Sunday 2 December 2018

பத்துப் பாட்டு - பொருநறாற்றுப்படை


பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவாலானது. இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.

பொருநன் என்பவன் யாழை மீட்டிக்கொண்டும், பாடும் பாடலின் கருத்து புலப்படுமாறு நடித்துக் கொண்டும், யாழின் பண்ணிசைத் தாளத்திற்கேற்பக் காலடித் தாளம் போட்டுக்கொண்டும் ஆடுபவன், அன்றியும் பறை முழக்கும் கூட்டத்தவனாகவும் காணப்படுகிறான்.

அவனது யாழின் சிறப்பு இப்பாடலில் மிக அழகாக காட்டப்பட்டுள்ளது.



பந்தல், பச்சை, வயிறு, போர்வை, ஆணி, வறுவாய், திவவு, வேய்வை, நரம்பு, தொடையல் முதலான உறுப்புகளுடன் யாழ் எவ்வாறு கவர்ச்சியாக அமைந்திருந்தது என்பது முதலில் கூறப்படுகிறது. பந்தல் பிளவுபட்ட குளம்பு போல் இருந்தது. பச்சை எரியும் விளக்கின் சுடர் போல் இருந்தது. வயிறு நிறைமாதத் தாயின் வயிறு போல் இருந்தது. போர்வை யாழின் வயிற்றில் போர்த்தப்பட்டிருந்தது. அது சூலுற்ற திருமகளின் வயிற்றில் மென்மயிர் ஒழுகியது போன்ற பொன்னிற வெல்வெட்டுத் துணியாலான போர்வை.. ஆணி வலையிலுள்ள நண்டுக்கண் போல் இருந்தது. அது அடிக்கப்பட்ட துளைவாயை மூடி தூர்த்துக் கிடந்தது. வறுவாய் எட்டாம் நாள் தோன்றும் குறைவட்ட நிலாவைப் போல் இருந்தது. திவவு பாம்பில் படுத்திருக்கும் மாயோன் கைவளையல் போல் இருந்தது. வேய்வை இது நரம்பில் உளரும்போது விரலில் அணியும் கவசம். அது தினையரிசி அவியல் போன்றது. நரம்பை நெருடும் நுனியை உடையது. தொடையல் நரம்பானது யாழில் தொடுக்கப்பட்டிருக்கும் பகுதி. இதன் இடத்தைப் பொறுத்துத்தான் யாழின் கேள்வியிசை பிறக்கும். மொத்தத்தில் யாழானது பூப்பு மணம் கமழும் பெண்ணை நீராட்டி அணங்கு (அழகு) செய்து வைத்திருப்பது போல் பொலிவுற்றிருந்தது.



வழியில் செல்லும்போது பொருநன் இத்தகைய யாழை மீட்டிப் பாடிக்கொண்டு செல்வான். அப்போது பாலைப்பண் பாடுவது வழக்கம்.

பாடினி பொருநனின் மனைவி. அவளும் அவனோடு சேர்ந்து ஆடுவாள். இங்குள்ள பாடலடிகள் வழிநடை மேற்கொண்டிருந்த பாடினியின் பொலிவைப் புலப்படுத்துகின்றன.

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்    25
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின்    30
நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத்  35
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்    40
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்    45
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி

