Monday 24 December 2018

சிறுபாணாற்றுப்படை


சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டுள் மூன்றாவது நூலாக இடம் பெற்றுள்ளது. இஃது ஆசிரியப்பாவால் ஆனது. 269 அடிகளைக் கொண்டது. குழல், யாழ் முதலான இனிமையான இசை தரும் கருவிகளை இசைப்பதில் (வாசிப்பதில்) திறம் பெற்றவர்களைப் பாணர் என்பர்.

மிடற்று வழியாக (குரல் வழியாக-வாய் வழியே) இன்னிசையை இசைப்பவர் (பாடுபவர்) இசைப்பாணர் ஆவர்.

யாழ் என்னும் இசைக்கருவியை இசைப்பதில் திறம் பெற்றவர்களை யாழ்ப்பாணர் என்பர்.

யாழ்ப்பாணர்களுள் பெரிய யாழை இசைப்பவர் பெரும்பாணர், சிறிய யாழை இசைப்பவர் சிறுபாணர்.

சிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். பாட்டுடைத் தலைவன் நல்லியக் கோடன்.

நல்லியக்கோடன் என்பவன் ஒரு சிற்றரசன். இவனைப் புகழ்ந்து பாடிய சிறுபாணன் ஒருவன் பரிசு பெற்று வருகிறான். இவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு சிறுபாணனை இம்மன்னனிடம் சென்று பரிசுபெறும் வகையில் நெறிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஒரு சிறுபாணன் வேறு ஒரு சிறுபாணனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.
பாணர்கள் வறுமைத் துன்பத்தில் தவிக்கின்றனர். அவர்களது துன்பத்தை மேலும் அதிகப்படுத்துவதாகப் பாலை நிலத்தின் இயல்புகள் உள்ளன. பாணர்களின் நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள துன்பத்தை மிகுதிப்படுத்திக் காட்டும் வகையில் பாலைநிலப் பின்னணியைப் புலவர் நத்தத்தனார் அமைத்துள்ளார்.

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று

நிலத்தைப் பெண்ணாகப் புலவர் உருவகம் செய்கிறார். அவள் மூங்கில் ஆகிய தோள்களை உடையவள். மலையில் இருந்து வீழும் அருவியே அவள் மார்பகத்தின் மேல் கிடக்கும் முத்துமாலை. அருவி, மலையைவிட்டு இறங்கி அருகில் உள்ள காட்டிற்குள் நுழைகிறது. பிறகு காட்டாறாக மாறுகின்றது.  இது கார்காலக் காட்சி.

ஆனால் இப்பொழுது கார் காலம் முடிந்து விட்டது. வேனில் காலம் தொடங்கி விட்டது. இக்காலத்தில் குறிஞ்சி மற்றும் முல்லை நிலக்காட்சி மாறுகிறது. மலையில் அருவிகள் இல்லை. காட்டாற்றில் நீர் இல்லை. அதனால் குயில்கள் பூம்பொழிலில் நுழைந்து விளையாடுகின்றன. தம் அலகால் பூக்களைக் கொத்துகின்றன. பூக்கள் உதிர்ந்து கரிய நிறத்தில் உள்ள ஆற்று மணற் பரப்பில் கிடக்கின்றன.

இத்தகைய மணல் பரப்பு வெப்பத்தால் சூடாகிக் கிடக்கிறது. அம்மணலில் கிடக்கும் பரல் கற்களும் (பருக்கைக் கற்கள் - சிறிய கற்கள்) வெப்பத்தால் சூடாகிக் கிடக்கின்றன. வெப்பம் மிகுந்த மணலும், பரல் கற்களும் அவ்வழியாக நடந்து செல்லும் பாணர்களின் கால்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தருகின்றன. இப் பாலை நில கொடுமையை

வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப….

காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப

என்ற வரிகளில் அழகாகக் காட்டுகிறார். பொதுவாக நண்பகல் சூரியனே மிகவும் சுடும். ஆனால் வேனிற் காலத்தில் காலைக் கதிரவனும் வெப்பம் மிகுதியாக செய்கிறது.

அடுத்த சில வரிகளில் விறலியரின் கூந்தல் (முடி) முதல் பாதம் (அடி) வரை புலவர் நத்தத்தனார் வருணனை செய்துள்ள அழகு நயமாக உள்ளது.

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்   15
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என   20
மால் வரை ஒழுகிய வாழை வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி  (13-22)

ஐது வீழ் இகு பெயல்
உலகிற்கு அருள் செய்ய வல்ல, மெல்லியதாய் வீழ்கின்ற மழையைப் போன்ற அழகு உடைய கருமையான கூந்தல்.
மென்மெய்யாக வீழ்கின்ற மழை, அருள் செய்கின்ற மழை போன்று அவள் கூந்தல் இருக்கிறதாம்.

இங்கு ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 3ம் பாடலில்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஎன்று தீங்கில்லாமல் பெய்யும் மழை கூறப்பட்டுள்ளது நோக்குதற்குரியது.
கெடுக்கும் மழையை நாமறிவோம் அல்லவா?

விறலியரின் கூந்தலை மழை மேகம் என்று மயில்கள் நினைத்தன. அதனால் மகிழ்ச்சியாகத் தம் தோகையை விரித்து ஆடின. அவர் கண்கள் நீலமணி போன்றவை. எயிறு என்றால் பல். நுங்கின் இனிய நீர் போன்று சுவையை உடையதாக எயிற்று நீர் அமைந்துள்ளது. ஓடி இளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கைப் போன்ற பாதம். சிலம்பு முதலிய அணிகலன்கள் ஏதும் இன்றி அழகற்று இருக்கிறது. இப்படி கேசாதிபாதம் விறலியரின் அழகு வர்ணிக்கப்படுகிறது. வருமையும் காட்டப்படுகிறது.

இத்தகு அழகு வாய்ந்த விறலியரின் மென்மையான இயல்பையும் புலவர் குறிப்பிடத் தவறவில்லை. விறலியர், முல்லை சான்ற கற்பும், மெல்லியல்பும், மான் நோக்கும், வாள் (ஒளி பொருந்திய) நுதலும் உடையவர் என்பதை,

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
என்னும் அடிகள் சுட்டுகின்றன.

இங்கு பாடினியின் அழகுக்கு புலவர் காட்டும், அடுக்கி வரும் உவமை, அடுக்குவமை புதுமையானதும் அறிந்து மகிழத்தக்கதுமாகும்.

மழை போல் கதுப்பு
கதுப்பு போல் மயில்
மயில் போல் சாயல்
சாயல் போல் நாய்நாக்கு
நாய்நாக்கு போல் (கால்)அடி
அடிதோயும் யானைக்கை போல் குறங்கு (கால்தொடை)
குறங்கு போல் உயரும் வாழை
வாழைப்பூ போல் ஓதி (கொண்டை)
ஓதி போல் பூக்கும் வேங்கை
வேங்கைபு பூ உதிர்ந்து கிடப்பது போல் மேனியில் சுணங்கு
சுணங்கணிந்த கோங்கம் பூ போல் முலை
முலை போல் பெண்ணை (பனங்காய்)
பெண்ணை நுங்கு போல் வெண்ணிற எயிறு (வெண்பல்)
எயிறு போல் குல்லைப்பூ
குல்லை போல் முல்லை
முல்லை சான்ற கற்பு
இப்பாணர்கள் வறுமைக் காரணமாக விரலியருடன் தமக்கு யாரேனும் உதவமாட்டார்காளா என்று எண்ணியவாறு பாலை நிலம் தாண்டி இரவல் பெறும் நோக்கோடு போகிறார்கள்.

