Saturday 14 April 2018

நற்றிணை 2 குறிஞ்சி


வணக்கம்
முன்பு நாம் பார்த்த பாடல் மருத நிலப் பாடல். வயல், வயலைச்சார்ந்த நிலத்தின் அழகை இரசித்தோம்.
அடுத்த பாடல் நற்றிணையில் 182 வது பாடல்.
இது குறிஞ்சி நிலத்திற்குரியது. மலையும் மலைச்சார்ந்த இடமும் – சற்றே சுற்றி வருவோம் வாருங்கள்...
    
நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 
    
ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் 
    
பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 
    
சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள் 
கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 
    
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 
    
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 
    
கீழும் மேலும் காப்போர் நீத்த 
    
வறுந்தலைப் பெருங்களிறு போலத் 
தமியன் வந்தோன் பனியலை நிலையே. 

தலைவன் மணம்புரிந்துகொள்ள காலம் நீட்டித்தமையால் தலைவி வருந்துவதறிந்த தோழி, இரவுக்குறிக்கண் வந்த தலைவன் அறியுமாறு கூறுவதாக அமைந்த பாடல்.

தோழி ! நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 
தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது;

ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின்
ஓவியம் வரைந்தாற் போன்ற அழகிய அகன்ற இடங்கொண்ட வீட்டில்

பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 
சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள்
அழகிய பெண்ணான உன்னை, சிறந்த செல்வம் போல் காக்கும் தாயும் உறங்கிவிட்டாள்.

கீழும் மேலும் காப்போர் நீத்த 
வறுந்தலைப் பெருங்களிறு போலத் 
தமியன் வந்தோன் பனியலை நிலையே. 

கீழிருந்து தன்னை நடத்துவோரும், மேலமர்ந்து தன்னைச் செலுத்துவோரும் இல்லாது தனித்து வந்த சிறிய தலையினைக்கொண்ட பெரிய களிறினைப் போல் தனித்து வந்துள்ளான் தலைவன். நீ வருந்த வேண்டாம்.

கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 

கீழே விழுந்து இழந்து போன நல்ல அணிகலன் கிடைத்ததைப் போன்று மகிழ்ச்சியைத் தரக்கூடிய அவனது மார்பை சேர்ந்து மெல்ல வருவோமா, ஆராய்ந்து கூறுவாயாக!

நிலவும் மறைந்தது என்றது, களவின் கண் வருவதற்கு தலைவிக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சலையும்,
இருளும் வந்தது என்றது வழியில் தலைவிக்குண்டாகும் துன்பத்தையும் மறைமுகமாக எடுத்துக்கூறி மணமுடிக்க விரைவுப்படுத்துகிறாள்.

களிற்றானையோடு தலைவனை ஒப்பிட்டமை பெருமிதம் கருதியமையும், அவனைக் காணுதல் தொலைத்தப் பொருளை மீண்டும் அடைந்தால் வரும் இன்பத்தை போன்ற இன்பந்தரும் என்பது தலைவன் பால் கொண்ட அன்பினையும் உணர்த்தும்.
என்றாலும் காப்போர் நீத்த களிறு என்றதனால், தன்னை வழி நடத்துவோரில்லது, மணமுடிக்க காலம் நீட்டிக்கின்றான் என்பதையும் மறைமுகமாக எடுத்துணர்த்துகிறாள்.

ஓவியத்தைக் குறிக்கும் ஓவம் என்ற சொல் சங்க இலக்கியதில் பல இடங்களில் பயிலபட்டுள்ளது. ஓவியம் தீட்டப்பட்ட சித்திர மாடங்களும், அந்தபுரங்களும் இருந்ததை எல்லாம் சங்க இலக்கியங்களிலிருந்து நாமறியலாம்.

அடுத்த பாடல் குறிஞ்சி நிலத்தின் வளத்தை அழகாக கட்டும்

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை 
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் 
திரையணற் கொடுங்கவுள் நிறைய முக்கி
வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தையூ ணிருக்கையில் தோன்று நாடன்
வந்தனன் வாழி தோழி யுலகங்
கயங்கண் அற்ற பைதறு காலைப்
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே.
இதன் பொருள்
தோழீ! மலைப்பக்கத்தில் கொடிச்சியால் காக்கப்படுகின்ற பசிய பயிரை அறுப்பதற்கு முன்பாகவே பறித்து கொய்து கொண்ட பெண்குரங்கானது, பாய்தலன்றி அறியாத ஆண்குரங்கினோடு நல்ல மலை மீதேறி, மழைப்பெய்த்தனால் தன் முதுகு புறம் நனைந்தவாறு அமர்ந்து அப்பயிரை கயக்கி தூய்மையாக்கி தன் கவுள் நிறைய உண்டவாறு இருப்பது, தை நோன்புடையவர் நீரில் குளித்த ஈரத்துடன்,உணவை உண்பது போல இருக்கிறது.
அத்தகைய நாட்டைச் சேர்ந்த உன் தலைவன், உலகத்துக் குளங்கள் வரண்டுபோய், ஈரமில்லாமல்,உலர்ந்து வாடும் இளம் நெற்கதிர்களுக்கு நடு இரவில் மழை பொழிவது போல, மிகுந்த இன்பந்தரும் திருமணச் செய்தியுடன் வந்தான்! அவன் வாழ்க! என்பதாம்
தினைக் கதிர்களை மந்தி, கடுவனுடன் உண்பதுபோல, தலைவி மகிழ்வுடன் தலைவனுடன் திருமணம் செய்துகொண்டு மனையறம் புரிவாள் என்பது உள்ளுறை உவமமாக கூறப்பட்டுள்ளது.
பயிற் முற்றும் காலமே, பெண் கொள்ளும் காலம் என்பது பண்டைய மரபு. இப்படி மிக அழகாக இயற்கையோடு இயைந்த மக்கள் வாழ்க்கையையும் மரபையும் பண்பையும் சங்க இலக்கியங்களிலிருந்து நாமறியல்லாம்.

அறிவோம், சுவைப்போம்
அடுத்து ஒரு நெய்தல் நில நற்றிணை பாடலுடன் விரைவில்..
அன்புடன்
உமா

No comments:

Post a Comment