்துப்பாட்டைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். 

இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அகவற்பாவால் இயன்றவை.

பத்துப்பாட்டில் உள்ள  செய்யுட்களும் எட்டுத்தொகையில் உள்ள நூல்களைப் போலவே அகம், புறம் என்ற இரு பிரிவுகளில் அடங்கும்.
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.
திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய ஆறும் புறப்பொருள் பற்றியன. இவற்றுள் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற பிரிவில் அடங்கும். இறுதியானது நிலையாமை பற்றிக் கூறும் காஞ்சித்திணையைச் சேர்ந்ததாகும்..

இனி இந்த பத்து தனித்தனி நூல்கள் பற்றிக் காண்போம்.

திருமுருகாற்றுப்படை.

பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை. இது 317 அடிகள் கொண்ட அகவல். முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த இதனை இயற்றியவர் நக்கீரர். ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிப்படுத்துதல். ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர் நூலுக்கு அமைவது ஏனைய ஆற்றுப்படைகளின் பண்பு. இது, அதற்கு மாறாக, பாட்டுடைத் தலைவன் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

1.   முதற்பகுதி  -  திருப்பறங்குன்றம்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

இங்கு உலகம் என்பது அதில் தங்கியுள்ள உயிர்களைக் குறித்து இடவாகு பெயராய் அமைந்தது. உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் மகிழும் படியாக எழுந்து, மேருமலையை வலமாக சுற்றி வரக்கூடிய



பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு, 

உலகின் அனைத்து மதங்களாலும், சமயங்களாலும் போற்றப்படுவது ஞாயிறு என்பது இங்கே குறிக்கப் படுகிறது. ஞாயிற்றை கடலில் காண்டது போல. ஞாயிறு கடலில் தோன்றுவது மிக அழகான தோற்றம், தோற்றம் மற்றும் வினையாலும் இவ்வுவமை அழகு பெறுகிறது.

தன்னை மனத்தால், உள்ளம் உருக நினைப்போருக்கு கடலைப்போல் தண்ணியனாகவும், அவர்களின் அறியாமை இருளை போக்கும் ஞாயிறாகவும் விளங்குபவன் முருகன். கடலின் பசுமையாகவும், ஞாயிற்றின் வெம்மையாகவும் ஒருசேர விளங்குபவன். இது தொழில் உவமையாயிற்று.

கடலினின்றும் ஞாயிறு தோன்றுவது ஞாயிற்றினை போல் ஒளிப் பொருந்திய முருகன் நீல மயில் வாகனத்தில் அமர்ந்து காட்சியருள்வது போல் இருப்பதாக காட்டியது தோற்றவுவமையாகிறது. நீலக் கடல் மயிலைப் போலவும் அதன் மேலமரும் முருகன் ஒளிப்பொறுந்திய ஞாயிறாகவும் காட்டப்படுகிறான்.

இப்படி அருமையான காட்சிப்படுத்துதலோடு துவங்கும் இப்பாடலில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகள் பற்றியும், ஆங்காங்கு நடக்கும் வழிபாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

முருகப் பெருமானின் திருஉருவச் சிறப்பும், அவர் மார்பில் அசையும் மாலையழகும்,

கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,         
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,

கார்கோள் என்பது கடல் நீரை சுட்டுகிறது. கார் – மேகம் கடலிலிருந்து முகந்து பெய்வதால், மேகத்தால் முகர்ந்துக் கொள்ளப்படுதலால் கார்கோள் என்பது கடல் நீருக்கு ஆகுபெயரானது.
வாள் – ஒளி, போழ் – பிளக்கும்.
ஒளியால் வானிருளைப் பிளக்கும், போக்கும் ஞாயிற்றினுக்கும், திங்களுக்கும் வாள் ஆகுபெயரானது.

"கடல்நீரை முகந்த காரணத்தால் நிறைவான கருவுற்ற 'கார்' எனப்படும் கரிய நிறமான மேகமானது, ஞாயிறும் திங்களும் இருளைப் போக்குவதால் ஏற்படும் ஒளி பொருந்திய ஆகாயத்திலிருந்து மாபெரும் மழைத்துளிகளைப் பொழியவும், 'கார்காலத்’ தொடக்கத்தில் குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய காடுகளில் பெய்யும் அந்த' முதல் மழை'யின் பயனாக இருள் போன்று அடர்த்தியாகத் தழைத்த, பருமனான அடிப்பாகத்தையுடைய செங்கடம்பு மரங்களில் மலர்ந்த, தேர்ச் சக்கரத்தைப் போன்ற வட்ட வடிவுடைய குளிர்ச்சி பொருந்திய [சிவப்பு நிற கடம்ப மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை புரளுகின்ற திருமார்பினன் திருமுருகப்பெருமான்."

