Wednesday 18 April 2018

நற்றிணை 4, முல்லை

முல்லை : காடும் காடு சார்ந்த நிலமும், கார் காலமும் மாலை நேரமும் முல்லைக்குரியது.
வினைமுடித்து மீளும் தலைவன், தலைவியை காணும் அவாவினால், விரைந்து தேர் செலுத்துமாறு பாகற்கு சொல்லியது.

இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப்
புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப்
பொன்னெனக் கொன்றை மலர மணியெனப்
பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக்
கார்தொடங் கின்றே காலை வல்விரைந்து
செல்க பாகநின் தேரே உவக்காண்
கழிப்பெயர் களரில் போகிய மடமான்
விழிக்கண் பேதையொடு இனனிரிந் தோடக்
காமர் நெஞ்சமொடு அகலாத்
தேடூஉ நின்ற இரலை ஏறே.

பாக! இலை இல் பிடவம் ஈர் மலர் அரும்ப –
பழுத்து உதிர்ந்ததாலே இலைகளில்லாத பிடாவெல்லாம் (பிடவு - ஒரு காட்டுச் செடி) மெல்லிய மலர்கள் நிறையும்படி அரும்பு தோன்றியிருக்க
புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப் –
  
 
புதர்மேலேறிப் படர்கின்ற முல்லைக்கொடியில் பூக்கள் மலர்ந்திருக்க
கொன்றை பொன் என மலர –
 
கொன்றைகள் அனைத்தும் பொன்போல மலர்தலைச் செய்ய
Memecylon umbellatum (Ironwood).JPG
காயாங் குறுஞ்சினை மணியெனப் பன்மலர்க் கஞலக் –
நீலமணி போலப் பலவாய மலர்களையுடைய காயாவின் குறுமையாகிய கிளைகள் விளங்கி நிற்ப 
(காயா என்பது ஒரு வகை மரம். அதன் பூ காயாம் பூ நீலநிறமானது. காயான் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பூவைப் பாருங்கள் - மணியென பன்மலர் கஞல - எவ்வளவு அழகாக காயாம் பூவை நம் முன்னே காட்டியிருக்கிறார் பாடலாசிரியர்)

காலை கார் தொடங்கின்று –
இப்படிப்பட்டப் பொழுதில் மேகம் தான் மழைபெய்யுந் தொழிலைத் தொடங்கியது கண்டாய்;
இங்கு காலை என்பது காலை வேளையையல்லாது காலத்தைக் குறிப்பதாகும். முல்லையின் சிறு பொழுது மாலை. காலையல்ல என்பதனால் காலம் என்றே கொண்டு கார் பருவம் துவங்கியது என்பதே சிறப்பு.
கழிப் பெயர் களரில் போகிய மடமான் விழிக்கண் பேதையொடு இனன் இரிந்து ஓட – 
Image result for மான் குட்டி   deer
(இத்தளத்திலுள்ளப் படங்கள் பல்வேறு இணைய பக்கங்களிலிருந்து எடுத்தாளப்பட்டது.)
கழிந்து பெயர்கின்ற களர்நிலத்திலே சென்ற பிணைமான் மருண்டு விழித்தலையுடைய கண்களையுடைய தன் குட்டியோடு கூட்டத்தினின்று இரிந்தோடுதலும்
காமர் நெஞ்சமொடு அகலாத் தேடூஉ நின்ற இரலை ஏறு உவக்காண் –
அதன்பால் உற்ற விருப்பமிக்க நெஞ்சத்தோடு சென்று தேடிநின்ற ஆண்மானை உவ்விடத்தே பாராய்
நின் தேர் வல் விரைந்து செல்க –
ஆதலின் நின்தேர் மிக விரைந்து செல்வதாக!

கார்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் வினைமுடிந்து திரும்புகிறான். வழியில் கொன்றையும், முல்லையும் பிலவும் பூத்திருக்கின்றன. மழையும் பெய்யத்துவங்கி கார்கால வரவை அறிவுறுத்துகின்றது. தலைவன் தன் சொல் பழுதறாவண்ணம் விரைந்து சென்று தலைவியைக்காண விழைகிறான்.
இங்கு மலர்கள் மலரும் நிலைக்கு அரும்ப, அவிழ, மலர என தமிழுக்கே உரிய சிறப்போடு கையாண்டிருப்பது எண்ணி மகிழ தக்கது.
தன் தேர்பாகனை அழைத்து பாக! உவக்காண் , மருண்டு விழிக்கும் கண்களைக்கொண்ட தன் குட்டிகளோடிருக்கும் பெண்மானைத் தேடி நிற்கும் ஆண்மானைப் பார், உன் தேரை விரைந்து செலுத்துவாயாக! என்கிறான்.
அருகில் இருப்பது இங்கே என்றும், சேய்மையிலிருப்பதை அங்கே என்றும், அருகிலும் இல்லாது தொலைவிலுமில்லாது இரண்டிற்கும் இடையே இருப்பதை உவன் என்பதும் தமிழ் சுட்டெழுத்துகள்.
தேர் செல்லுதலால் மான் அருகில் இருக்காது. மிகத்தொலைவிலிருந்தால் ஆண்மான் மருண்ட விழிக்கொண்ட குட்டிகளோடுள்ள பெண்மானைத் தேடி நிற்பதை காணமுடியாது. எனவே மான் அவர்கள் காணும் வகையிலிருந்தது என்பதாகும்.
தலைவன், பாகனே ஆண்மான் பெண்மானையுங் குட்டியையுந் தேடி நினறதனைப் பார். எனவே யான் என் காதலியையும் புதல்வனையுங் காண மிகவிருப்பமுடையேன் எனப் பிறிதொன்றன் மேல்வைத்து அறிவுறுத்துவதாய் அமைந்துள்ளது பாடல்.
மடமான் விழிக்கண் பேதையொடு
என்று விழிக் கண்பேதை என மான்குட்டிக்குக் கூறிய அடைச்சிறப்பால் ஆசிரியர் பெருங் கண்ணனார், விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் என அறியப்படுகிறார் என்பது சிறப்பு.

வினை முடிந்தது, கார்காலம் துவங்கி உள்ளது. தலைவனோ தலைவியை காணும் அவாவிலுள்ளான். கார்காலம் துவங்கியதைக்கண்ட தலைவியும் அவனுக்காக காத்திருப்பாள். ஆண்மானும் அன்போடு பெண்மானைத் தேடி நிற்கும். மலர்கள் பூத்து குலுங்கும் இக்கானகத்தை தாண்டி அவர்கள் தேர் செல்லட்டும்…
நாமும் இம்முல்லை நிலம் விட்டுச் செல்ல மனமில்லாமல் மீளுவோம், பாலையில் சந்திப்போம்.
விரைவில்…
அன்புடன்
உமா.

No comments:

Post a Comment