Sunday 9 September 2018

கலித்தொகை 3


கலித்தொகையில் நெய்தல் நிலத்திற்குரிய 118 பாடல் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி மாலை நேரம் வரக்கண்டு அதனோடு வருத்தம் கொண்டு புலம்பி கூறுவதாய் அமைந்துள்ளப் பாடல் இது. இங்கு மாலை நேரத்தை மிக அருமையாக காட்டியிருப்பார் புலவர்.

வெற்றிப் புகழ் கொண்ட அரசன், முறைத்தவறாது அரசாண்டு உயிர்களைக் காத்து பின் தன் வினைப்பயன் துய்ப்பதற்காக துறக்க வாழ்வை விரும்பி ஏற்றதைப் போல் சூரியன் காலை எழுந்து உயிர்களுக்கெல்லம் நன்மை செய்து மேற்கு மலையில் மறைகிறது.
நல்லாட்சி செய்த மன்னவன் இறந்ததும் மக்களின் வருத்தம் போகுமாறு அவன் வழி வந்த அரசன் அரசேற்று மக்களுக்கு நன்மை செய்ய வருவது போல் நிலவானது வருகிறது.
ஆண்ட அரசனுக்கும் அரசாள வருவோனுக்கும் இடைப்பட்ட துன்பம் மிகுந்த காலம் போல சூரியன் மறைவதற்கும் நிலவு தோன்றுவதற்கும் இடைப்பட்ட இம் மாலைக் காலம் தலைவிக்கு மிகுந்த துன்பம் தருவதாக இருக்கிறதாம்.

வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அற, தான் செய்த
தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல்
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர,
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன்
ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்ப,
குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை!

இம்மாலைக் காலத்தை விளித்து

மாலைக் காலமே! எனக்குப் பற்றுக்கோடு இல்லாமல் என்னைத் துறந்தவரை நினைத்திருப்பதால் குளத்தில் பூக்கும் பூவைப் போல குவிந்து வாடும் என் மேனி நலத்தை எள்ளி நகைக்கிறாய். மரத்தில் பூத்த மலர் கட்டவிழ்வது போல காதலரைப் புணர்து களிப்பவரின் அழகினை உன்னால் ஒன்றும் செய்ய முடியாதே!

மாலைக்காலமே! ‘தைஎன்னும் ஓசையுடன் கோவலர் ஊதும் குழல் இசை கேட்டுபைஎன்று நெஞ்சத்தைப் பறிகொடுத்துவிட்டு வருந்துகின்ற என்னிடம் வந்து உன் கைவரிசையைக் காட்டுகிறாய். யாழில் தோன்றும்செவ்வழிப்பண் போன்ற மொழி பேசி உறவாடிக்கொண்டு குற்றமற்ற தழுவுதலைக் கொண்டிருப்பவரிடம் உன் கைவரிசை செல்லாதல்லவா?

மாலைக்காலமே! அழகுடன் திகழும் தாழ்ந்த கிளைகளில் அமர்ந்துகொண்டு பறவைக் கூட்டம் ஆரவாரம் செய்வதைப் பார்த்து என் நெஞ்சம் என்னையே பகைப்பதைப் பார்த்து என் புன்மையைப் பாராட்டுகிறாய். காதலருடன் களித்திருப்பவர் கொடியில் முல்லை மலர் முகம் திறப்பது போல் சிரிப்பதை உன்னால் ஒன்றும் செய்ய முடியாதல்லவா.

என ஆங்கு - என்றல்லாம் சொல்லும்படி

மாலையும் அலரும் நோனாது, எம்வயின்
நெஞ்சமும் எஞ்சும்மன் தில்ல எஞ்சி,

மாலைக்காலமும் அலரும் என்னைத் துன்பம் செய்கின்றது
என் நெஞ்சமும் என்னிடம் நிற்கவில்லை.

உள்ளாது அமைந்தோர், உள்ளும்,
உள் இல் உள்ளம், உள்உள் உவந்தே

உள்ளாது அமைந்தோர் – என்னை நினக்காது விட்டார் எம் காதலர்
உள்ளும் – என்நெஞ்சோ அவரையே நினக்கிறது.
உள்ளில் உள்ளம் – என்னுள்ளே இல்லாத என் நெஞ்சம்
உள் உள் உவந்ததே – அவர் உள்ளத்தை நாடிச் செல்வதையே விரும்புகிறதே
என தலைவி புலம்புவதாக அமைகிறது பாடல்

ஒரே மாலைக் காலம் தலைவனைப் பிரிந்திருப்போருக்குத் துன்பதையும் தலைவனோடு கலந்திருப்பவருக்கு இன்பத்தையும் தருவதாக அமைந்துள்ளதை இப்பாடல் அழகாக காட்டுகிறது. மேலும் இப்பாடலின் அழகான உவமைகளும், சொல்லாடலும் படித்தின்புறதக்கன….

மீண்டும் விரைவில்

அன்புடன்
உமா

No comments:

Post a Comment