என மிக அருமையாக காட்டப்பட்டுள்ளது படித்தின்புறதக்கது.

சூரரமகளிர் இயல்பை குறிக்குமிடத்தில்
சூர் என்றால் அச்சம், அச்சம் தரக்கூடிய மலை வாழ் சூரர் மகளீரை மிக அழகானவர்களாக சங்க இலக்கியங்கள் இயம்பும்.
இங்கும்

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின்…

கைகளால் புனைந்து செய்யப்பட்ட செயற்கை அழகாக அல்லாமல் இயற்கையாக இறைவனால் அருளப்பட்ட அழகு நிறைந்தவர்கள் என காட்டப்படுகின்றனர்.
ஓவியமாகவோ, சிற்பமாகவோ அல்லது எழுத்திலோ கற்பனைக் கொண்டு கையால் இயற்ற முடியாத பேரழகு கொண்டவர்கள் சூரர மகளீர்.

பெருமான் சூரபன்மனை அழித்த செயலைக்குறிக்கையில்

பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு,    45
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்

நிலம் முடிந்து துவங்கக் கூடிய கடலின் மேல் சென்று, சுடர்வீசும் இலைபோன்ற தன்வேலை வீசிச் சூரபனமனின் குல முதலையே கொன்றழித்த கொற்றவன் என்றும் குறிப்பிடபட்டுள்ளது

இன்னும்
மதுரையின் பெருமையும், திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகும் காட்டப்படும் போது

போரை விரும்பி ஆடவர் உயர்த்திய கொடிகள் மதுரையில் எப்போதும் பறந்துகொண்டேயிருக்கும். மகளிர் பந்தும் பாவையும் விளையாடிக் கொண்டிருப்பர். போரிட்டோரைத் தேய்த்துத் தேய்த்து,  போரிடுவர் இல்லாமல் போனதால் செல்வத் திருமகள் அரியணை ஏறி ஆண்டுகொண்டிருப்பாள். இப்படிப்பட்ட கடைத்தெருக்களும் மாடமறுகுகளும் கூடியிருப்பதுதான் கூடல் எனப்படும் மதுரை

அந் நகரின் மேற்குத் திசையில் அமைந்திருக்கும் அகன்ற நெல் வயல்களில் முட்கள் பொருந்திய தண்டுகளை உடைய தாமரை மலர்கள் மீது வண்டுகள் இரவில் உறங்கிய பின்னர் வைகறையில் தேன் மணம் கமழும் நெய்தல் மலர் மீது மொய்த்து ஊதி, கதிரவன் தோன்றிய பின்னர் மலையின் சுனைகளில் கண்களைப் போல் பூத்துள்ள விருப்பம் தரும் மலர்களின் அருகே சென்று ரீங்காரமிடும் அழகிய இடமாகிய திருப்பரங்குன்றத்தின் மீது திருமுருகப்பெருமான் மனம் விரும்பி அமர்ந்திருபார் என மிக அருமையாக காட்டியிருப்பது அறிந்து மகிழத்தக்கது.

இப்படி திருப்பறங்குன்றத்தினைப் பற்றியச் செய்திகள் முதற்பகுதியில் இடம்பெறுகின்றன.

2.       இரண்டாம் பகுதி -  திருச்செந்தூர்


பெருமான் ஏறும் பிணிமுகம் என்னும் யானையின் இயல்பு,
கூற்றத் தன்ன மாற்றஅரு மொய்ம்பின்
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு

யமனைப் போன்று தடுப்பதற்கு அரிதான வலிமையினையும் உடைய, கடுமையாக வீசும் காற்றைப் போன்று விரைவாகச் செல்லும் ஆண் யானை எனவும்

மேலும்
அவருடைய ஓறாறு திருமுகங்கள், ஈறாறு திருக்கைகளின் செயல்கள், அவர் திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) எழுந்தருளியிருக்கும் மேன்மை ஆகியன இரண்டாம் பகுதியில் இடம்பெறுகின்றன.