இவர்களுக்கு நல்லியக் கோடனிடம் பரிசில் பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் பெற்ற வளத்தையெல்லாம் சொல்லி அவனிடம் சென்று வேண்டியதைப் பெருக என ஆற்றுப்படுத்துகிறான்,

கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
………
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று    50

என்ற வரிகளில் வஞ்சி நகரின் வளம் காட்டப்படுகிறது. இப்படி வளமான வஞ்சி நகரம் வறியது என்றென்னும் படி வழங்குவான் நல்லியக் கோடன்

அடுத்ததாக மதுரை நகரின் வளம் கூறுகையில்

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று..

தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்.

……….ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்   80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று

நற்றேர் செம்பியன் தூங்கெயில் கோட்டையை வென்று அதன் அடையாளமாகத் தன் கையில் காப்புத்தொடி அணிந்துகொண்டான். அந்தத் தூங்கெயில் ஓங்கி உயர்ந்த கதவினைக் கொண்டது. மேகம் அந்தத் தொங்கும் கோட்டையில் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும் அளவுக்கு அந்தக் வானளாவ உயர்ந்து தொங்கியது. அதனைக் கைப்பற்றிக்கொண்ட செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர். இங்கு தூங்கு எயில் எறிந்த என்பதில் சிவன் திரிபுறம் எரித்தது கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக கடையேழு வள்ளல்களின் கொடைத்திறன் போற்றப்படுகிறது. இந்த ஏழு பேர் இழுத்துச் சென்ற ஈகை என்னும் தேரை இழுக்கும் நுகத்தை நல்லியக்கோடன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் என்று பாடல் வளர்கிறது. அதாவது, அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் இருந்த ஒரே ஒரு வள்ளல் இவன் மட்டுமே எனப் போற்றப்படுகிறான்.

கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா   115

நல்லியக்கோடனை விரும்பி அவனிடம் முன்பொரு காலத்தில் நானும் எனது சுற்றத்தாரும் சென்றோம். அவனைப் புகழ்ந்து பாடினோம். அவன் எங்களது தகுதியை எண்ணிப் பார்க்கவில்லை. மாறாகத் தன்னுடைய தகுதியை எண்ணிப் பார்த்தான். தன் தந்தை தனக்கு வைத்துவிட்டுச் சென்ற வானளாவிய மலைபோன்ற செல்வத்தை அளவிட்டுக் கொண்டான். வழங்கினான்.

அன்று எங்கள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அதை மாற்றுவானாய் நல்லியக்கோடன் கன்னத்தில் கண்ணின் மதம் வழியும் யானையைப் பரிசாகத் தந்தான். அஞ்சாமைக் குணம் பூண்டிருக்கும் யானையைத் தந்தான். யானையோடு தேரும் தந்தான். இப்போது நாங்கள் செம்மாப்போடு யானைமீதும் தேர்மீதும் வந்து கொண்டிருக்கிறோம். நீங்களும் இங்கு வருந்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உங்களது சுற்றத்தாரோடு செம்மாந்த உள்ளம் கொண்டு அவனிடம் செல்லுங்கள்

என்றும், செல்லும் வழியிலுள்ள வேலூர் அழகும் ஆமூர் அழகும் சொல்லி நல்லியக் கோன் அவையில் வீற்றிருக்கும் அழகையும் அவன் குணமும் விவரித்துக்கூறி அவனிடம் நீங்கள் விரும்பிச் சென்றால் உங்களது வாழ்க்கையானது வளம் பெறத்தக்க வகையில் பரிசில் பெறுவீர்கள். போகும்போது நடந்து செல்லும் நீங்கள் வரும்போது தேரில் வருவீர்கள் என்று ஆற்றுப்படுத்துவதாய் அமைகிறது சிறுபாணாற்றுப்படை. இப்பாடலில் சிற்றரசனின் ஈகை குணம் அழகாக காட்டப்பட்டுள்ளது.

அடுத்த பதிவோடு விரைவில்
அன்புடன்
உமா

1 comment: