Saturday 21 April 2018

நற்றிணை 5 பாலை


குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்பன நானிலங்கள். தமிழில் பாலை என்று நிலம் இல்லை. குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும் மற்றும் முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும் ஆகிய நிலப்பகுதிகள் கால மாற்றங்களால் திரிந்து தம் இயல்புகளினின்றும் மாறுபட்டு நிற்கும். இங்ஙனம் மாறுபட்ட நிலப் பகுதி பாலை என்று அழைக்கப்பட்டது.

நற்றிணையின் 110வது பாடலான இப்பாடல் உடன் போகினாள் மகள் எனக் கேட்ட நற்றாய், சிறு விளையாட்டியாய் இருந்தவள் இல்லறம் நடத்தும் அறிவும் பண்பும் எப்படி பெற்றனள் என வியந்து கூறினாலும் இவ்வளவு நாள் பிரிந்தறியாதவள் பிரிவாற்றாளாய் வருந்தி கூறுவதாயும் அமைந்த பாடல். உரிப் பொருளால் இப்பாடல் பாலைத்திணைக்கானது.

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்   
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே.

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்   
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்

தேன் கலந்ததையொத்த நல்ல சுவையுள்ள வெண்மையான இனிய பாலுணவை விரிந்து ஒளிவீசும் பொன்னாலாகிய கலத்தில் இட்டு அதை ஒருகையால் பிடித்து நின்று

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குபு புடைப்பத்

புடைக்கும் பொழுது புடைக்கப்பட்டவரை சுற்றிக்கொள்ளும் தன்மையதான சிறு கோல், ஓங்கும் போது நோகாதிருக்க நுனியில் பூக்கள் இருப்பதாக ஒடித்துக் கொள்ளப்பட்ட சிறு பூங்கொம்பு. அக்கொம்பினை ஓங்கியப்படி உண்பாயாக எனவும்

தெண்ணீர்
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று

தெளிந்த ஒளியினையுடைய முத்துக்கள் பரலாகப் போடப்பட்ட பொன்னாலாகிய சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து ஓடி

அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரிமெலிந் தொழியப்

மெல்லியதான நரைத்த கூந்தலைக்கொண்ட செவிலியர் மெலிந்து போகுமாறு

பந்தர் ஓடி
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி

பூப்பந்தலின் கீழ் ஓடி, உண் என்பதற்கு நான் உண்ணேன் என ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டுப் பெண்ணானவள்

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே.

மணந்து கொண்ட கணவன் வீட்டில் வறுமை. ஆனாலும் தந்தை கொடுத்த மிகுந்த உணவை உண்ணாது ஓடுகின்ற நீரில் கலந்திருக்கும் நுண்மணல் போல் இடைவெளி விட்டு கிடைக்கும் போது மட்டும் உண்கிறாள்.

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
அறிவும் ஒழுக்கமும் எங்கிருந்துப் பெற்றாள்

இப்பாடல் பள்ளி கூட பாடபுத்தகத்தில் படித்திருப்போம்.. மீண்டும் ஒருமுறை சுவைப்போம்.

செல்வ செழிப்பாக வளர்ந்தவள் தலைவி. பாலுணவை பொற்கலத்திலேந்தி உண் என்றாலும் முத்துப் பரல் கொண்ட சிலம்புகள் ஒலிக்க ஓடி ஒளிந்து உண்ணாமல் போக்குக் காட்டும் சிறு விளையாட்டியாக வளர்ந்தவள்.
தலைவனோடு உடன் போகிறாள். கணவன் வீடோ வறுமைக்குட்பட்டது. வேளைக்கு உணவு கிடைக்காது. இவளை செல்லமாக வளர்த்த தந்தை நிறைய உணவை கொடுத்தணுப்புகிறான். ஆனாலும் அதை உண்ணாமல், ஓடும் நீரில் நுண்மணற் கலந்திருப்பது போல். தன் கணவன் வீட்டு உணவை ஒரு வேளை பட்டினி கிடந்து மறு வேளை உண்கிறாள். இந்த நல்லறிவையும், ஒழுக்கலாற்றையும் எங்குக் கற்றுக்கொண்டாள்? என்று மகள் நிலைக்கண்டு தாய் வியக்கிறாள்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இப்பாடல் குறுந்தொகையி 40வது பாடல்.அனைவரும் அறிந்த பாடல்.
செம்மண்ணில் கலந்த நீர் மண்வேறு நீர்வேறு எனப்பிரித்தறிய முடியாவண்ணம் ஒன்றாக கலந்துவிடும் அதுபோல் அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே என்று மிக அற்புதமான உவமை ஒன்றை காட்டி பாடலாசிரியர் செம்புல பெயர்நீரார் என்ற பெயர் பெறுகிறார்.