3.       மூன்றாம் பகுதி – பழனி என அறியப்படும் திருவாவினன்குடி
    
    


மூன்றாம் பகுதியில் திருவாவினன்குடியில் (பழனியில்) முனிவர்கள் பெருமானை வழிபடும் முறையும், சிவபெருமானும், திருமாலும், பிறதேவர்களும் பெருமானைக் காண வருதலும் விளக்கப்படுகின்றன.

4.       நாங்காவது பகுதி - சுவாமிமலை
நான்காவது பகுதியில், பெருமான் ஏரகத்தே (சுவாமிமலை) எழுந்தருளியிருத்தலும், அந்தணர் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து வழிபடலும் கூறப்பட்டுள்ளன. அம்மந்திரம்நமோ குமராயஎன்பார் நச்சினார்க்கினியர்.

5.   ஐந்து - குன்றுதோராடல்
ஐந்தாவது பகுதியில் பெருமான் ஒவ்வொரு குன்றிலும் ஆடும் பண்பு விளக்கப்படுகிறது.

6.   ஆறு – பழமுதிர்சோலை, முருகனின் இருப்பிடங்கள்


ஆறாம் பகுதியில் முருகப் பெருமான் ஊர் தோறும் கொண்டாடப்படும் விழாவிலும், வெறியாடும் களத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றிடைக் குறைகளிலும் (திட்டு), ஆறுகளிலும், குளங்களிலும் சதுக்கங்களிலும் மன்றங்களிலும் பிறவிடங்களிலும் உறையும் நிலை விளக்கப்பட்டுள்ளது.

குறவர்கள் தமக்கே உரிய முறையில் உயிர்க் கொலையுடன் முருகனை வழிபடும் பண்பு இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பு.

ஆடு களம் சிலம்பப் பாடி, பலவுடன்
கோடு வாய்வைத்து, கொடு மணி இயக்கி,   
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி,             
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட,          
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே.               

என்று முருகனை வழிப்படுதலையும்

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்,               
நின் அடி உள்ளி வந்தனென்; நின்னொடு         
புரையுநர் இல்லாப் புலமையோய்!' எனக்      
குறித்தது மொழியா அளவையின்       
என்றும்

அஞ்சல் ஓம்புமதி, அறிவல் நின் வரவு' என,               
அன்புடை நல் மொழி அளைஇ, விளிவு இன்று,       
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து            
ஒரு நீ ஆகித் தோன்ற, விழுமிய            
பெறல் அரும் பரிசில் நல்குமதி

என்று அவன் அருள் புரிதலையும்

மேலும் முருகப் பெருமானை வழிபடும் முனிவர்களின் உருவத் தோற்றத்தையும், பழமுதிர்சோலையின் இயற்கை அழகையும் விளக்கும் பகுதிகள் நக்கீரர் புலமைக்குச் சான்று.

இந்நூலின் அருமை கருதி, பிற்காலத்தில் சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் ஒரு பகுதியாக இதனைச் சேர்த்துள்ளனர். இது, சைவர்களின் வழிபாட்டு நூலாக விளங்குகிறது.

மீண்டும் மற்ற ஆற்றுப்படை நூல்களைப்பற்றியக் கண்ணோட்டத்தோடு

விரைவில்

அன்புடன்
உமா…

Wednesday 7 November 2018

அகநானூறு பிற திணைகள்


அகநானூறு – முல்லை.
அகநானூறில் 4, 14, 24 என்பது போல் எண் கொண்ட 40 பாடல்கள் முல்லைத்திணை சார்ந்தவை.

விணை முடிந்து மீண்ட தலைவன் தன் தேர்ப்பாகனை பாராட்டுவதாய் அமைந்த பாடல் இது. பாடல் எண் 254
……..
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி, 
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
தார் மணி மா அறிவுறாஅ,
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!

இப்பாடலில் காணப்படுகின்ற புரவி கட்டியிருத்தலை விரும்பாத, போர்த் தொழில் பயின்ற, அதுமட்டுமல்லாமல் குறிப்பறிந்து வினையாற்றக்கூடியதாகவும் உள்ளது. “பாகனே! மனமறிந்து செயல்படும் குதிரையை உனது நெடுமையானத் தேரிலேப் பூட்டி வழியில் பூத்திருக்கும் மின், தவளம் முல்லைக் கொடியெல்லாம் அறுந்து விழவும், முல்லை நிலமானது நமக்கு பின்னே செல்லுமாறும் விரைந்து செலுத்துக” என்று தலைவன் சொன்ன அளவிலேயே ஊரின் அருகில் தேர் வந்துவிட்டதாம். உவகையோடு பாகனைத் தலைவன் பாராட்டுவதாய் அமைகிறது பாடல்.

