Saturday 27 October 2018

புறநானூறு



புறநானூறு என்னும் நூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை பற்றிய பாடல்களின் தொகுப்பு.  சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.

இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும்மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர்.

புறத்திணைப் பகுதியில் ஏழு திணைகள் உள்ளதாகத் தொல்காப்பியர் கூறுவார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பெயர் பெறும். அன்பின் ஐந்திணை எனப் பெறும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போலவே, இப்புறத்திணைகளும் பூக்களின் பெயரைக் கொண்டு பெயர் பெற்றிருப்பதைக் காணலாம். ‘பாடாண்’ மட்டுமே பூப்பெயரைக் கொள்ளவில்லை.

ஏழு அகத்திணைகளுக்கு இணையாக ஏழு புறத்திணைகளைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
அகத்திணைக்குரிய குறிஞ்சிக்கு - வெட்சி
முல்லைக்கு வஞ்சித் திணை புறத்திணையாகும்.
மருத ஒழுக்கத்திற்குப் புறத்திணையாவது உழிஞைத் திணையாகும்.
நெய்தலுக்குத் தும்பை என்பது புறத்திணையாகும்.
பாலை திணைக்குப் புறத்திணையாக வாகைத்திணை அமையும்.
பெருந்திணை என்னும் பொருந்தாக் காமப் பொருளுடைய அகப் புறத்திணைக்கு நிலையாமைப் பொருள் குறித்த காஞ்சித் திணை புறத்திணையாகும்.
கைக்கிளை என்னும் ஒரு தலைக் காமத்திற்குப் புறத்திணையாகப் பாடாண் திணை அமையும்.

அக்கால மக்கள் வாழ்வில் இடையர் தொழிலும், வேளாண்மையும் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆநிரைகளை கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாடின் ஆநிரைகளைக் கவருவது போரின் முதல் நடவடிக்கை. இதுவே வெட்சித் திணையாகும். ஆநிரைகளை மீட்டல் கரந்தை திணையாகும். அவ்வாறே பகையரசன் மதிலை தாக்குதல் உழிஞைத் திணை, தன் நாட்டு மதிலைக் காத்தல் நொச்சி. கரந்தை மற்றும் நொச்சித் திணைகளை தொல்காப்பியர் தனித் திணைகளாகப் பகுக்கவில்லை. ஆயின் பிற்காலத்தில் புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணைகளை 12 ஆக பகுத்து
வெட்சி, கரந்தை,வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண்,
பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனக் காட்டும்.

பொதுவியல் என்பது புறத்திணைகள் ஒன்பதிலும் வகைப்படுத்த முடியாத பாடல்களான அறம் கூறும் பாடல்களையும், அறிவு கூறும் பாடல்களையும் உள்ளடக்கியது.

புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.

அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.

இனி பாடல்களைப் பார்ப்போம்

புறநானூறு 204 வது பாடல்.

புலவர் கழைதின் யானையார் அரசன் வல்வில் ஓரியிடம் பரிசில் பெறச் செல்கிறார். வள்ளலாகிய அவனால் வழங்க இயலவில்லை. அதனால் புலவர் தான் வந்த வேளை சரியில்லை என்று நிமித்தத்தை பழித்து அவன் கொடையைப் பாராட்டுகிறார்.

'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று;
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி,
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும்,
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, 
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

ஈவாய் என இரப்பது இழிவானது. அதனினும் இழிவு ஈயேன் என மறுப்பது. கொள் எனக் கொடுத்தல் உயர்வானது. அதனினும் உயர்வு கொள்ளேன் என மறுப்பது. மிகப் பெரியதானாலும் கடல் நீரை தாகமுடையோர் உண்ணமாட்டார். ஆடும் மாடும் உண்பதால் கலங்கியிருந்தாலும் அக்குளத்தையே மக்கள் நாடிச் செல்வர். அது போல் மிகப் செல்வந்தரானாலும் ஈயாதாரை யாம் நாடிச் செல்லோம். பரிசு வேண்டிச் செல்வோர் பரிசு கிடைக்கப் பெறவில்லையென்றாலும் தனது நேரத்தையும் நிமித்தத்தையும் பழிப்பாரே அன்றி அரசனைப் பழியார். எனவே நீயின்று வறுமைக் காரணமாக ஈயவில்லை என்றாலும் இடியும் மின்னலுமாய் பெய்யும் மழைப்போல வழங்கக்கூடிய வள்ளலாகிய உன்னை நான் பழியேன். நீ வாழ்வாயாக! என்பதன் மூலம் அவன் கொடைத்திறனைப் புகழ்வது மட்டுமின்றி வாழ்வின் நல்லறமான ஈகைப் பற்றியும் கூறியிருப்பது அறியத்தக்கது.