இதற்கு நேர் எதிராக இப்பாடலில் ஒழுகுநீர் நுணங்கறல் போல’ என்பது ஒன்றுபோலிலாமல் இடைவெளிவிட்ட தன்மைக்கு எடுத்துக்காட்டானது. தொடர்ந்து வேளாவேளைக்கு உணவு உண்ணாமல் கிடைக்கும் போது மட்டுமே உண்கிறாள். நுண்மையான மணல் ஓடும் நீரில் கலந்திருக்கும் போது கண்ணிற்கு தெரியாது. நீர் தெளிவாகவே காணும். ஆனால் மணல் நீரில் ஒன்றாக கரையாமல் தனித்தனியே தட்டுப்படும். அதுபோலவே வேளைக்கு உணவு உண்ணாமல் இடைவெளி விட்டு கிடைக்கும் போது மட்டுமே உண்கிறாள். தந்தையின் மிகுந்த உணவையும் மறுத்து

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

என்பதற்கொப்ப மனைநலம் காக்கிறாள். வறுமை வெளித் தெரியாமல் வாழ்கிறாள்.

செல்வச் செழிப்பிலே வளர்ந்தாலும், வறுமையிலும் இல்லறம் காக்கும் இப்பண்பிணை எங்கிருந்து பெற்றாள் என்று நற்றாய் பிரிவாற்றமையிருந்தாலும் பெருமிதமாய் கூறுகிறாள்.

இன்றும் பெற்றோருக்கு தன் குழந்தைகள் சிறியவர்களாகவே தெரிகின்றனர். காலம் அவர்களை வளரச் செய்கிறது. ஒருகுறிப்பிட்ட காலத்தில் திருமணம் கருதியோ அல்லது அவர்கள் வாழ்வின் முன்னேற்றம் கருதியோ பிரிய நேர்கிறது. இவ்வளவு நாள் கைப்பிடித்து வந்தவர்கள் விலக நேரும் போது வரும் உணர்வு எல்லா காலங்களிலேயும் எல்லா தலைமுறையினரையும் தாக்கி யிருக்கிறது. இவ்வுணர்வை இப்பாடலில் மிக அழகாக பதித்திருக்கிறார் போதனார். அபியும் நானும் படத்தில் இதே உணர்வு அழகாக பதிக்கபட்டிருக்கிறது. மகனோ மகளோ உள்ள எல்லார் வீட்டிலும் அனுபவமாவது இவ்வுணர்வு..

பாலையில் இன்னுமொரு பாடல் இதன் ஆசிரியர் நல்வெள்ளியார்.
இவர் பெண்பாற் புலவர் ஆவார். இவரது ஊர் மதுரை. நற்றிணையில் 2, குறுந்தொகையில் 1, அகநானூற்றில் 1 என இவரது பாடல்கள் நான்கே எனினும் அழகான வருணனைகளாலும், மறைமுக உணர்ச்சிச் சித்திரிப்பினாலும் உயர்ந்த தரமுடையவை.

சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்   
பெருவரை அடுக்கத் தருவி யார்ப்பக்
கல்லலைத் திழிதருங் கடுவரற் கான்யாற்றுக்     
கழைமாய் நீத்தங் காடலை யார்ப்பத்
தழங்குகுர லேறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி   
வெண்ணெ லருந்திய வரிநுதல் யானை
தண்ணறுஞ் சிலம்பின் துஞ்சுஞ்
சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே.