முல்லை நிலப் பாடல்களில் தேரின் வேகம் வியப்படைய வைக்கிறது.

மற்றொருப் பாடலில்

போருக்காகச் சென்ற தலைவன் இல்லத்திற்குத் திரும்புகின்றான். அவன் தேரில் ஏறி அமர்ந்தது மட்டுமே அவனுக்குத் தெரிகிறது. வந்த வழியே தெரியவில்லை. வீடு வந்துவிட்டது, தேரைவிட்டு இறங்குங்கள் என்று தேர்ப்பாகன் கூறுகின்றான். வியப்படைந்த தலைவன் தேர்ப்பாகனைப் பார்த்து விண் வழியே செல்லும் காற்றைத் தேரில் பூட்டி ஓட்டினாயா? அல்லது உனது மனத்தையே குதிரையாக்கித் தேரில் பூட்டி ஓட்டினாயா? என்று கேட்கின்றான். இவ்வியப்பு உணர்வை,

இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறிய தறிந்தன்று அல்லது வந்தவாறு
நனியறிந் தன்றோ இலனே --------
--------------------------------
--------------------------------
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே
வான்வழங்கு இயற்கை வளிபூட் டினையோ?
மானுரு வாகநின் மனம்பூட் டினையோ?
உரைமதி வாழியோ வலவ ----------

இப்படி விணைமுடிந்து திரும்பும் தலைவனின் மனமறிந்து பாகனும் அப்பாகனின் மனமறிந்து செல்லும் குதிரையும் முல்லை நிலப் பாடலில் நாம் காண முடியும்..

ஈங்கு நளவெண்பாவில் காட்டப்பட்டுள்ள நளனின் தேரோட்டும் திறன் ஒப்பிட்டு மகிழ தக்கது. நளவெண்பாவில், கலி நீங்கு காண்டத்தில் 356/357 ம் பா க்கள்.

முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றா னூர்கின்ற தேர்.

மேலாடை வீழ்ந்த தெடுவென்றா னவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டா னேறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.

நளனின் தேர், மன்னனின் சிந்தையைவிட விரைந்து சென்றதாம். வேகத்தில் மன்னனின் மேலாடை வீழ்கின்றது. `வீழ்ந்தது எடு` என்று சொல்லும் நேரத்திற்குள்ளாக தேர் நாலாறு காதம் தாண்டியதாம் நளனின் தேர்.

அகநானூறு மருதம்

மருதத் திணையின் ஒழுக்கம் ஊடலும் நிமித்தமும். இதில் தலைவன் செய்கையை உள்ளுறையாக காட்டும் பாடல்கள் அமைந்துள்ளன.
316ம் பாடல்
------
துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்……

இப்பாடலில் எருமை ஒன்று பொய்கையிலே இருக்கின்ற ஆம்பல் மலர்களைத் தின்று, சேற்றிலே கிடந்து உறங்கி, விடியற் காலையிலே வரால் மீன்கள் துண்டாகும்படி அவற்றை மிதித்து, பகன்றைக் கொடிகளை மேலே பற்றிக்கொண்டு போர் வீரரைப்போல ஊருக்குள் நுழைகிறது என்ற செய்தி ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. இது, தலைவன் ஒருவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு, இரவில் அங்கேயே தங்கி, விடியற்காலையில் எல்லாரும் பார்க்கும் வகையில் வெளியேறி, குடிப்பெருமையைச் சிதைத்து, அடையாளங்களுடன் வந்தான் என்ற செய்தியை மறைமுகமாகத் தருகிறது.

அகநானூறு நெய்தல்.

நெய்தல் நிலத்தில் 160ம் பாடல்

நிறைச்சூல் யாமை மறைத்துஈன்று புதைத்த
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்.

(யாமை) ஆமை ஒன்று மறைவான இடத்தில் முட்டையிட, அதனைக் குஞ்சு பொறிக்கும்வரை ஆண் யாமை பேணிக் காக்கும் எங்கிறச் செய்தி செல்லப்பட்டிருக்கிறது. இது, தலைவன் களவொழுக்கத்தைத் திருமணம் வரை யார்க்கும் தெரியாமல் மறைத்துக் காப்பான் என்ற செய்தியை உள்ளுறையாகத் தருகிறது.