இங்கு ஈகைக்கு ஓர் அதிகாரம் வைத்து

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

என்ற வள்ளுவன் வாக்கினை நோக்குதல் சிறப்பு.

அடுத்ததாக குடபுலவியனார் இயற்றிய ஒரு பாடல் புறநானூற்றின் 18ஆம் பாடல்

இதில் பல அறிவியல் உண்மைகளை எடுத்து இயம்புவதோடு மட்டுமல்லாமல் மன்னனுக்கு அணைக்கட்ட அறிவுரைக்கூறும் செய்தியையும் காணலாம்.

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!

1, 10, 100, 1000, 10,000, 100,000, கோடி, பத்து கோடி, 100 கோடி, 1000 கோடி

தசாம்ச முறை எனப்படும் டெஸிமல் சிஸ்ட (Decimal System) த்தைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பதை உணரமுடிகி/ரது.. நீண்ட ஆயுளோடு வாழ்வாயாக என்று அரசனை வாழ்த்துகிறார் புலவர். இன்றும் நூறாண்டு வாழ வாழ்த்துதல் மரபாக உள்ளதை நாமறிவோம்.

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;

நமது உடல் நீராலானது என்பதும், உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் என்றும் கூறுகிறார் புலவர். மணிமேகலையிலும் இக்கருத்தை நாம் காண்கிறோம். நீரின்றி அமையாதுலகு என்ற வள்ளுவன் சொல் நாமறிந்ததே.

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே;

நம் உடல் உணவாலானது. நல்ல நிலமும் நல்ல நீர்ப் பாசனமும் இருந்தால்தான் உணவு விளைச்சல் கிடைக்கும். இப்படி பல விஷய ஞானம் உள்ளவர்களாக இருந்தனர் என்பது இப்பாடலில் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் வாழ நீர்நிலைகளை உருவாக்கச் சொல்லி அறிவுறுத்தும் அறிவார்ந்த புலவரையும் இப்பாடலில் கண்டுக்கொள்ள முடிகிறது.

நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.

நிலம் நெளிந்து பள்ளமாய்க் கிடக்கும் இடங்களிலெல்லாம் நீர்நிலை பெருகும்படி தடுத்து நிறுத்தியவர் இவ்வுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் ஆவர். அவ்வாறு நீரைத் தடுத்து நிறுத்தாதவர் இவ்வுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாதார் ஆவார்.

நீ, நீர்நிலைகளைப் பெருகச் செய்து உன்னை இவ் உலகில் நிலைநிறுத்திக்கொள்க! என அறிவார்ந்த வழிகளை அறத்தோடு சொல்லும் புலவர்களைப் பற்றியும் அதை பின்பற்றி நல்லாட்சிச் செய்த அரசர்கள் பற்றியும் புறநானூறு நமக்கு காட்டுகிறது.

இன்னும் அக்கால மூவேந்தர் மற்றும் பல குறுநில மன்னர்களின் வீரம் கொடைச் சிறப்பு, அரசாட்சி மாண்பு அன்றைய வாழ்வியல் வழக்கங்கள் என பலவற்றையும் அடுத்த பதிவில் அறிந்து மகிழ்வோம்.

விரைவில் பதிவுடன்

அன்புடன்
உமா..




7 comments:

  1. பரந்த விளக்கங்கள். மிக அருமை

    ReplyDelete
  2. பரந்த விவரிப்பும் ஆழ்ந்த விளக்கங்களும்

    ReplyDelete
  3. பரந்த விவரிப்பும் ஆழ்ந்த விளக்கங்களும்

    ReplyDelete
  4. மிகவும் அருமையான விளக்கம்

    ReplyDelete
  5. மிகவும் அருமையான விளக்கம்

    ReplyDelete
  6. மிகவும் அருமையான விளக்கம்

    ReplyDelete
  7. நன்றி சார்...

    ReplyDelete