முன்பு முல்லை நிலப்பாடலில் கார்காலம் துவங்க இருப்பதை அறிந்த தலைவன் தேரை விரைவாக செலுத்த பாகனை ஏவி நின்ற காட்சியைக் கண்டோம்.
இப்பாடலில்
பொருள் தேடச் சென்ற தலைமகன் வரவில்லையே என வருந்துகிறாள் தலைவி. கார் காலம் துவங்கி விட்டதால் விரைவில் தலைவன் வருவான். நீயும் அவனோடு இன்புருவாய் என தேற்றுவாளாய் தோழி கூறுகிறாள்.
வரியுடைய நெற்றியைக்கொண்ட யானை, மூங்கில் அரிசியைத் தின்று, வாசம் வீசும் மலைப்பக்கத்திலே போய் தூங்கும். மலைக்காட்டில் மழையின்றி சிறிய இலையுடைய சந்தன மரங்கள் வாடி நிற்கும்.
சந்தன மரத்தின் வாட்டம் நீங்கவும், அச்சத்தையுடைய பெரிய சுனையில் நீர் நிறையவும், பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிக்கவும், கற்களைப் புரட்டிக் கொண்டு ஓடிவருகின்ற கானியாற்றில், ஒலிக்கின்ற இடியோடு முழக்கம் செய்து, மேகம் பெய்த மழையில், மூங்கிலும் முழுகுமாறு வெள்ளம் உருவாகிக், காட்டில் சென்று மோதும்.
இக்காலத்தை நோக்கினவுடன் அவர் உடனே வந்து உன்னை வரைந்து (கூடி) கொள்வார். ஆகவே நீ வருந்தாதே!!
அச்சம் தரும் சுனையில் நீர் நிறையவும், பெரிய மலையடுக்கத்தில் அருவி கொட்டுமாறும்
பற்றுக் கோடாகிய மூங்கிலும் முழுகுமாறு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து பாயுமாறும்
ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னா நிற்கும்

தோழியின் பேச்சு வெறும் மழை வருணனையாக மட்டுமே நின்று விடுகிறது. வெறும் வருணனையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவிதை அமைவது சங்க இலக்கியத்தில் இல்லை. ஆகவே தோழியின் பேச்சில் மறைபொருள் இருக்க வேண்டும்.

வாடுகின்ற பெருங்காட்டிலே அக்காடு தழைப்ப மழைபெய்யத் தொடங்குமென்றது வாடி நிற்கின்ற தலைவி மகிழுமாறு தலைவன் வருவான். மழை பெய்து பெருக்கெடுப்பிற் காட்டில் வருதற்கியலாதாதலிற், பெருக்கெடுக்குமாறு மழைபெய்தற் பொருட்டு முகில்கள் திரண்டு நிற்கும் என்றாள். கார் காலத்தைக் கண்டதும் விரைந்து வருவான் என்பது குறிப்பு.
நெல்லருந்திய யானை கவலைகெடத் துயிலு மென்றது காதலனொடு இன்ப நுகர்ந்து நீயும் கவலையழிவாய் என்னும் குறிப்பாக ஆற்றுவிக்கிறாள் தோழி.

சங்க காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சிறந்த பல தனிப்பாடல்களை, தொகுப்புக்களை இப்பெண்பாற் புலவர்கள் தமிழ் உலகுக்கு ஈந்தபோதும் அவர்களின் இயற்பெயர் அத்தொகுப்புக்களிலோ, தனிப்பாடல்களிலோ ஈண்டு குறிப்பிடப்படவில்லை என்பது இலக்கியங்களை ஆராச்சியாளர் கூறும் கருத்து.
அழகும் கற்பனையும் நிறைந்த இப்பாடலை சுவைப்போம். மகிழ்வோம்.

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பாற் போல் நற்றிணை நலம் வியக்க சில பாடல்களை இங்கு கண்டோம்.
இன்னும் பல பாடல்களை பின்பு அறிவோம், சுவைப்போம்.

அடுத்ததாக குறுந்தொகையில் சில பாடல்களோடு விரைவில்…

அன்புடன்
உமா.




            

No comments:

Post a Comment