அகநானூறு பாலை

பிரிதலைப்பற்றி பேசும் பாலை நிலப் பாடல்களில் காட்டுப் பாதையின் கடுமை பயங்கரமானதாகக் காட்டப்பட்டுள்ளது.

உச்சி வெயில் சுட்டெரிக்கும் வழி. மழை வறண்டுபோன நிலப்பரப்பு. பேய்த்தேர் என்னும் கானல் நீரோட்டம், நீர் போலத் தோன்றி ஏமாற்றும் வழி. புல் வளர்ந்து சாய்ந்துகிடக்கும் மலைப்பிளவுகளில் இருந்துகொண்டு கோட்டான் சேவல் அச்சம் தரும் குரலைக் கொடுக்கும் வழி. வேல மரத்தில் இருக்கும் சில்வண்டு, கவணிலிருந்து வீசப்படும் கல் செல்லும் ஓசை போல் ஒலி கேட்கும்படி கத்தும் வழி. உலர்ந்த நெற்றுக்கள் வேல மரத்திலிருந்து உதிர்ந்து கிடக்கும் வழி.
வில்லேந்திய மறவர் வேட்டையாடிய விலங்கின் கறியைச் சுட்டுத் தின்பார்கள். தோள் வலிமை மிக்க கழுதையின் மேல் சுமையை ஏற்றிக்கொண்டு வழிப்போக்கர்கள் வருவர். வாள் வீரர்கள் அவர்களோடு போரிட்டு அவர்களின் தலையை வெட்டி வீழ்த்துவர். அவை புலால் நாற்றம் அடிக்கும். வழிப்போக்கரின் அரிய செல்வ வளங்ககளை மறவர்கள் எடுத்துக்கொண்டு வந்து ஊரில் (குறும்பு) உள்ள அனைவரையும் துடி முழக்கி அழைத்து குடும்பத்தார் எண்ணிக்கையில் பங்கிட்டுத் தருவர். இப்படிப் பட்ட கடுமையான பாதையில் தன் மகள் செல்கிறாளே என்று செவிலித்தாய் கலக்கமுறுகிறாள்.

பாலை நிலத்தில் 89ம் பாடல்

தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,            
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்  
மை படு திண் தோள் மலிர வாட்டி,
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,            
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,            
இடு மணற் பந்தருள் இயலும்,
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?

காழியர் (துணி துவைத்துத் தரும் வண்ணார்) உவர் மண் தோண்டி எடுத்த நிலப்பரப்பில் தன் மகள் செல்லவேண்டும். (வண்ணார் துணியை வெளுப்பர். துணியில் இருக்கும் அழுக்கை முழுமையாக நீக்குவதற்காக அழுக்குத் துணிகளை நீரில் நனைத்து உப்பு மண்ணில் புரட்டி, நீராவி வரும்படி, சூளையில் வைப்பர். பின் நீரில் துவைப்பர்.) களர் நிலத்திலும், கல் நிலத்திலும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
இங்கு நான் பாலில் தேனைக் கலந்து அவளுக்கு ஊட்டுவேன். அவள் உண்ணமாட்டாள். நான் உண்ணும்படி அடிப்பேன். அவள் பந்தல் மணலில் அங்குமிங்கும் ஓடுவாள். இப்பொழுது வருந்துவாளோ என கூறுவதாய் அமைந்த இப் பாடலில் தாயின் பிரிவுத்துயரும் காட்டு வழியின் கடுமையும் சொல்லப்படும் அதேகாணம் துணி துவைக்கும் வண்ணார்காளின் வழக்கங்களும் அழகாக காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அகநானூறில் அக பொருள் பற்றி மிக அழகாக காட்டும் அதே வேளையில் பல வரலாற்று செய்திகளையும், அக்கால வாழ்க்கை பழக்கங்கள், வாழ்க்கை முறை, பண்பாடு, அக்கால வாணிப முறை ஆகியனவும் மிக அருமையாக காட்டப்பட்டிருக்கின்றன.

அகநானூறின் இலக்கிய நயம் அறிவோம், சுவைப்போம்….

அடுத்த பதிவுடன் விரைவில்

அன்புடன்
உமா