அவள் கூந்தல் ஆற்றுமணல் படிவுபோல் நெளிநெளியாக இருந்தது நெற்றி பிறைபோல் இருந்தது. புருவம் கொல்லும் வில்லைப்போல் வளைந்திருந்தது எனினும் கடைக்கண்ணில் மழைபோல் உதவும் கொழுமை இருந்தது. வாய் இலவம் பூவின் இதழ்போல் சிவந்திருந்தது. அதிலிருந்து இனிய சொற்கள் மலர்ந்தன. வெண்பற்கள் முத்துக் கோத்தாற்போல் இருந்தன. பல்வரிசை பழிக்க முடியாதவாறு ஒழுங்காக இருந்தது. காதுக்குப் பாரமாகக் குழை ஊசலாடிக் கொண்டிருந்தது. குழை மயிர் வெட்டும் கத்தரிக்கோல் போலக் காதில் தொங்கியது. அவளது நாணம் காண்போரை அழித்துக் கொண்டிருந்தது. அதற்காகவோ, அதனாலோ அவளது கழுத்து ( எருத்து ) குனிந்திருந்தது. பருத்த தோள் வளைந்தாடும் மூங்கிலைப் போல் இருந்தது. முன்கையில் பொசுங்கு மயிர்கள் முடங்கிக் கிடந்தன. மென்மையான விரல்கள் மலையில் மலர்ந்த காந்தள் மலர் போன்றவை. விரலில் ஒளிரும் நகம் கிளியின் வாயைப் போல் குழிவளைவு கொண்டது. கிளியின் வாயைப் போல் சிவந்தும் இருந்தது. நெஞ்சிலே பொன்னிறப் பொலிவு இருந்தது. ஈர்க்கும் இடை நுழைய முடியாதபடி மார்பகங்கள் இணைந்திருந்தன. அவை எடுப்பான மார்பகங்கள். வயிற்றிலிருந்து கொப்பூழ் தண்ணீர் சுழலும் சுழிபோல் இருந்தது. அசைந்தாடும் இடை உண்டோ என்று எண்ணும்படி இருந்தது. அல்குல் துணியின் மேல் வைரமணிக் கோவை (காழ்) இருந்தது. யானைக்கு இரண்டு துதிக்கை இருப்பதுபோல் கால் தொடைகள் காலில் பொருந்தி ஒழுகும் மயிர். இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப்போல் மென்மையான காலடிகள். அரக்கை உருக்கி வைத்திருப்பது போன்று பொடிசுடும் செந்நிலத்தில் அவள் ஒதுங்கி ஒதுங்கி நடந்து செல்கிறாள். அப்போது பருக்கைக் கற்கள் தன்னை மிதிக்கிறாளே என்று அவளுக்குப் பகையாகிக் காலில் உருத்துகின்றன. அந்தத் துன்பத்தோடு சேர்ந்து அவளது காலடியில் நீர்க்கொப்புளங்கள் போட்டுவிடுகின்றன. அவை கானல் நீரின் பழங்கள் போல் உள்ளன. அதனால் அவளுக்காக அவர்களின் குழு நண்பகல், அந்தி வேளைகளில் நடந்து செல்வதில்லை. காலை வேளைகளில் பெண்மயில் போல் ஆடாமலும், அலுங்காமலும் பதனமாக நடந்து சென்றனர்.

யாழின் சிறப்பை எடுத்துரைக்கும் போதும் பாதாதி கேசம் பாடினியின் அழகை கூறும் பொழுதும் அழகான உவமைகள் கற்பித்து கூறியிருப்பது அறிந்து மகிழ தக்கது.

ஆற்றுப்படுத்துதல்

கோடியல் தலைவ, உன் சுற்றத்தார் அடித்துத் தின்னும் பசியால் வருந்துகின்றனர். அந்த நீண்ட நாள் பசியைப் போக்க விரும்பினால் காலம் தாழ்த்தாமல் நான் சொல்லும் இடத்திற்குச் செல்ல எழுக ! வாழ்க! என்று ஆற்று படுத்தும் போது

கரிகாற் பெருவளத்தானின் விருந்தோம்பலை இவ்வாறு கூறுகிறார்…

கரிகாற் பெருவளத்தானின் அரணமனை வாயிலுக்குள் பரிசிலர் நுழைந்து வேண்டுவன சொல்ல முற்படும் போதே அவர்களை பேணத் தொடங்கி விடுகிறான் என்கிறார். அன்றியும்,

கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக்       75
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த     80
துன்னற் சிதாஅர் துவர நீக்கி

அவன் எனக்கு உறவினன் அல்லன். என்றாலும் என்னை உறவு கொள்வதற்காக விரும்பி வந்தான். வேளாண் வாயிலுக்கு வந்து எங்களை வரவேற்றுப் பலர் முன்னிலையில் பலரும் விரும்புமாறு எங்களைத் தன் நண்பர்கள் என்று கூறிக்கொண்டான். பலரும் காணுமாறு தான் விரும்பிய இடத்தில் எங்களை இருக்கச் செய்தான். சற்றும் குறையாத ஆசையோடு எங்களை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். எங்களது துணிமணிகளில் ஈரும் பேனும் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்தன. வியர்வையால் நனைந்ததைத் துவைத்து உடுத்தாமையால் விளைந்த பலன் இது. கிழிந்துபோயிருந்த அதனையும் வேறு நூல்கொண்டு தைத்து உடுத்தியிருந்தோம். புத்தாடை நல்கிப் பழைய ஆடைகளை முற்றிலுமாகக் களையச்செய்தான் என்கிறார்.
மேலும்
……
றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
……
பொருந! கரிகாலன் காலடி நிழற்பகுதிக்குச் செல்வீராயின்பசு அப்போது போட்ட கன்றை நாவால் நக்கித் தெம்பு ஊட்டுவது போல, அவன் உங்களை விரும்பிப் போற்ற முனைவான்.

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் 245
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே

கரிகாலன் வெற்றிவேல் வேந்தனாகப் பகைமன்னர் நடுங்க ஆட்சி புரிந்துவந்தான். பகல் தரும் சூரியன் போல் அறத்தையும் தோழமையையும் பரப்பிக்கொண்டு ஆண்டுவந்தான்.

இப்படி கரிகாற் பெருவளத்தானின் கொடை மற்றும் வீரம் பற்றி பேசுகிறது பாடல்.

மேலும்

முல்லை நிலத்தில் முல்லைப் பூக்கள் கரிந்து போகவும், மலைகள் தீப்பற்றி எரியவும், மலையருவிகள் வறண்டுபோகவும், மேகத் தொகுதி கடல்நீர் மொண்டுசெல்வதை மறந்துபோகவும் பெரியதோர் வறட்சி எய்திய காலத்திலும் காவிரியில் வெள்ளம் வரும். நறை, நரந்தம், அகில், ஆரம் முதலான மரங்களைக் கருவாகக் கொண்டு சுமந்துவந்து காவிரித்தாய் துறைகண்ட இடங்களிலெல்லாம் கருவுயிர்த்துச் செல்வாள். நுரை பொங்க ஓசையுடன் காவிரி பாயும்போது மகளிரின் புனலாட்டு நிகழும். உழவர் கூனியிருக்கும் அரிவாளால் வயலில் நெல் அறுக்கவும் கட்டுக் கட்டிக் களத்தில் மலைபோல் குவிக்கவும், குறைவில்லாத நெற்குப்பையை மூட்டைகளாகக் கட்டி ஆங்காங்குள்ள பாதுகாக்கும் இடமெல்லாம் கிடத்தி வைக்கவும், சாலி என்னும் நெல் சிறை வைக்கப்பட்டுக் கிடக்கும் பாதுகாப்பு மிக்க வேலிதான் காவிரி புரக்கும் நாடு. ஒருவேலி நிலத்தில் ஆயிரம் மூட்டை நெல் விளைச்சல் காணும் வளமுள்ளதாகக் காவிரியாறு அந்தாட்டைப் புரந்துவந்தது. அந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன்தான் சோழன் கரிகாற் பெருவளத்தான்.

என்று காவிரி ஆற்றின் வளம் சொல்லி முடிகிறது பெருநறாற்றுப்படை.

மனத்தில் பெரும் ஏக்கத்தை விதைத்து…

எங்கே அந்த காவிரியாறு, எங்கே அந்த வளம். இன்று மழையில்லாமல் நீரில்லாமல் வறண்டு, விவசாயிகளின் மரணம் நிகழ்கையில் எவ்வளவு துயரங்கள்…..

இயற்கையினின்று வெகுதூரம் தகர்ந்து வந்துவிட்ட நம் வாழ்க்கை முறையை மீண்டும் புதுப்பிப்போம். இனிவரும் தலைமுறைகள் நலம் வாழ……பிரார்த்தித்தப்படி

அடுத்த பதிவுடன், விரைவில்..

அன்புடன்
உமா




No comments:

Post a Comment